Wednesday, February 17, 2010

தேசியம் என்பது தமிழனுக்கு மட்டுமா?

அண்டை மாநிலங்களாலும், மைய அரசாலும் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து வஞ்சிக்கப் படும் ஒரே மாநிலமாகத் தமிழகம் தவித்து வருகிறது.
முதலில் ஆறுகள் தொடர்பான தகராறு. கர்நாடக மாநிலத்தோடு காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல். ஆந்திர மாநிலத்தோடு பாலாற்றுச் சிக்கல். கேரள மாநிலத்தோடு உள்ள சிக்கல்களான முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பவானி ஆகியவற்றோடு தற்போது அமராவதி அணையின் பாம்பாறு புதிதாகச் சேர்ந்துள்ளது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் தமிழகம் தன்னுடைய எல்லைகளை அண்டை மாநிலங்களிடம் இழந்து நிற்பதுதான்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சித்தூர்,புத்தூர்,திருப்பதி,காளத்தி,பலமனேரி, காகுந்தி, வாயல்பாடி முதலிய பகுதிகளைத் தெலுங்கர்கள் கொள்ளையடித்துக் கொண்டார்கள்.
மைசூர், பெங்கஹர், கோலார், கொள்ளேகாலம், மாண்டியா மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகள் ஆகியவற்றைக் கன்னடர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இவற்றில் பெங்கஹர் கன்னடர்களின் தலைநகரமாக இருக்கிறது. காவிரி தோன்றும் குடகுப்பகுதி தமிழகத்தோடு இணைய விரும்பியும் தமிழகத்தில் அப்போதிருந்த தேசிய விரும்பி மேதாவிகள் அதை ஏற்கவில்லை. இதுதான் இன்றைய காவிரிச் சிக்கலுக்கு அடிப்படை.
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, உடும்பன் சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம் உள்ளிட்ட பாலக்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி, அட்டப்பாடி முதலிய தமிழ்ப் பகுதிகளை மலையாளத்தார் பறித்துக் கொண்டனர்.
இதனால் தமிழன் தன் நிலப்பரப்பை இழந்ததோடு அங்குள்ள தமிழர்கள் தமிழுக்கும், தமிழர்க்கும் அந்நியமாகிப் போனார்கள். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஆறுகள் இன்றைக்கு அண்டை மாநிலங்களின் பிடியில்.
கேரளம் பண்டைய தமிழ்ச் சேரநாடுதான் என்றாலும் நம்பூதிரிக் கூட்டத்தார் வலிந்து வடமொழியைத் தமிழோடு கலந்து மலையாளம் என்ற ஒரு புதிய மொழியை உண்டாக்கி தமிழனைத் தமிழனுக்கு எதிரியாக்கினார்கள்.
இன்றைக்குப் பெருமைக்காகக் கேரளத்தைக் கடவுளின் பூமி என்று மலையாளிகள் கூறினாலும் உண்மையில் அப்படியில்லை. எப்போது பார்த்தாலும் மத, இனக் கலவரங்களும், கடையடைப்புகளும், பேருந்துகளும் பிற ஊர்திகளும் ஓடாத நிலையும் அடிக்கடி ஏற்படும் மாநிலம்தான் கேரளம். பந்த் என்னும் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்ற தீர்ப்பே கேரள உயர்நீதி மன்றத்தில்தான் வழங்கப்பட்டது. மின்சாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள மாநிலமாகவே கேரளம் உள்ளது. எனவே மலையாளிகள் தங்கள் மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் பிழைப்புக்காகச் செல்ல வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழ்நாட்டில் மலையாளிகள் குடியேறாத ஊர்களே இல்லை எனலாம். அதிலும் கோவை, கன்னியாகுமரியில் ஏராளமானோர் வந்து குடியேறியுள்ளனர்.
கோவையில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளார்கள். கோவையில் மலையாளி சமாஜம் ஏற்படுத்தி அதன் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துகிறார்கள். அவற்றிலும், அவர்கள் நடத்தும் வேறு தொழில் நிறுவனங்களிலும் மலையாளிகளையே உயர் பதவிகளில் அமர்த்துகிறார்கள். தமிழர்களுக்கு ஏதோ எடுபிடி வேலைகளும், கடைநிலைப் பணிகளுமே தருகிறார்கள்.
தமிழன் தரும் காசைப் பெற்றுக் கொண்டு தொழில் நடத்தினாலும் தமிழனுக்கெதிராகவே தமிழகத்திலும் அவர்களது நடவடிக்கைகள் உள்ளன. சேலம் இரயில்வே கோட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளதா என ஐயப்படும் நிலையே உள்ளது, இங்கே அவர்கள் சொகுசாக வாழ்ந்தாலும் வாழ்வு தரும் தமிழர்க்கெதிராகவே செயல்படுகிறார்கள்.
மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்குத் தமிழக அரசு விடுமுறை தருகிறது. அவர்கள் வந்தேறிகள். ஆனால் வலுக்கட்டாயமாகக் கேரளத்துடன் சேர்க்கப்பட்ட தமிழர் பகுதிகளில் பொங்கல் விடுமுறைக்காக உண்ணா நோன்புப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சாராதவர்கள் ஓர் அங்குல இடம் வாங்க முடியாது. ஆனால் தமிழ்நாடு மட்டும் வந்தோர்க்கெல்லாம் புறம்போக்காகப் போய் விட்டது. இங்கே தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கன்னடர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகிறார்கள். வந்தேறித் தெலுங்கர்கள் கிருஷ்ணகிரியை ஆந்திராவோடு இணைக்க வேண்டுமென்கிறார்கள். கர்நாடகத்தில் தமிழன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணி செய்யப் போனாலும் கன்னடர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்கள் இன உணர்வில்லாதவர்களாக இருப்பதுதான்.
தமிழர்கள் தங்கள் மாநிலத்தில் நீர்வளம் அற்றுப் பாலைநிலமாகும் சூழலை எதிர்கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால் ம.பொ.சி. விட்டுச்சென்ற எல்லை மீட்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். காஷ்மீருக்கு மட்டும் உள்ள சிறப்பு உரிமைகளைத் தமிழகத்திற்கும் பெற வேண்டும். ஆட்சியாளர்களும், உணர்வுள்ள தமிழர்களும் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.

தலைவர் பணிதலைநின்ற திருவணையார் திருவெண்காட்டு நங்கை

சிவனடியார்களான திருத்தொண்டர்களின் வரலாற்றைத் தம் பெரியபுராணத்தில் எடுத்துரைத்தவர் சேக்கிழார் பெருமான். அதில் அத்திருத்தொண்டர்களை நெறிப்படுத்தியவர்களாகவும், தாமே தொண்டு செய்பவர்களாகவும், தொண்டர் பணிக்குத் துணை நின்றவர்களாகவும் விளங்கும் மங்கை நல்லார்களின் அரும்பணிகளையும், பெருமைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.
ஒருவனுக்கு மனைவி பெருமையுடையவளாக இருந்தால் அவனுக்கு இல்லாதது யாது? என்பார் வள்ளுவப் பெருந்தகையார். அப்படிப்பட்ட மனைவியரைப் பெற்ற திருத்தொண்டர் பலரில் சிறுத்தொண்ட நாயனார் ஒரு முதன்மையான இடத்தை வகிக்கிறார். அவரது துணைவியாரான திருவெண்காட்டு நங்கை கணவரது திருத்தொண்டில் செய்த அரும்பணியை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிறுத்தொண்ட நாயனார்
பல்லவ மன்னர் நரசிம்மவர்மரின் படைத் தலைவராக இருந்து வடதிசைப் போரில் வாதாபி நகரை அழித்து வெற்றியைக் கண்டவர் பரஞ் சோதியார். பின்னர் படைத் தொழிலினின்றும் நீங்கி சிவத்தொண்டுக்கு வந்தவர். சிவனடியார்களுக்கு முன்னர் தம்மை சிறு தொண்டராக்கிக் கொண்டு அவர்களுக்குப் பணிசெய்ததால் இவர் சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பெற்றார். பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள பல நாயன்மார்களைப் போல இவரும் சிவத்தொண்டர்களுக்கு முதலில் உணவிட்டு அதன் பின்னர் தாம் உண்ணுதலை வழக்கமாகக் கடைப்பிடித்து ஒழுகினார். இவருக்கு உற்ற துணைவியாராய் வாய்த்தவர் திருவெண்காட்டு நங்கை அம்மையார்.

திருவெண்காட்டு நங்கை
சிறுத்தொண்டரின் மனைவியார் திருவெண்காட்டு நங்கை என்று குறிப்பிடப்படுகிறார். இவரது பெயரே இதுதானா, அன்றி திருவெண்காடு ஊரைச் சேர்ந்தவராக இருந்து இப்பெயர் பெற்றாரா என்பது அறியக்கிடைக்கவில்லை.
தீதில்குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்றே சேக்கிழார் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் கல்கி தனது சிவகாமியின் சபதம் புதினத்தில் இந்த அம்மையாரை திருவெண்காட்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டுள்ளார். சிறுத்தொண்டரான பரஞ்சோதியார்க்கும் - திருவெண்காட்டு நங்கையார்க்கும் பிறந்த ஆண் மகவு சீராளன்.

சிறுத்தொண்ட நாயனார் புராணச் சுருக்கம்
சிறுத்தொண்டர் நாள்தோறும் சிவனடியார்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து முன்னம் உணவு உண்ணச் செய்து அதன் பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டு ஒழுகினார். திருவெண்காட்டு நங்கையாரும் உறுதுணையாக இருந்து வந்தார். இவர்கள் வீட்டில் பணி செய்த தாதி சந்தனம் என்னும் பெயருடையவர்.
சிவபெருமான் சிறுத்தொண்டரின் தொண்டினை அறிந்து அவருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். எப்போதும் அடியாரைச் சோதித்தே அருள்புரியும் தன்மை கொண்டவராதலால் வயிரவச் சிவனடியார் கோலத்தோடு வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்கிறார். சிறுத்தொண்டரும் திருவெண்காட்டு நங்கையாரும் தம் பிள்ளையைக் கறி சமைத்து உண்ணத் தருகின்றார்.
கறியை உண்ணாது, மகன் சீராளனை அழைக்குமாறு கூறினார் வயிரவக்கோலச் சிவபெருமான். இவர்கள் மகனைக் கூவி அழைக்க அவன் பள்ளியிலிருந்து வருகிறான். இவர்கள் வயிரவரைப் பார்க்கத் திரும்பினால் அவர் மறைந்துவிடுகிறார். கறியுணவும் காணவில்லை. பின்னர் உமையம்மையார் மற்றும் புதல்வர் முருகனோடு காட்சி தந்து அனைவரையும் சிவனுலகத்திற்கு அழைத்துச் சென்றார். இதுதான் கதைச் சுருக்கம்.
இனி தலைவர் பணி தலைநின்ற திருவெண்காட்டு நங்கையின் தன்மைகளைப் பார்ப்போம்.

திருவெண்காட்டு நங்கையின் கற்புத்திறம்
கணவனையன்றிப் பிறிதொரு ஆடவனை மனத்தாலும் எண்ணாத தன்மையைக் கற்பெனக் கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கணவனோடு ஒத்த கருத்தோடு இணைந்து வாழ்தலும், கணவனுக்குப் பணிவிடை செய்தலையும், கணவனது வாழ்வுக்காக எந்த ஈகத்தையும் செய்தலையும் கற்புத் தன்மையாகவே கொள்ளலாம்.
வள்ளுவப் பெருந்தகையார் தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதெழுபவளைப் பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று கூறுவது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
திருவெண்காட்டு நங்கையார் நாள்தோறும் தன் கணவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவனடியார்களுக்கு உணவு சமைத்து விருந்தோம்பி வருதலைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
ஆனால் சிவனடியாராக இருந்தாலும் அவர் அந்நிய ஆடவராக இருந்ததால் அவரை வணங்கிப் பணிவிடை செய்தாலும் அந்த அடியார்களைத் தீண்டியதில்லை. இதை சேக்கிழார் பெருமான் அடியவராக வந்த சிவபெருமானுக்குத் திருவடிகளைக் கழுவும்போது நங்கையார் அப்பணிவிடையைச் செய்யவில்லை. அவர் நீர்வார்க்க சிறுத்தொண்டரே கால்களைக் கழுவினார் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து,கணவனுக்காகத் தான் பெற்ற மகனையே இழக்கத் துணிகிறார். கணவர் சிவனடியார்க்கு உணவிடாமல் உண்ணும் நிலை வந்தால் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்னும் பண்பு நிலையுடையவர். எனவே கணவரின் அரிய உயிரை எனக்கு இந்தப் புதல்வன் அளித்தான் என்றார்.
.... கணவனார் அருமை உயிரை எனக்களித்தான்... (3723)
என்னும் பாடலடிகளில் சேக்கிழார் இதனைக் கூறுகிறார்.

தலைவர் பணி தலை நிற்றல்

சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிலுள்ள கணபதீச்சுரம் என்னும் கோயிலில் அருள்புரியும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அத்தோடு அடியார்க்குத் திருவமுது செய்து உண்பித்தலைத் தலையாய தொண்டாய்ச் செய்து வந்தார்.

இந்தத் தொண்டுக்கு அவருடன் ஒத்துப்போய் உதவுபவராக வந்தமைந்தவர் திருவெணகாட்டு நங்கை. இவரை சிவபெருமானின் அடியவர்களுக்கு வேண்டிய பணிகளையெல்லாம் செய்பவராய்க் குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்று சேக்கிழார் பெருமான் அறிமுகப் படுத்துகிறார். வேதகா ரணர்அடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கை எனப் பாடலில் இவரது பெருமையை எடுத்துரைக்கிறார்.

தலைவர் பணியில் தலைநிற்றல் அவரது பெருமைக்குரிய அரும்பணியாகக் குறிப்பிடுவது தான் பெற்ற மகனையே கணவரது திருத்தொண்டுக்காக இழக்கத் துணிந்தது. இது வேறு எந்தத் ஒரு நற்றாயாலும் செய்ய இயலாத செயல்.

பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலுட்டிச் சீராட்டி வளர்த்த மகன். குழந்தை பிறந்த போது அலங்கரித்துப் பெருமை கொண்டு சுற்றத்தார் மகிழ்ச்சியடைந்தனர். இந்த உவகை மேலோங்கித் திருச்செங்காட்டங்குடியிலுள்ள மக்கள் எல்லோரும் நெய்யாடல் விழாச் செய்து கொண்டாடினர். அக்குழந்தை அந்த ஊருக்கே திருமகனாக விளங்கியிருக்கிறது. அதை இழக்கத் துணிந்திருக்கிறார் திருவெண்காட்டு நங்கை.

அஃறிணை உயிர்கள் கூடத் தாம் ஈன்றெடுத்த மகவைத் தம் கண் முன்னால் இழக்கத் துணிவதில்லை. காக்கையின் குஞ்சு கூட்டிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டால் தாய்க் காக்கை அந்த வழியில் போவோரையெல்லாம் பறந்து சென்று கொத்த முயல்கிறது. கன்றை ஈன்றெடுத்த ஆவினம் அதை எவ்வளவு அன்போடு பால் தந்து காக்கிறது. இதைத்தான், கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல் எனப் பராபரக் கண்ணி கூறுகிறது.

பறவைகளும், விலங்குகளுமே இப்படி இருக்கையில் ஆறறிவு பெற்ற மனிதப் பிறவியைக் பற்றிச் சொல்லவும் கூடுமோ

சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டி என்ற அணி, இரு காதுகளிலும் குதம்பை என்ற அணி, கழுத்தில் கண்டசரம் என்ற அணி, மார்பில் ஐம்படைத்தாலி என்ற அணி, கைகளில் வைரத்தால் ஆன சரி என்ற அணி, கால்களில் சதங்கை என்ற அணி என உடல் முழுவதும் அணி பூட்டி அலங்கரித்துச் சீராட்டி வளர்த்துப் பள்ளிக்குச் செல்லும் சிறுவனைச் சிவனடியாருக்குப் பிள்ளைக் கறியாகத் தரக் கணவனோடு உடன்படுகிறார். ஒரு குடும்பத்துக்கு ஒரே மகனாக உள்ள சிறுவனைத் தந்தை அரியவும் தாய் பிடிக்கவும் அப்போது இருவரும் தமக்குள் உள்ளம் மகிழ்ந்து குற்றம் இல்லாது அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாகும் எனக் கேட்கிறார் வைரவ வேட இறைவன்.
அப்படியே செய்ய ஒப்புதல் தந்தார் சிறுத்தொண்டர். தன் மகனை விருந்தாக்க எண்ணி ஒப்பில்லாத மகன் மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான் என்று மகிழ்கிறார் அவர். அவரது மனைவியாரான திருவெண்காட்டு நங்கையாரோ, கணவனாரின் அரிய உயிரை எனக்கு இப்புதல்வன் அளித்தான் என மகிழ்ச்சியுற்றார். புதல்வன் உயிர் போதல் பற்றிக் கவலைப்படவில்லை. கணவர் தனது கொள்கையிலிருந்து பிறழும் வாய்ப்பு ஏற்பட்டு அவரது உயிர் போய்விடாதபடி தனது மகனே அடியார்க்கு விருந்தாகிக் கணவரைக் காத்ததை எண்ணி மகிழ்ந்தார் எனில் கணவர் பணியில் அவரது ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பது அறியக் கிடைக்கிறது. அறுத்து எடுத்த தலையின் இறைச்சி உணவுக்கு ஆகாதென்று கழித்து அதை சந்தனத்தாதியாரிடம் கொடுத்துவிட்டு மற்ற உறுப்புக்களின் இறைச்சியைக் கொத்தியும், அறுத்தும், காய் வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் சமைத்து முடித்து அதைத் தம் கணவனார்க்கு உரைத்தார்.
பின் கணவரோடு சேர்ந்து அவரே அக்கறி உணவை அடியார் கோலத்து இறைவர் உண்ணப் படையலிட்டார். தான்பெற்ற புதல்வனைக் கொன்று சமைத்து வந்தவர்க்கு விருந்து படைத்த பாங்கு கணவர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் வேறு எவரும் செய்யாத ஒன்று.


தாம் பெற்ற குழந்தை இயற்கையாகவே இறந்து விட்டாலே தாயாரால் தாங்கிக் கொள்ள இயலாது என்னும் நிலையில் கணவர் தம் புதல்வனைக் கறி சமைத்துப் படைலிடுவதைச் சிறிது மறுத்திருந்தாலும் கணவர் பணி தடைபட்டு அதனால் கணவரையே இழந்திருப்பார் திருவெண்காட்டு நங்கையார். ஆனால் அவர் கணவர் பணியில் தலைநின்ற நங்கையாராதலால் ஒருவர் அடையும் செல்வங்களிலெல்லாம் பெரிய செல்வமான மக்கள் செல்வத்தையே இழக்கத் துணிந்தார். இதனால்தான் கணவரோடும், புதல்வரோடும், தாதியோடும் சிவனுலகம் புகும் அரிய வாய்ப்பைப் பெற்றார் திருவெண்காட்டு நங்கை. இதனால்தான் கணவர் பணியில் இவர் துணை நின்றவரல்ல, தலைநின்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.