Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts
Sunday, April 26, 2015
தமிழில் சொல்லாக்கம் தேவையற்றதா?
சொல்லாக்கம் என்பது ஒரு புதிய சொல்லை உண்டாக்குதல். இப்போது புதிது புதிதாகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றிற்கெனப் புதிய சொற்களைத் தமிழில் செய்வது சொல்லாக்கம். இதனைக் 'கலைச் சொல்லாக்கம்' என்று கூறுகின்றனர்.
இந்தக் கலைச்சொல்லாக்கம் தேவை, தேவையில்லை என இருவகையான கருத்துக்கள் தமிழர்களில் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளன.
புதிய சொல்லாக்கம் தேவையில்லை என்போர், இது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்களைச் சொல்கின்றனர். ஒரு தரப்பினர் ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் உள்ள சொற்கனை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர்.
இன்னொரு தரப்பினர், மொழிபெயர்ப்பிற்குப் பதிலாக ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம் என்கின்றனர். சான்றாக, சிமெண்ட் என்பதைப் பாமர மக்கள் 'சிமிட்டி' என்கின்றனர். ஹாஸ்பிட்டல் என்பதை 'ஆஸ்பத்திரி' என்கின்றனர். இப்படிப் பேச்சு வழக்கில் உள்ளதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாமே என்கின்றனர்.
வேறொரு தரப்பினர், புதிய சொல்லாக்கம் செய்தால், அது கடினமாக உள்ளது, என்னவென்றே புரியாததாக உள்ளது, நகைக்கத் தக்கதாக உள்ளது என்றெல்லாம் சொல்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, காபி என்பதைக் 'கொட்டை வடிநீர்' என்றும், சைக்கிளைத் 'துவிச்சக்கர வண்டி' என்றும் மொழி பெயர்க்கின்றனர். இவை நன்றாகவா இருக்கின்றன? பேசுவதற்கும், ஒலிப்பதற்கும் கடினமாக உள்ளன, புரிவதுமில்லை. எனவே, காபியையும், சைக்கிளையும் அப்படியே சொல்லிக் கொள்ளலாமே என்கிறார்கள்.
இதற்கான விடையைத் தருமுன், தமிழ்ச் சொல்லாக்கத்தின் தேவையை இங்கே சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
பிற மொழிச் சொற்களைத் தமிழோடு கலப்பதால், தமிழின் தனித்தன்மை போய்விடும். தனித்தன்மை போனால் என்ன? மொழி என்பதே தகவல் தொடர்புக்குத்தானே, அது எப்படியிருந்தால் என்ன என்போர் உண்டு.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற மொழிச் சொற்களுக்குப் புதிய சொற்களைப் படைத்துக் கொள்ளக்கூடிய தகுதியும், திறனும், ஆற்றலும் தமிழுக்கு உண்டு. ஆனால், பல வக்கற்ற மொழிகளுக்கு இல்லை. அவற்றைப் போலவே தமிழையும் கருதுவது தவறு.
'ஜன்னல்' என்ற அயல்மொழிச் சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தமிழில் 'காலதர்', 'பலகணி', 'சாளரம்' முதலிய சொற்கள் பண்டை நாளிலேயே உண்டு. இவை பயன்பாட்டில் இல்லாமல், ஜன்னல் என்பதே வழக்கத்தில் உள்ளது. இதனால், பண்டைத் தமிழர்களுக்குச் சாளரமே தெரியாதோ என்று மற்றையோர் எண்ண இடமளித்து விடும்.
தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் ஏற்படும் இன்னொரு தீய விளைவு தமிழருக்குத் தமிழரே எதிரியாதல்! இது எப்படி என்று கேட்கலாம். இதற்கு நம் கண் முன்னே சான்றுகள் உள்ளன. வடக்கிருந்து வந்த நம்பூதிரிக்கூட்டம், சேர நாட்டில் தமிழோடு வலிந்து வடமொழியைப் புகுத்தியது. இக்கலப்பினால் அங்கே தமிழ் மாறி, மலையாளமாகியது. சேர நாடு என்பது மாறிக் கேரளமாகியது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல சங்கத்தமிழ்ப் பாக்களைத் தந்த சேர நாடு, இன்று தமிழ் மண்ணாக இல்லை. தமிழனாக இருந்தவன் இன்று மலையாளியாக மாறித் தமிழனுக்கே எதிரியாகி விட்டான்.
இதே போலத்தான் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இன்ன பிற மொழிகளும் தமிழோடு பிற மொழிகள் கலந்ததால் உண்டாயின. இன்று எருமையூர் மைசூரானது. தமிழன் கன்னடனாகித் தமிழனுக்கு எதிரியானான். இவ்வாறுதான் தெலுங்கும் தெலுங்கரும்.
அடுத்து, சொல்லாக்கம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகள் பற்றிய செய்தி.
முன்னர் சொன்ன கொட்டை வடிநீர், துவிச்சக்கர வண்டி முதலியவற்றைப் பார்ப்போம். சொல்லாக்கம் செய்வதில் பல்வேறு நிலைகள் உள்ளன. பலர் பல சொற்களை ஒரே பொருளுக்குப் புதிதாக உண்டாக்குகின்றனர். அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் பொருத்தமானவையாக இருப்பினும் நம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியில்லாதவற்றைத் தவிர்த்து விடலாம். தமிழில் 'சொல்' என்னும் பொருள் தரும் நாற்பது சொற்கள் உள்ளன.
செல்போன் என்பதைச் செல்பேசி, கைபேசி, அலைபேசி, செல்லிடப்பேசி எனப் பலவாறாகச் சொல்கின்றனர். இதை நாம் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பேசுவதால், 'செல்லிடப்பேசி' என்பது பொருத்தமானதாக உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.
கம்ப்யூட்டர் என்பதை முதலில் கணிப்பொறி என்றனர். பின்னர் கணினி என்கின்றனர். இரண்டுமே பொருத்தமாக நன்றாக இருப்பதால், இரண்டையுமே பயன்படுத்தலாம். தவறில்லை.
'கொட்டை வடிநீர்' என்பது பொருத்தமானதல்ல. காபிக் கொட்டையை அரைத்துத் தூளாக்கியே காபி கலந்து குடிக்கிறோம். கொட்டையை வடித்தல்ல. இதற்குத் தமிழ்ப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் ஐயா அவர்கள் ஆய்வு நோக்கில் சொல்லாக்கம் செய்துள்ளார்.
அதாவது, பிரேசில் நாட்டில் காபிக் கொட்டையை முதலில் பார்த்தவருக்கு அதில் குதிரையின் கால் குளம்பு போன்ற தோற்றம் தெரிந்திருக்கிறது. அவர்கள் மொழியில் காபி என்பது குதிரையின் கால் குளம்பைக் குறிக்கும் சொல். அதன் அடிப்படையில் இதனையும் காபி என்றார்களாம். அந்த வரலாற்றின் அடிப்படையில் காபியைக் 'குளம்பி' என்று பாவாணர் சொல்லாக்கம் செய்தார். இதைப் புரியாதவர்கள் குளம்புக்கும் குழம்புக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப் போனவர்கள்தான்.
இதே போல்தான் 'துவிச்சக்கர வண்டி' என்பதில் வண்டியைத் தவிர மற்றவை தமிழல்ல. இங்கே எது தமிழ், எது வடமொழி என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடமொழிச் சொற்கள் தேவையின்றித் தமிழோடு கலக்கப்பட்டுள்ளன. எனவே, முதலில் நாம் செய்யும் சொல்லாக்கத்தில் அதன் அடிப்படை வேர் தமிழ்தானா என்பதை அறிந்து செய்ய வேண்டும். 'மிதி வண்டி' என்று செய்யப்பட்ட சொல்லாக்கம் இனிதாகவும், எளிதாகவும் இருக்கிறது. இதில் கடினமோ, குழப்பமோ இல்லையே!
கடினமாக இன்றி எளிமையான சொற்களை உண்டாக்கலாம். அதே வேளை, நம்முடைய மொழியில் உள்ள சொற்கள் நமக்கே கடினமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 'வெஹிக்கிள்' என்ற சொல்லின் கடினமான ஒலிப்பை விடவா 'வண்டி' என்பது கடினமாக உள்ளது?
இன்னொன்று சொல்கிறார்கள், இந்தச் சொல்லாக்கத்தால் வரும் புதிய சொற்கள் என்னவென்று புரியவில்லை என்று. அது ஏன்? நாம் புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ விரும்புவதில்லை. ஆர்வம் கொள்வதில்லை.
ஆங்கிலத்தில் Through, Thorough, Though, Tough ஆகிய சொற்களில் பெரும்பாலான எழுத்துக்கள் ஒன்றே ஆயினும், ஒலிப்பு ஒரே மாதிரியாயில்லை. வேறு வேறானவை. இவற்றை விடவா தமிழ் குழப்பமாகவும், கடினமாகவும் உள்ளது?-
தமிழ்ச் சொல்லாக்கத்தை ஏளனமாகப் பேசும் இந்த ஆங்கிலக் காதலை, அயல் மொழி வேட்கையை, தமிழைத் தாழ்வாக நினைக்கும் மடமையை என்னென்பது?
தமிழில் என்ன இருக்கிறது? என்று கேட்போர் சிலர் உள்ளனர். என்ன இல்லை? என்று இவர்கள் முதலில் அறிய வேண்டும். அடுத்து ஏன் இல்லை? என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். பின் இல்லாததைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவும் செய்யாமல், உண்மையில் தமிழில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாமல் வீணே பேசித் தாய்மொழியை இழிவு செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழ்நாட்டிலேயே திருமடம் அமைத்து சமயப்பணிகள் செய்து வரும் ஒரு துறவி, தமிழகத்தில் தமிழர்களோடு எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார், எழுதுகிறார். இவருக்குத் தமிழ் தெரியாத மொழியல்ல. எதற்காக இப்படிச் செய்கிறார்? இப்படிப்பட்ட பிறவிகளை என்னவென்று சொல்வது?
பொருத்தமான சொல்லாக்கத்தைப் படித்த அறிஞர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. பாமரனும் செய்யலாம். யார் செய்தாலும் சரியானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
'ஹார்ட்வேர்ஸ் அன்ட் பெயிண்ட் ஸ்டோர்' என்பதைத் தமிழில் எப்படி எழுதுவது? என்று தேவநேயப்பாவாணரிடம் ஒருவர் கேட்ட போது, 'வன்பொருள் வண்ணப்பூச்சு அங்காடி' என்று உடனே அவர் விடை தந்தாராம். இன்று கணினித்துறையில் வன்பொருள், மென்பொருள் எனும் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.
மேலும் அவர், சிமென்ட் என்பதற்குச் 'சுதைமா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். பண்டைய நாளில் கோவில்களில் சுதைச் சிற்பங்கள் செய்யப்பட்டிருப்பதை இன்றும் காண்கிறோம். அதன் அடிப்படையில் 'சுதை மாவு' என்று மொழிபெயர்த்து அதைச் 'சுதைமா' என்றார் பாவாணர். இது நல்ல சொல்லாக்கம்தான். நாம்தான் பயன்படுத்தவுமில்லை, அறிந்து கொள்ளவுமில்லை.
எனவே, பிறமொழிச் சொற்களைத் தமிழில் அப்படியே பயன்படுத்தாமல் சொல்லாக்கம் செய்து கொள்வது, தமிழுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நன்மையைத் தரும். பிரான்சு நாட்டில் எந்தவொரு புதிய அயல்மொழிச் சொல்லுக்கும் பிரெஞ்சு மொழியில் புதிய சொல்லாக்கம் செய்தே பயன்படுத்துகிறார்களாம். அவர்கள் ஆங்கிலத்தை இழிவான மொழியாகவே கருதுகிறார்களாம்.
ஆனால், 'செம்மொழி' என்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகக் கொண்டுள்ள ஒரே மொழியான தமிழுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நம் மொழியின் அருமை, பெருமையை அறியாமல் வளமில்லாத மொழிகளைப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
நாம், பாரதியார் சொன்னது போல் 'எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பது' நல்ல தமிழில் இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியார் சொன்னார். அதே வேளை, ஏற்கெனவே உள்ள நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கும் நிலையையும் மாற்றி நல்ல தமிழில் பேசவும் எழுதவும் முன்வர வேண்டும்.
Labels:
ஆய்வு,
ஆய்வுக் கட்டுரை,
தமிழர் நாகரிகம்,
தமிழ் இலக்கணம்
சமஸ்கிருதம் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியதா?
அண்மையில் இந்திய மைய அரசு நாடு முழுவதும் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பும், ஆதரவும் வெளிப்பட்டன.
தமிழக முதலமைச்சரே 'சமஸ்கிருத வாரம்' கொண்டாடுவதை ஏற்க இயலாதென இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், தமிழகத்திலே தமிழர்களாகப் பிறந்தும் இன உணர்வு இல்லாதவர்களும், தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகளும் சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதிலே கர்நாடக மாநில எழுத்தாளர் திரு. எஸ்.எல். பைரப்பா என்பவர் தி.மு.க.&தான் சமஸ்கிருத அழிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் சொல்வது போல சமஸ்கிருதம் அழிந்து போயிருந்தாலும், அதற்குத் தி.மு.க. காரணமாக இருந்திருந்தாலும் தி.மு.க. பாராட்டிற்குரியதுதான்.
சென்ற 7.8.2014 அன்று வெளியான 'தி இந்து' தமிழ் நாளிதழில் திரு. ஆர். நடராஜன் என்ற ஓர் இதழாளர் தன் சமஸ்கிருத அடிமைத்தனத்தை ஒரு சிறு கட்டுரையாக எழுதியிருந்தார்.
அதிலே, தமிழகத்தில் படித்த மாணவர்கள் பிழையில்லாமல் தமிழ் எழுதுவதில்லை, தொலைக்காட்சித் தமிழின் உச்சரிப்பு நாரசமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருந்தார். இது உண்மைதான். அதற்காக அதைத் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டுமா, அதை விட்டு விட்டு சமஸ்கிருதத்திற்குக் காவடி எடுக்க வேண்டுமா?
இவர் கூறியபடி தமிழைத் தமிழர்கள் பிழையாக எழுதுவதற்கும், தொலைக்காட்சிகளில் தமிழ் கெட்டுப் போனதற்கும் கரணியம் தமிழர்கள் தமிழை நன்கு கற்க வேண்டும் என்ற உணர்வில்லாமல் போனதும், தமிழாசிரியர்களே பலர் தமிழில் தற்குறிகளாக இருந்து கடமையுணர்வில்லாமல் ஊதியத்திற்காக மட்டும் கற்பிப்பதும்தான்.
இன உணர்வில்லாமல் போனதற்குக் காரணம் இந்திய மைய அரசின் அடக்குமுறையும், இந்தித்திணிப்பும், தமிழுணர்வைப் பிரிவினைவாதம் என்று தடுப்பதும்தான் என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்போர் உணரலாம்.
'தமிழ் வாழ்க' என்று தமிழக அரசுக் கட்டடங்களில் இருப்பதைக் குநை கூறுகிறார் திரு நடராஜன். அயல் நாடுகளில் இப்படி இல்லை என்கிறார். இதற்குக் காரணம் இவர்களைப் போன்றவர்களால் தமிழ் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் கேட்கும் கேள்விகள் "சமஸ்கிருதம் சிங்கமா, புலியா-? இவர்கள் மீது விழுந்து பிறாண்டிக் கடித்துக் குதறிவிடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் நாட்களில் தமிழ் மொழி நாடு கடத்தப் படுமா? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதால் தமிழ் அழிந்து விடுமா? அந்த நாட்களில் மக்கள் சமஸ்கிருதம்தான் பேச வேண்டும், தமிழ் பேசக்கூடாது என்று கட்டாயமா? அரசியல்வாதிகள் அதற்காக ஏன் இப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும்?"
இக்கேள்விகளுக்கு நாம் இங்கே விடை தருகிறோம். அதற்கு அவர் கேரள மாநில வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல சங்க இலக்கியப் பாடல்களைத் தந்த நாடு பண்டைய தமிழ்ச் சேரநாடு. அந்த அளவு இனிய தமிழ் வழங்கிய தமிழ்ச் சேரநாடு இன்று மலையாளக் கேரளமாக மாறியது ஏன்? எப்படி?
வந்தேறிகளான நம்பூதிரிக்கூட்டம் சேர நாட்டில் குடியேறிய பின் தமிழோடு சமஸ்கிருதத்தை வலிந்து புகுத்திக் கலந்து அங்கே தமிழ் ஒழிந்து மலையாளம் என ஒரு புது மொழி கி.பி. 12 & 13 ஆம் நூற்றாண்டளவில் தோன்றியது.
மலையாளம் பேசத் தொடங்கிய தமிழர்கள் மலையாளிகள் என்றொரு தனி இனமாக மாறியது மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களை எதிரிகளாகக் கருதத் தொடங்கி விட்டனர்.
மாநில எல்லைகள் பிரிக்கப்பட்ட போது இன உணர்வில்லாத காமராசர் தமிழக முதல்வராக இருந்ததால்தான் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, நெய்யாற்றங்கரை, உடும்பன்சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம், சித்தூர், கொழிஞ்சாம்பாறை, சிறுவாணி, அட்டப்பாடி என ஏராளமான தமிழர் பகுதிகளை மலையாளிகள் அபகரித்துக் கொண்டனர்.
இதனால் அங்குள்ள தமிழர்கள் மலையாளிகளாக வலிந்து மாற்றப்படுகின்றனர். ஏறத்தாழ 20 ஆறுகளைத் தமிழகம் இழந்து வறட்சியில் தவிக்கிறது. தமிழனுக்குச் சொந்தமான முல்லைப்பெரியாறு, சிறுவாணி, பவானி ஆறுகளைக் கேரளம் சொந்தம் கொண்டாடுகிறது.
கேரளம் அங்குள்ளோர் அனைவரும் பிழைக்க வக்கற்ற மாநிலமாக இருப்பதால் ஏராளமான மலையாளிகள் தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும், அயல் நாடுகளிலும் பிழைப்புத் தேடிக் குடி பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் அவர்கள் பிழைப்புக்காக வந்து வாழ்ந்தாலும் அவர்கள் அபகரித்த தமிழகத்துக்குச் சொந்தமான ஆறுகளிலிருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர்.
இப்படித் தமிழனுக்குத் தமிழனே எதிரியாகித் தண்ணீருக்குக் கையேந்தும் நிலைக்குக் காரணம் இந்த ஈன மொழியான சமஸ்கிருதத் திணிப்புத்தான் என்பதும், தமிழனுக்கு இன, மொழியுணர்வு இல்லாமல் போனதும்தான் என்பதை இன, மொழியுணர்வு கூடாது என்று கூறும் கூட்டத்தைச் சேர்ந்த திரு. நடராஜன் உள்ளிட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வைத்துச் சமஸ்கிருதத்தால் தமிழ் அழியவில்லையா என்று திரு. நடராஜன் சொல்லட்டும்.
திரு. நடராஜன் காதலர் தினம் கொண்டாடுவதைக் குறை கூறுகிறார். இதை நாமும் ஏற்பதில்லை. அதே வேளை இது தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் வடநாட்டிலும்தான் கொண்டாடுகிறார்கள். அங்கே செய்வது தவறில்லையா?
இந்த நாட்டின் மாபெரும் தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டன என்கிறார் திரு. நடராஜன். சமஸ்கிருதம் 'தேவபாஷை' (கடவுளர் மொழி) என்று ஒரு செய்தி பல காலமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதை நம்பிய தமிழக மன்னர்களும், கற்றறிந்த அறிஞர்களும் அதற்கு ஆதரவாக இருந்தது ஒரு காலம்.
அப்போது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களில் பல தமிழர்களாலும் எழுதப்பட்டன என்பதையும், தமிழிலிருந்து பல நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பழைய ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட வேண்டும், போகிப் பண்டிகையில் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற பழக்கங்களைப் புகுத்தி ஏராளமான நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தில்லையில் தீட்சிதர்கள் தேவார ஓலைச்சுவடிகளை இராசராசசோழ மாமன்னனே கேட்டும் கொடுக்க மறுத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் பெரும்பாலான தேவாரப்பாடல்கள் கரையான்களுக்கு உணவாகி அழிந்துள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த பல கலைகளைப் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாமல் வடமொழியில் இருப்பது எப்படி? இந்தத் திட்டமிட்ட சூழ்ச்சி முறையில்தான்.
சமஸ்கிருதத்தில் புராணங்கள், மறைகள், உபநிடதங்கள், தத்துவ நூல்கள் இருக்கின்றன என்பதற்காக அம்மொழியைத் தெய்வ மொழியென்று கூறி மக்களை ஏமாற்றிப் பிற மொழிகளை அழிக்கும் முயற்சி நெடுங்காலமாகவே நடந்து வந்துள்ளது. இதில் ஆரியச் சூழ்ச்சியாளர்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது என்பது உண்மை. ஆனால், இன்னும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகும் மக்களில் படித்த மேல்தட்டு மக்களே இருப்பதை என்னவென்று சொல்வது?
சமஸ்கிருதத்தில் புராணங்களும் பிறவும் இருக்கின்றன என்றால், அவற்றை மொழிபெயர்த்துப் படிப்பது இயலாத செயலல்ல. ஏற்கெனவே மறைகளும், உபநிடதங்களும், புராணங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கிரேக்க மொழியில் பல இலக்கியங்கள், புராணங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்க விரும்பும் ஆங்கிலேயர்கள் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்களே தவிர, கிரேக்க மொழியைக் கடவுளின் மொழி என்று நம்பி அதைக் கற்று அதன் வழியாகக் கிரேக்க இலக்கியங்களைப் படிப்பதில்லை.
சமஸ்கிருதத்தைத் 'தேவபாஷை' என்று உயர்த்திய கூட்டம்தான் தமிழை "நீச பாஷை" என்று தாழ்த்திப் பேசியது. இந்த இழிவையும் தாங்கிக் கொண்டு தமிழன் 'சமஸ்கிருத வாரம்' கொண்டாட வேண்டுமா? மானமற்ற நடராஜன்களாகவே தமிழினத்தார் எல்லோரும் ஆகிவிட வேண்டுமா? நீச மொழி பேசும் நாட்டில் தேவ மொழியை ஏன் புகுத்த வேண்டும்? அதற்குத் தீட்டு நேர்ந்து விடாதா?
திரு. நடராஜனின் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்து திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள் 'தி இந்து' 8.8.2014 நாளிதழில் வெளியிட்ட கட்டுரையில் உள்ள செய்திகளின்படி, வெறும் 15 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் பேசும் மொழிதான் சமஸ்கிருதம். அதற்கு மைய அரசு செலவிட்ட தொகை 2008 & 2009 & இல் ரூ. 72.10 கோடி. 2009& 10 &இல் ரூ. 99.18 கோடி. 2010& 11 &இல் ரூ 108.75 கோடி.
ஆனால், உலகளாவிய அளவில் 10 கோடி மக்களால் பேசப்படுகிற செம்மொழிக்கான தகுதிகள் முழுவதையும் பெற்றுள்ள ஒரே மொழியான தமிழுக்கு இதே மைய அரசு செலவிட்டது 2008&09 &இல் ரூ. 4. 47 கோடி. 2009& 10 &இல் ரூ. 8.61 கோடி. 2010& 11 &இல் ரூ 10.16 கோடிதான்.
எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லாத இந்த மொழியின் மேம்பாட்டிற்கு மக்களின் வரிப்பணம் இத்தனை கோடியை எதற்காகச் செலவு செய்ய வேண்டும். இதனால் அந்நிய முதலீடு ஏதேனும் அதிகரிக்கிறதா? அந்நியச் செலாவணி கூடுதலாகக் கிடைக்கிறதா?
சமஸ்கிருதம் தேவபாஷை என்றால் அதன் மேம்பாட்டிற்குத் தெய்வங்களே தேவலோகத்திலிருந்து பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து செலவு செய்து கொள்ளட்டும். மாந்தர்கள் எதுவும் செய்ய வேண்டாம். சமஸ்கிருத வாரத்தையும் கொண்டாடிக் கொள்ளட்டும். நீசமொழி பேசும் தமிழகத்தில் தேவமொழிக்கு என்ன வேலை?
தமிழகத்தில் தமிழை ஒரு பாடமொழியாகக்கூடக் கற்பிக்கக் கூடாதென்று கல்வியை வணிகமாக்கி வரும் வணிகர்கள் கூட்டம் நீதிமன்றத்தில் வழக்கிடும் நிலையும், அதனை வல்லமையுள்ள மாநில அரசு எதிர்கொள்ளும் நிலையும் எவ்வளவு கேவலமானது! இதற்குக் காரணம் இன, மொழியுணர்வு இல்லாமல் போனதுதான். இதைத் தமிழர்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் இன உணர்வோடு வாழ்ந்திட வேண்டும். சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் வேரறுக்கும் பணியைத் தொடர்ந்திட வேண்டும்.
Labels:
ஆய்வு,
ஆய்வுக் கட்டுரை,
தமிழக அரசியல்,
தேசியம்,
வேணுகோபாலகிருஷ்ணன்
Sunday, July 29, 2012
நேர்மையின் இலக்கணம் கக்கன்
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.
எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957 இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
1962 இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.
இவரது வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909 இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.
கக்கன் என்பது அவர்களது குலதெய்வப் பெயராக இருக்கலாம் என்பர். ஆண்களுக்குக் கக்கன் என்றும், பெண்களுக்குக் கக்கி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் உண்டென்பர். அப்பகுதியில் வீரகாளியம்மன் கோவில் பூசாரிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் பூசாரிக்கக்கன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை அதிகாரிக்கு ஊர்ப்புற உதவியாளராகப் பணியாற்றியவர்.
இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.
கக்கனின் தந்தையார் பூசாரிக்கக்கன் தன் பணிகள் தொடர்பாகப் பல்வேறு அதிகாரிகளைப் பார்த்ததால், தன் மகனையும் படிக்க வைத்து ஓர் உயர் அதிகாரியாக்க ஆசைப்பட்டார்.
தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார். விடுதலைப் போராட்ட வீரரான வைத்தியநாத ஐயர் மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்தனர். அதன்படி அரிசன சேவா சங்க உதவித்தொகை பெற்று உயர் கல்வியைத் தொடர்ந்தார். எனினும் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை. வைத்தியநாத ஐயர், என். எம். ஆர். சுப்பராமன் முதலியோர் நடத்திவந்த அரிசன சேவா சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்புடையவராகக் கக்கன் விளங்கியதால் அவரைச் சங்கத்தின் தொண்டராகச் சேர்த்துக் கொண்டனர். அதிலிருந்து கக்கனின் தூய பொது வாழ்வு தொடங்கியது.
முதலில் மதுரை மேலூரில் உள்ள மாணவர் விடுதிக் காப்பாளராகப் பணியைத் தொடங்கினார். பின் சேவா சங்கத்தின் கல்விப் பணிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு சிற்றூருக்கும் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார். அப்பள்ளிகளை மேற்பார்வை செய்வதும், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதும் இவரது பணிகள். இதற்காக வைத்தியநாத ஐயரும், அவரது நண்பர்களும் தரும் பணத்திற்கு முறையான கணக்குகளைப் பராமரித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
1934 இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக, 1939 ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940 இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார். அந்த 1940 இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கக்கன், வெள்ளையக் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். செய்யாத குற்றங்களையெல்லாம் அவர்மீது சுமத்தி விசாரணை ஏதுமின்றிக் கடுங்காவல் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு. ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள அலிப்பூர் சிறையில் அனுபவித்தார்.
அவரது அரசியல் வாழ்வில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. முதலில் 1941- 42 இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946 இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல் நற்பணிகளைச் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தலைவராக இருந்த போதுதான் 1955 இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
1963 இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967 இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன. ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
இவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றியது, விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
அவர் நாடாளமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது. நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்பளைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939 இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் 1932 இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
தந்தை பெரியார் இந்துக்களின் வழிபடு கடவுளான இராமபிரானின் உருவப் படத்தை எரிக்க முற்பட்ட போது, அதைக் கண்டித்தார். மீறி எரித்தபோது அதற்காக அவரைச் சிறையிலும் அடைத்தார்.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23 ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்தில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்தில்லை.
இப்படிப்பட்டவர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்யவுள்ள இளைய தலைமுறைக்குக் கக்கனின் தூய பொதுவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
Saturday, March 31, 2012
கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடு
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காப்பியத்தின் மையப் பொருளாக, கதையைக் கூற வந்த நோக்கமாக எடுத்தியம்புவது, பத்தினியை மேலோர் போற்றி வணங்குவர் என்பதாகும். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தினித் தெய்வமாகிய கண்ணகி மாரியம்மனாகத் தமிழகம் எங்கும் வணங்கப் படுகிறாள்.
கோவலன் மதுரையில் கொல்லப்பட்டு, அம்மூதூர் கண்ணகியால் எரியூட்டப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் மழை வளமின்றி வறண்டுபோக, பின்னர் வந்த பாண்டிய மன்னன் மழை வேண்டிக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட, நாடு மழை வளம் பெற்றுச் செழித்ததாம்.
மாரி என்றால் மழை. மழைக்காக வழிபடப்பட்ட அம்மன் மாரியம்மன். தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பின்னாளில் இது சக்தி வழிபாடாகக் கொண்டாடப் பட்டாலும் மாரியம்மன் வழிபாட்டின் தொடக்கம் கண்ணகி வழிபாடே!
கொங்கு நாட்டிலும் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோவை மாநகரின் மையப்பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளதைக் கோவை மக்கள் அனைவரும் அறிவர்.
வறட்சியான கோடைக் காலங்களில் மழை வேண்டி மாரியம்மனுக்குத் திருவிழா நடத்தப் படுவது வழக்கமாக உள்ளது. இது ஆதியில் நடைபெற்ற கண்ணகி வழிபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
திருவிழாவின் போது கோயிலின் முன்புறத்தில் முக்கொம்புக் கம்பத்தில் பூவோட்டில் எரி வளர்ப்பதும், பக்தர்கள் பூவோட்டில் தீயேந்தி வருவதும் மதுரையைக் கண்ணகி எரியூட்டியதைப் போற்றுவதாக இருக்கலாம்.
தேனி மாவட்டத்திற்கு அருகில் தேசியத்திற்காகத் தமிழகம் கேரளத்திடம் இழந்த பகுதியிலுள்ள மங்கலதேவி கோயிலைச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயிலென்று ஆண்டுதோறும் தமிழக மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கொங்கு நாட்டிலும் கண்ணகி மங்கல தேவியாக வழிபடப் படுகிறாள்.
கோவை மாவட்டம் ஆலாந்துறைக்கு அருகிலுள்ள நாதகவுண்டன்புதூரிலிருந்து வடிவேலாம்பாளையம் செல்லும் சாலையில் மங்கலம்மன் கோயில் ஒன்றுள்ளது. இது இப்பகுதியைச் சேர்ந்த ஏழு ஊர் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடும் கோயிலாகும். இப்பகுதி கொங்கு நாட்டின் மேற்கெல்லைப் பகுதியாகும்.
இக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட யானை மற்றும் குதிரைச் சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் முன்னர் நிறைய இருந்தன. பாதுகாப்பற்ற நிலையில் தற்போது அவை அழிந்து விட்டன.
இக்கோயில் திருவிழாவிற்கு நாதகவுண்டன்புதூருக்குத் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியிலுள்ள மங்கலம்மன் சோலை என்னும் அடர்ந்த காட்டிலிருந்துதான் கரகம் கொண்டு வருவார்கள். அதைக் கொண்டுவரும் உரிமை அப்பகுதியிலுள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கே உரியது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இக்கோயில் திருவிழா நடத்தப் படவில்லை.
மலையுச்சியிலுள்ள மங்கலம்மன் சோலையிலும் ஒரு மங்கலம்மன் கோயில் உள்ளது. திறந்த வெளியில் நடுகற்களைத் தெய்வமாக வழிபடுபவர்கள் இந்த மங்கலம்மன் சோலையையொட்டியுள்ள பாறைப்பட்டி என்னும் மலைக் குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களும், நாதகவுண்டன்புதூர் மக்களுமாவர். தற்போது பாறைப்பட்டியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.
மங்கலம்மன் சோலையில் ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஆடுகளை உயிர்ப்பலி தரும் வழக்கம் உள்ளது.
மங்கலம்மன் சோலைக் கோயிலுக்குக் கிழக்கில் உள்ளது பாறைப்பட்டி. அதற்கும் கிழக்கில் கோபாலசாமி கோயில் என்னும் மலை வழிபாட்டிடம் ஒன்று உள்ளது. இது வட்டமாகப் பரந்திருக்கும் ஒரு பாறைப் பரப்புத்தான். இது கோபாலசாமி கோயிலா, கோவலன்சாமி கோயிலா என்பது ஆய்வுக்குரியது. பண்டை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கும் மக்களால் கோபாலசாமியாகத் திருமால் வழிபடப் பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து.
ஆனால், அருகிலுள்ள மங்கலம்மனை மங்கலதேவி எனப் போற்றப்படும் கண்ணகிதேவி வழிபாடெனக் கொண்டால் இதனைக் கோவலன்சாமி கோயிலாகக் கருதலாம். சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக்குரவையில் மலைவாழ் பழங்குடி மக்கள் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே எனக் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்கியதாகக் கூறப் பட்டுள்ளதை, இது கண்ணகி வழிபாடெனக் கொள்வதற்குச் சான்றாகக் கொள்ளலாம். எனவே மலைவாழ் மக்கள் இங்கும் கண்ணகியை வழிபடும் வாய்ப்புகள் உண்டு.
கண்ணகி கோவலனுடன் வானுலகம் சென்ற செய்தியைச் சேரன் செங்குட்டுவனுக்கு மலைவாழ் மக்கள்தான் கூறியதாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் காட்சிக்காதையில் செய்தி உள்ளது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்காக இமயத்தில் கல்லெடுத்துவரப் படையுடன் சென்றபோது இந்தப்பகுதி வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும் என முனைவர் ந. இரா. சென்னியப்பன் அவர்கள் கூறுகிறார்.
எனவே கொங்கு நாட்டில் வழிபடப்படும் மங்கலம்மனும், மாரியம்மனும் கண்ணகிதேவியே எனக் கருதலாம்.
Monday, May 9, 2011
பத்துப்பாட்டில் பழந்தமிழர் மனைகள்
உலக வரலாற்றில் குறிப்பிடப்படும் பண்டைய நாகரிகங்களில் குறிப்பிடத்தக்கது தமிழர் நாகரிகம். தமிழர் உலக மாந்தர் இனங்களிலேயே தொன்மையானவர்கள். குமரிக்கண்டம் அழியாது இருந்திருந்தால் தமிழினத்தின் தொன்மையை யாரும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
தமிழர்களை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் படித்துப் பார்த்தால் தமிழன் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எந்த அளவு மேம்பட்ட நாகரிகத்தையுடையவனாக இருந்துள்ளான் என்பது அறியலாகும்.
அந்த நாகரிகத் தமிழன் கட்டடக் கலையில் எந்த அளவுக்குத் திறமுடையவனாக
இருந்தான் என்பதைக் காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை நமக்குச் சான்று பகர்கிறது. சிறந்த பண்டைய நகரமைப்பு என்று போற்றப்படும் சிந்துவெளி நாகரிகமே தமிழர் நாகரிகம் எனத் தொல்லியலாளர்கள் நிறுவி வருகின்றனர். தமிழகத்திலுள்ளது போன்ற பண்டைய பெருங்கற் கோயில்களை வேறெங்கும் காண இயலாது.
அப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றி நாம் அறியப் பண்டைய தமிழிலக்கியங்கள் பல செய்திகளைத் தருகின்றன. அவ்வகையில் சங்கத் தொகை நூல்களில் பத்துப் பாட்டில் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன.
பத்துப்பாட்டில் மனைகள் பற்றிய செய்திகள் தரும் பாடல்கள்
பத்துப்பாட்டுத் தொகை நூலில் உள்ள சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஏழு பாட்டுக்களில் மனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மனைகளின் வகைகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் உள்ள இல்லங்களைப் பற்றிய குறிப்புகள் பத்துப்பாட்டு இலக்கியங்களில் உள்ளன. அவை அந்தந்தப் பகுதியின் நிலைமைகளுக்கேற்பவும் மக்களின் பொருளாதார வளங்களுக்கு ஏற்பவும் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன, அவ்வகையில் குடிசைகள், மாடங்களைக் கொண்ட வீடுகள், அரசர்களின் அரண்மனைகள், போர்க்களத்தில் அமைக்கப் பட்ட பாசறைகள் ஆகியன பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
ஊர்கள், தெருக்கள், மதில்கள்,வேலிகள், கலங்கரை விளக்கம், குடிசைகளின் கூரைகள், வீடுகளின் முற்றம், கதவுகள், கால்நடைகளின் கொட்டில்கள் முதலியன பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. மேலும் மனைநூல் இலக்கணப்படி கால்கோள் செய்தல் பற்றிய செய்திகளும் உள்ளன.
1.குடிசைகள்
ஐவகை நிலங்களிலும் குடிசைகள் இருந்துள்ளன. தினையரிந்த தாளாலே வேயப்பட்ட குறிய கால்களையுடைய குடிசைகள் இருந்ததைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது.(1) தமிழகத்தில் பாலைநிலம் இல்லை. முல்லை நிலமும்,குறிஞ்சி நிலமும் வறட்சியில் வளங்குன்றியிருக்கும் நிலையையே பாலை என்றனர்.(2) பாலை நிலத்தில் இலைகளைக் கொண்டு வேயப்பட்ட குடிசை இருந்ததை மதுரைக்காஞ்சி இலைவேய் குரம்பை என்று கூறுகிறது.(3)
இந்த இலைகள் காய்ந்தால் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டனவாயினும் பாலை நிலத்தில் மழையில்லாத காலத்திற்கு அது போதுமானதாக இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
தமிழகத்தில் தொண்டை நாட்டுப் பகுதியிலுள்ள வேலூர் வெப்பம் மிகுந்த நகரமாக இருப்பதை இன்று நாம் காண்கிறோம். சங்க காலத்திலும் மிகுந்த வெப்பமுள்ள ஊராகவே அது இருந்திருக்கிறது. மிகுகின்ற வெயிலுக்குக் குடிசை வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் வருந்தத்தக்க அளவு வெப்பம் மிகுந்து விளங்குகின்ற குடிலில் எயினக்குல மகளிரான எயிற்றியர் இருந்ததை, விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை (4) என்று சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது.
எயினர் இல்லம்
எயினர் இல்லம் பற்றி இன்னும் சிறப்பாகப் பெரும்பாணாற்றுப் படையில் விளக்கப் பட்டுள்ளது. ஊகம் புல்லாலே வேயப்பட்ட உயர்ந்த நிலையையுடைய மதிலையும், மலையிடத்தே தூங்கும் தேனிறாலைப் போன்ற குதையினையுடைய அம்புக் கட்டினையும், கடிதாக ஒலிக்கும் துடிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலையும், சங்கிலியால் நாய்களைக் கட்டி வைத்துள்ள கிட்டுதற்கரிய காவலமைந்த வீடுகளையும், உயிர்வாழ் முள்வேலிகளையும் அதாவது முட்செடிகளையே காவல் மதிலாகவும் அதனைச் சூழ்ந்த காவல் காட்டினையும் உருண்ட கணைய மரமிட்ட ஒட்டுக் கதவினையும் கொண்டதாக அவை இருந்தன.(5) இவை எளிய குடிசைகளைவிட மேம்பட்ட நிலையைக் கொண்டதாக அறியலாகின்றன. கொடுமுடி வலைஞர் குடிசைகள்
மூங்கிற்கோலை வரிசையாகச் சார்த்தி வெண்மையான மரக்கொம்புகளை இடையிடையே கலந்து தாழை நாரால் கட்டி, தர்ப்பைப் புல்லால் வேயப்பட்ட கூரையை உடையதாக வலைஞர் குடிசைகள் இருந்தன. அதன் முற்றத்தில் வளைந்த காலையுடைய புன்னைக் கொம்பை வெட்டி அமைத்த பந்தலில் பசுமையான காய்கள் இருந்தன என வலைஞர் இல்லங்கள் பற்றிப் பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.(6)
உழவர் இல்லங்கள்
பெரும்பாணாற்றுப் படையில் உழவர்களின் இல்லங்கள் பற்றிய செய்திகள் சில உள்ளன. வயல் வரப்பிடத்தே புதிய வைக்கோலால் வேயப்பட்டிருந்த கவிந்த குடில் இருந்தது.(7) ஊருக்குள் உழவர்களின் வீடுகளின் பக்கத்தில் மாட்டுக் கன்றுகள் கட்டப்பட்ட முளைகள் நடப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத நெடிய வடிவுடன், அழியாத தன்மையுடையனவாய் முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்துநின்ற நல்ல இல்லங்களாக விளங்கின.(8)
தோப்புகளில் குடியிருப்போர் இல்லங்கள்
தென்னந்தோப்புகளில் யானையின் உடம்பு போன்ற சொரசொரப்பையுடைய வாடிய தென்னை மட்டைகளால் வேயப்பட்டனவாகவும், முற்றத்தில் மஞ்சளும் பூந்தோட்டங்களும் உடையனவாகவும் தனித்தனி வீடுகளாகக் குடில்கள் இருந்தன.(9) இன்றும் தென்னந்தோப்புகளில் இத்தகைய தனிக்குடில்கள் இருப்பதைக் காண்கிறோம்.
கோவலர் இருக்கை
ஆடு,மாடுகள் மேய்க்கும் இடையர்களின் குடிலில் ஆடுகள் தின்பதற்காகக் கயிற்றில் தழைகளைக் கட்டிய குறுகிய கால்கள் நடப்பட்டிருந்தன. நெருக்கமாகக் குச்சிகளைச் சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய படலால் ஆன கதவு இருந்தது. வரகுக்கற்றையால் வேயப்பட்டுக் கழிகளால் கட்டப்பட்ட நடமாடும் குடில் அதாவது செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லக் கூடிய வகையிலமைந்த தங்குமிடம் இருந்தது. பெரிய கூடை போன்ற இக்குடிலை இப்போதும் சிற்றூர்ப்புறங்களில் காணலாம். இது சேக்கை என்று கூறப்படுகிறது. அதில் படுத்தால் உறுத்தாமல் இருக்க, தோலாலான பாய் விரிக்கப் பட்டிருந்தது. ஆடுகளை முற்றத்தில் கட்டுவதற்காகத் தாம்புகளைக் கொண்ட குறுகிய முளைக்குச்சிகளும், முள்வேலிகளும் உடையதாக முல்லைநில ஊர் இருந்தது.(10)
பரதவர் குடியிருப்பு
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவரின் குடியிருப்புகள் பற்றிப் பட்டினப்பாலையில் செய்தி உள்ளது. போரில் இறந்த மறவர்க்கு நடும் நடுகல்லைச் சுற்றிலும் வேல்களை ஊன்றி உட்புறமாகக் கிடுகுகளை வேய்ந்து அரண் அமைப்பது போல நெடிய தூண்டிற்கோல் சாத்திய கூரையையுடையதாகக் குடியிருப்பு இருந்தது. அக்குடியிருப்பின் நடுவே நிலவினைச் சேர்ந்த இருள்போல வலைகிடந்து உலரும் மணல் முற்றத்தையுடையதாக மனை இருந்தது. (11)
பரதவர் குடியிருப்புப் பற்றிய செய்தியில் போர்மறவர் நடுகல் காக்கப்பட்டது பற்றிய செய்தியும் அறியக் கிடைக்கிறது.
2. பெரிய வீடுகள்
சிறுசிறு குடிசைகள் இருந்ததைக் கூறியுள்ளது போலப் பெரிய வீடுகளும், மாடங்களைக் கொண்ட வீடுகளும் ஊர்களிலும், நகரங்களிலும் இருந்ததையும் பத்துப்பாட்டு இலக்கியங்கள் எடுத்துக் கூறியுள்ளன.
முல்லை நில ஊர் வீடுகள்
முல்லை நிலத்தின் சிறிய ஊர்களிலுள்ள வீடுகளைப் பற்றிய செய்தி முல்லைப் பாட்டில் உள்ளது. முள்வேலியிட்ட தொழுவங்கள் இருந்தன. அங்கே பெண்யானைகள் நின்றாற்போன்ற குதிர்கள் முற்றத்தில் இருந்தன. வீடுகளின் முன்பு பந்தல்கள் இருந்தன. சிறிய உருளைகளையும்,கலப்பைகளையும் சார்த்தியதால் தேய்ந்த நெடிய சுவர்களைக் கொண்ட இல்லங்களில் கூரைகள் கார்காலத்தில் வேயப்பட்டு அழகுற விளங்கின என்கிறது முல்லைப்பாட்டு.(12)
மழைக்காலம் தொடங்கும்போது ஒழுகாதிருக்கப் புதிய கூரை வேயும் வழக்கம் இருந்துள்ளது என்பது இச்செய்தியால் அறியலாகின்றது.
நெடுநிலை மாடங்கள்
குடிசைகள்,சாதாரண வீடுகள் மட்டுமின்றி, செல்வச் செழிப்புள்ளோரின் மாட மாளிகைகளும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வானை நோக்கி மிகவும் உயர்ந்த மேல் மாடங்களை உடைய வீடுகள் இருந்தன. அவற்றில் இளவேனிற்காலத்தில் காற்று வருவதற்காகப் பலகணிகள் அமைக்கப் பட்டிருந்தன. மழைக்காலத்தில் அவை திறக்கப்படாமல் தாழிடப் பட்டிருந்தன.(13)
ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட படிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தப்பட்ட உயர்ந்த மாடங்களுடைய இல்லங்களும், சுற்றுத்திண்ணைகளையும், பல கட்டுக்களையும், நீண்ட இடைகழிகளையும் (நடவை, ரேழி என இப்போது சொல்லப்படுகிறது) உடையதாக வீடுகள் இருந்தன. அவை முகில்கள் தவழுமளவுக்கு உயரமான மாடங்களும், அவற்றில் தென்றல் வருவதற்காகக் காலதர்கள் (ஜன்னல்கள்) உடையனவாகவும் புகார் நகரத்து வீடுகள் இருந்துள்ளன.(14) கதவுகளில் புலி உருவங்கள் பொறிக்கப்பட்ட செல்வம் தங்கும் மதில்களுடைய அட்டிற்சாலைகளும் இருந்துள்ளன.(15)
மாடங்கள் உயரமாக இருந்ததோடு விசாலமாகவும் இருந்துள்ளன. மேல்நிலை மாடத்தில் மகளிர் பந்து விளையாடிய செய்தி இதைப் புலப்படுத்துகிறது.(16) பொதுவாக நகரங்களில் செல்வம் மிகுந்தவர்களின் வீடுகள் விண்ணுயர்ந்த மாடங்களைக் கொண்டு மதில்கள் சூழப்பட்டனவாக இருந்துள்ளன.(17) மாடமோங்கிய மல்லன் மூதூர் என்கிறது நெடுநல்வாடை.(18)
மதுரை நகரம் தேவர்களின் விண்ணுலகிற்குச் செல்லும்படி கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த மதிலினைக் கொண்டிருந்தது. அது கோட்டை மதிலாகும். அதன் நெடிய கதவுகளின் நிலையில் கொற்றவை உருவம் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு நெய்யிட்டதாலும், விளக்கு இட்டதாலும் கருப்பு நிறமாகிப் போன கதவுகளும் முகில்கள் உலவும் மலைபோன்று உயர்ந்த மாடங்களையும் உடையதாக இருந்துள்ளது.(19)
3.அரண்மனைகள்
குடிமக்கள் அவரவர் தகுதிக்கேற்பக் குடிசைகள்,எளிய வீடுகள், மாட மாளிகைகளில் வாழ்ந்ததைப் போல அரசர்களின் தகுதிக்கேற்ப அவர்களது அரண்மனைகள் சிறப்புற இருந்துள்ளன.அரண்மனைகளைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன.
நல்லியக்கோடனுடைய ஊரான ஆமூர் அரிய காவலையும், அகன்ற வீடுகளையும், அகழியையும் உடையதாக இருந்தது. அவ்வரசனின் அரண்மனை மேருமலை கண்ணைத் திறந்து பார்த்ததைப் போன்ற பெரிய வாயிலை உடையதாக இருந்தது.(20)
முல்லைப்பாட்டில் கூறப்படும் அரண்மனை தனக்குரிய இடமெல்லாம் பொன்னாலும், மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகை. அதில் மழை பொழியும் போது திரண்ட மழைநீர் வாயிலில் அருவியாக விழுந்து இனிய ஓசையை எழுப்பியது.(21)
நெடுநல்வாடையில் அரண்மனை பற்றிய செய்திகள் சிறப்பாக உள்ளன. நெடுநிலை மாடத்தின் கதவுகள் இரும்பு ஆணிகளையும், பட்டங்களையும் கொண்டு பிணித்து அதற்கு சிவப்பு நிற அரக்கைக் கொண்டு நிறம் சேர்க்கப் பட்டிருந்தது. இரண்டு மரங்களைச் சேர்த்துச் செய்யப் பட்ட கதவுகள் என்பது தெரியாதபடி ஒரே மரம் என்பதுபோலக் கைவினைத் திறத்தால் அமைத்திருந்தனர். குவளைமலர் உருவமும், புதுமையான கைப்பிடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உத்தரத்தில் நடுவில் திருமகள் உருவமும், இருபுறமும் செங்கழுநீர்ப் பூக்களும், நீராட்டும் இரண்டு யானைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பு இப்போது பல கோயில்களில் உள்ளதைக் காண்கிறோம்.
அரண்மனை வாயிலானது, வெற்றிக் கொடியை உயர்த்தியபடியே யானையின் மீது அமர்ந்து கொண்டு உள்ளே புகுமளவுக்கு உயரமாகவும், மலையின் நடுவே வெளியாகக் குடைந்து திறந்தது போன்ற கோபுர வாயிலாகவும் இருந்தது.
மனைகளோ, மலைகளைப் போன்று உயரமாக இருந்தன. அதன் சுவர்கள் வெள்ளியைப் போன்ற சுதை பூசப்பட்டிருந்தன. தூண்கள் நீலமணியைப் போலக் கருமையாகத் திரண்டிருந்தன. செம்பினால் செய்யப் பட்டது போன்ற நெடிய சுவர்களில் அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடி ஓவியங்கள் விளங்கின.(22)
4.கலங்கரை விளக்கம்
பண்டைத் தமிழர் கடல்கடந்து வணிகம் செய்வதிலும், மீன்பிடி தொழிலிலும், முத்துக் குளித்தலிலும் சிறந்து விளங்கியவர்கள். கடலில் தொழில் செய்வோர்க்குக் கரை திரும்ப உறுதுணையாக இருப்பது கலங்கரை விளக்கம்.
பண்டைத் தமிழகத்திலும் மிக உயர்ந்த கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வானம் கீழே விழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக்கோலைப் போல, விண்ணைத் தூண்டும்படி உயர்ந்திருந்தது. அதில் ஏணி சார்த்தியிருந்தது. அதன் உச்சிப்பகுதி ஏறுவதற்கு அரியதாக இருந்தது. அதன் கூரை ஓலைக் கற்றைகளால் வேயப்படாமல் சுண்ணச் சாந்திட்டதாக இருந்த மாடத்து உச்சியில் விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் கிடைக்கிறது.(23)கலங்கரை விளக்கம் வாழ்மனை அல்ல என்றாலும் பண்டைத் தமிழர் கட்டடக் கலை நுட்பத்தை எடுத்துரைக்க இங்கு கூறப்பட்டது.
5. பாசறைகள்
போருக்குச் செல்லும் மன்னர்களும், படையினரும் போர்க்களத்தே பாசறை அமைத்துத் தங்குவது வழக்கம். அப்படித் தங்கும் பாசறைகள் எப்படியிருந்தன என்பதை முல்லைப்பாட்டு விளக்கமாகக் கூறுகிறது.
கடல் போல் பரந்து கிடக்கும் போர்க்களப் பாசறையில் முள் வேலியாகிய மதில் அமைக்கப் பட்டு, தழைகளால் வேயப்பட்ட கூரையுடன் பாசறைகளிருந்தன.(24)
மறவர் அரண்
படை மறவர்களின் பாசறை இருக்கைகளில் வலிய வில்லை ஊன்றி, அவற்றின்மேல் தூணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றாலே வலித்துக் கட்டின இருப்பிடத்தில் குந்தக் கோல்களை ஊன்றி ஓலை அல்லது இலைகளாலான கிடுகுகளை நிரல்படப் பிணைத்து அந்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.(25)
அரசனின் தனி இருக்கை
அரசனுக்கென வசதியானதும், பாதுகாப்பு மிக்கதுமான தனி இருக்கை அமைக்கப் பட்டிருந்தது. நெடிய குத்துக் கோலுடன் பல நிறங்களைக் கொண்ட திரையை வளைத்து அரசனின் பாசறை அமைக்கப் பட்டிருந்தது. இன்றும் பல நிறங்களைக் கொண்ட துணிகளால் கூடாரங்களும், தற்காலிகப் பந்தல்களும் அமைப்பதை நேரில் காண்கிறோம், சங்க காலத்திலேயே இவ்வழக்கம் இருந்துள்ளதை முல்லைப்பாட்டு நமக்குத் தெரிவிக்கிறது.
அரசனின் பாசறை இரண்டு அறைகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. காவல் மற்றும் ஆலோசனைக்கு முன் அறையும், துயில் கொள்ளும் படுக்கை அறை ஒன்றுமாக அந்த இரு அறைகள் இருந்தன,(26)
6. கால்கோள் விழா
இல்லமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாயினும் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கும் போது அதற்கு ஒரு நல்ல நாள் பார்த்துக் கால்கோள் செய்வது நம் நாட்டில் இன்றும் நடைமுறையிலுள்ள ஒரு மரபு ஆகும். சங்க காலத்திலும் நாள், நேரம், பார்த்துக் கால்கோள் செய்யும் வழக்கமிருந்ததை நெடுநல்வாடை தெரிவிக்கிறது.
சித்திரைத் திங்களில் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் பகல் 15 நாழிகையளவில் ஞாயிற்று மண்டலம் நிலத்தின் நடுவண் பகுதியில் இயங்கும். இதை அறிய இரண்டு கோல்களை நிலத்தில் நட்டு வைப்பர். இக்கோல்களின் நிழல் வடக்கிலோ, தெற்கிலோ சாயாமல் அக்கோல்களிலேயே 15 நாழிகையில் அடங்கி நிற்கும். அந்த நாளில் அந்த நேரத்தை ஆய்ந்தறிந்து அவ்வேளையில் அரசர்களின் அரண்மனை கட்டுவதற்கான திருமுளைச் சாந்து என்னும் தொடக்கவிழாச் சடங்கினைச் செய்வர்.(27)
சங்ககாலத் தமிழர்கள் அவரவர் வாழும் நிலங்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கேற்ப இல்லங்கள் அமைத்து வாழ்ந்திருக்கின்றனர், ஆனால் அவை அவர்களுக்கு நிறைவளிக்கும் வகையில் இருந்ததாகவே கருத வைக்கும் வகையில் பத்துப்பாட்டு இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் உள்ளன.
அடிக்குறிப்புகள்: 1. குறிஞ்சிப்பாட்டு, அடி - 153.
2. சிலப்பதிகாரம், காடுகாண்காதை 64-66.
3. மதுரைக்காஞ்சி - 310.
4. சிறுபாணாற்றுப்படை, 173 - 174.
5. பெரும்பாணாற்றுப்படை, 122 - 127.
6. மேலது, 263 - 267.
7. மேலது, 243 - 247.
8, மேலது, 225.
9. மேலது, 351 - 355.
10. மேலது, 147 - 154.
11. பட்டினப்பாலை, 78 - 83,
12. பெரும்பாணாற்றுப்படை, 184 - 191. 13. நெடுநல்வாடை, 60 - 63.
14. பட்டினப்பாலை, 142 - 145, 151.
15. மேலது, 40 - 43.
16. பெரும்பாணாற்றுப்படை, 327- 333.
17. மேலது, 369
18. நெடுநல்வாடை, 29.
19. மதுரைக்காஞ்சி, 352-355.
20.சிறுபாணாற்றுப்படை, 187-188, 205-206.
21. முல்லைப்பாட்டு, 86-88.
22.நெடுநல்வாடை, 80-88, 108-114.
23. பெரும்பாணாற்றுப்படை, 346-350.
24. முல்லைப்பாட்டு, 27-29.
25. மேலது, 39-42.
26.மேலது, 43-44, 64.
27.நெடுநல்வாடை, 73-78.
தமிழர்களை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் படித்துப் பார்த்தால் தமிழன் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எந்த அளவு மேம்பட்ட நாகரிகத்தையுடையவனாக இருந்துள்ளான் என்பது அறியலாகும்.
அந்த நாகரிகத் தமிழன் கட்டடக் கலையில் எந்த அளவுக்குத் திறமுடையவனாக
இருந்தான் என்பதைக் காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை நமக்குச் சான்று பகர்கிறது. சிறந்த பண்டைய நகரமைப்பு என்று போற்றப்படும் சிந்துவெளி நாகரிகமே தமிழர் நாகரிகம் எனத் தொல்லியலாளர்கள் நிறுவி வருகின்றனர். தமிழகத்திலுள்ளது போன்ற பண்டைய பெருங்கற் கோயில்களை வேறெங்கும் காண இயலாது.
அப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றி நாம் அறியப் பண்டைய தமிழிலக்கியங்கள் பல செய்திகளைத் தருகின்றன. அவ்வகையில் சங்கத் தொகை நூல்களில் பத்துப் பாட்டில் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன.
பத்துப்பாட்டில் மனைகள் பற்றிய செய்திகள் தரும் பாடல்கள்
பத்துப்பாட்டுத் தொகை நூலில் உள்ள சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஏழு பாட்டுக்களில் மனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மனைகளின் வகைகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் உள்ள இல்லங்களைப் பற்றிய குறிப்புகள் பத்துப்பாட்டு இலக்கியங்களில் உள்ளன. அவை அந்தந்தப் பகுதியின் நிலைமைகளுக்கேற்பவும் மக்களின் பொருளாதார வளங்களுக்கு ஏற்பவும் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன, அவ்வகையில் குடிசைகள், மாடங்களைக் கொண்ட வீடுகள், அரசர்களின் அரண்மனைகள், போர்க்களத்தில் அமைக்கப் பட்ட பாசறைகள் ஆகியன பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
ஊர்கள், தெருக்கள், மதில்கள்,வேலிகள், கலங்கரை விளக்கம், குடிசைகளின் கூரைகள், வீடுகளின் முற்றம், கதவுகள், கால்நடைகளின் கொட்டில்கள் முதலியன பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. மேலும் மனைநூல் இலக்கணப்படி கால்கோள் செய்தல் பற்றிய செய்திகளும் உள்ளன.
1.குடிசைகள்
ஐவகை நிலங்களிலும் குடிசைகள் இருந்துள்ளன. தினையரிந்த தாளாலே வேயப்பட்ட குறிய கால்களையுடைய குடிசைகள் இருந்ததைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது.(1) தமிழகத்தில் பாலைநிலம் இல்லை. முல்லை நிலமும்,குறிஞ்சி நிலமும் வறட்சியில் வளங்குன்றியிருக்கும் நிலையையே பாலை என்றனர்.(2) பாலை நிலத்தில் இலைகளைக் கொண்டு வேயப்பட்ட குடிசை இருந்ததை மதுரைக்காஞ்சி இலைவேய் குரம்பை என்று கூறுகிறது.(3)
இந்த இலைகள் காய்ந்தால் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டனவாயினும் பாலை நிலத்தில் மழையில்லாத காலத்திற்கு அது போதுமானதாக இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
தமிழகத்தில் தொண்டை நாட்டுப் பகுதியிலுள்ள வேலூர் வெப்பம் மிகுந்த நகரமாக இருப்பதை இன்று நாம் காண்கிறோம். சங்க காலத்திலும் மிகுந்த வெப்பமுள்ள ஊராகவே அது இருந்திருக்கிறது. மிகுகின்ற வெயிலுக்குக் குடிசை வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் வருந்தத்தக்க அளவு வெப்பம் மிகுந்து விளங்குகின்ற குடிலில் எயினக்குல மகளிரான எயிற்றியர் இருந்ததை, விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை (4) என்று சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது.
எயினர் இல்லம்
எயினர் இல்லம் பற்றி இன்னும் சிறப்பாகப் பெரும்பாணாற்றுப் படையில் விளக்கப் பட்டுள்ளது. ஊகம் புல்லாலே வேயப்பட்ட உயர்ந்த நிலையையுடைய மதிலையும், மலையிடத்தே தூங்கும் தேனிறாலைப் போன்ற குதையினையுடைய அம்புக் கட்டினையும், கடிதாக ஒலிக்கும் துடிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலையும், சங்கிலியால் நாய்களைக் கட்டி வைத்துள்ள கிட்டுதற்கரிய காவலமைந்த வீடுகளையும், உயிர்வாழ் முள்வேலிகளையும் அதாவது முட்செடிகளையே காவல் மதிலாகவும் அதனைச் சூழ்ந்த காவல் காட்டினையும் உருண்ட கணைய மரமிட்ட ஒட்டுக் கதவினையும் கொண்டதாக அவை இருந்தன.(5) இவை எளிய குடிசைகளைவிட மேம்பட்ட நிலையைக் கொண்டதாக அறியலாகின்றன. கொடுமுடி வலைஞர் குடிசைகள்
மூங்கிற்கோலை வரிசையாகச் சார்த்தி வெண்மையான மரக்கொம்புகளை இடையிடையே கலந்து தாழை நாரால் கட்டி, தர்ப்பைப் புல்லால் வேயப்பட்ட கூரையை உடையதாக வலைஞர் குடிசைகள் இருந்தன. அதன் முற்றத்தில் வளைந்த காலையுடைய புன்னைக் கொம்பை வெட்டி அமைத்த பந்தலில் பசுமையான காய்கள் இருந்தன என வலைஞர் இல்லங்கள் பற்றிப் பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.(6)
உழவர் இல்லங்கள்
பெரும்பாணாற்றுப் படையில் உழவர்களின் இல்லங்கள் பற்றிய செய்திகள் சில உள்ளன. வயல் வரப்பிடத்தே புதிய வைக்கோலால் வேயப்பட்டிருந்த கவிந்த குடில் இருந்தது.(7) ஊருக்குள் உழவர்களின் வீடுகளின் பக்கத்தில் மாட்டுக் கன்றுகள் கட்டப்பட்ட முளைகள் நடப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத நெடிய வடிவுடன், அழியாத தன்மையுடையனவாய் முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்துநின்ற நல்ல இல்லங்களாக விளங்கின.(8)
தோப்புகளில் குடியிருப்போர் இல்லங்கள்
தென்னந்தோப்புகளில் யானையின் உடம்பு போன்ற சொரசொரப்பையுடைய வாடிய தென்னை மட்டைகளால் வேயப்பட்டனவாகவும், முற்றத்தில் மஞ்சளும் பூந்தோட்டங்களும் உடையனவாகவும் தனித்தனி வீடுகளாகக் குடில்கள் இருந்தன.(9) இன்றும் தென்னந்தோப்புகளில் இத்தகைய தனிக்குடில்கள் இருப்பதைக் காண்கிறோம்.
கோவலர் இருக்கை
ஆடு,மாடுகள் மேய்க்கும் இடையர்களின் குடிலில் ஆடுகள் தின்பதற்காகக் கயிற்றில் தழைகளைக் கட்டிய குறுகிய கால்கள் நடப்பட்டிருந்தன. நெருக்கமாகக் குச்சிகளைச் சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய படலால் ஆன கதவு இருந்தது. வரகுக்கற்றையால் வேயப்பட்டுக் கழிகளால் கட்டப்பட்ட நடமாடும் குடில் அதாவது செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லக் கூடிய வகையிலமைந்த தங்குமிடம் இருந்தது. பெரிய கூடை போன்ற இக்குடிலை இப்போதும் சிற்றூர்ப்புறங்களில் காணலாம். இது சேக்கை என்று கூறப்படுகிறது. அதில் படுத்தால் உறுத்தாமல் இருக்க, தோலாலான பாய் விரிக்கப் பட்டிருந்தது. ஆடுகளை முற்றத்தில் கட்டுவதற்காகத் தாம்புகளைக் கொண்ட குறுகிய முளைக்குச்சிகளும், முள்வேலிகளும் உடையதாக முல்லைநில ஊர் இருந்தது.(10)
பரதவர் குடியிருப்பு
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவரின் குடியிருப்புகள் பற்றிப் பட்டினப்பாலையில் செய்தி உள்ளது. போரில் இறந்த மறவர்க்கு நடும் நடுகல்லைச் சுற்றிலும் வேல்களை ஊன்றி உட்புறமாகக் கிடுகுகளை வேய்ந்து அரண் அமைப்பது போல நெடிய தூண்டிற்கோல் சாத்திய கூரையையுடையதாகக் குடியிருப்பு இருந்தது. அக்குடியிருப்பின் நடுவே நிலவினைச் சேர்ந்த இருள்போல வலைகிடந்து உலரும் மணல் முற்றத்தையுடையதாக மனை இருந்தது. (11)
பரதவர் குடியிருப்புப் பற்றிய செய்தியில் போர்மறவர் நடுகல் காக்கப்பட்டது பற்றிய செய்தியும் அறியக் கிடைக்கிறது.
2. பெரிய வீடுகள்
சிறுசிறு குடிசைகள் இருந்ததைக் கூறியுள்ளது போலப் பெரிய வீடுகளும், மாடங்களைக் கொண்ட வீடுகளும் ஊர்களிலும், நகரங்களிலும் இருந்ததையும் பத்துப்பாட்டு இலக்கியங்கள் எடுத்துக் கூறியுள்ளன.
முல்லை நில ஊர் வீடுகள்
முல்லை நிலத்தின் சிறிய ஊர்களிலுள்ள வீடுகளைப் பற்றிய செய்தி முல்லைப் பாட்டில் உள்ளது. முள்வேலியிட்ட தொழுவங்கள் இருந்தன. அங்கே பெண்யானைகள் நின்றாற்போன்ற குதிர்கள் முற்றத்தில் இருந்தன. வீடுகளின் முன்பு பந்தல்கள் இருந்தன. சிறிய உருளைகளையும்,கலப்பைகளையும் சார்த்தியதால் தேய்ந்த நெடிய சுவர்களைக் கொண்ட இல்லங்களில் கூரைகள் கார்காலத்தில் வேயப்பட்டு அழகுற விளங்கின என்கிறது முல்லைப்பாட்டு.(12)
மழைக்காலம் தொடங்கும்போது ஒழுகாதிருக்கப் புதிய கூரை வேயும் வழக்கம் இருந்துள்ளது என்பது இச்செய்தியால் அறியலாகின்றது.
நெடுநிலை மாடங்கள்
குடிசைகள்,சாதாரண வீடுகள் மட்டுமின்றி, செல்வச் செழிப்புள்ளோரின் மாட மாளிகைகளும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வானை நோக்கி மிகவும் உயர்ந்த மேல் மாடங்களை உடைய வீடுகள் இருந்தன. அவற்றில் இளவேனிற்காலத்தில் காற்று வருவதற்காகப் பலகணிகள் அமைக்கப் பட்டிருந்தன. மழைக்காலத்தில் அவை திறக்கப்படாமல் தாழிடப் பட்டிருந்தன.(13)
ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட படிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தப்பட்ட உயர்ந்த மாடங்களுடைய இல்லங்களும், சுற்றுத்திண்ணைகளையும், பல கட்டுக்களையும், நீண்ட இடைகழிகளையும் (நடவை, ரேழி என இப்போது சொல்லப்படுகிறது) உடையதாக வீடுகள் இருந்தன. அவை முகில்கள் தவழுமளவுக்கு உயரமான மாடங்களும், அவற்றில் தென்றல் வருவதற்காகக் காலதர்கள் (ஜன்னல்கள்) உடையனவாகவும் புகார் நகரத்து வீடுகள் இருந்துள்ளன.(14) கதவுகளில் புலி உருவங்கள் பொறிக்கப்பட்ட செல்வம் தங்கும் மதில்களுடைய அட்டிற்சாலைகளும் இருந்துள்ளன.(15)
மாடங்கள் உயரமாக இருந்ததோடு விசாலமாகவும் இருந்துள்ளன. மேல்நிலை மாடத்தில் மகளிர் பந்து விளையாடிய செய்தி இதைப் புலப்படுத்துகிறது.(16) பொதுவாக நகரங்களில் செல்வம் மிகுந்தவர்களின் வீடுகள் விண்ணுயர்ந்த மாடங்களைக் கொண்டு மதில்கள் சூழப்பட்டனவாக இருந்துள்ளன.(17) மாடமோங்கிய மல்லன் மூதூர் என்கிறது நெடுநல்வாடை.(18)
மதுரை நகரம் தேவர்களின் விண்ணுலகிற்குச் செல்லும்படி கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த மதிலினைக் கொண்டிருந்தது. அது கோட்டை மதிலாகும். அதன் நெடிய கதவுகளின் நிலையில் கொற்றவை உருவம் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு நெய்யிட்டதாலும், விளக்கு இட்டதாலும் கருப்பு நிறமாகிப் போன கதவுகளும் முகில்கள் உலவும் மலைபோன்று உயர்ந்த மாடங்களையும் உடையதாக இருந்துள்ளது.(19)
3.அரண்மனைகள்
குடிமக்கள் அவரவர் தகுதிக்கேற்பக் குடிசைகள்,எளிய வீடுகள், மாட மாளிகைகளில் வாழ்ந்ததைப் போல அரசர்களின் தகுதிக்கேற்ப அவர்களது அரண்மனைகள் சிறப்புற இருந்துள்ளன.அரண்மனைகளைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன.
நல்லியக்கோடனுடைய ஊரான ஆமூர் அரிய காவலையும், அகன்ற வீடுகளையும், அகழியையும் உடையதாக இருந்தது. அவ்வரசனின் அரண்மனை மேருமலை கண்ணைத் திறந்து பார்த்ததைப் போன்ற பெரிய வாயிலை உடையதாக இருந்தது.(20)
முல்லைப்பாட்டில் கூறப்படும் அரண்மனை தனக்குரிய இடமெல்லாம் பொன்னாலும், மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகை. அதில் மழை பொழியும் போது திரண்ட மழைநீர் வாயிலில் அருவியாக விழுந்து இனிய ஓசையை எழுப்பியது.(21)
நெடுநல்வாடையில் அரண்மனை பற்றிய செய்திகள் சிறப்பாக உள்ளன. நெடுநிலை மாடத்தின் கதவுகள் இரும்பு ஆணிகளையும், பட்டங்களையும் கொண்டு பிணித்து அதற்கு சிவப்பு நிற அரக்கைக் கொண்டு நிறம் சேர்க்கப் பட்டிருந்தது. இரண்டு மரங்களைச் சேர்த்துச் செய்யப் பட்ட கதவுகள் என்பது தெரியாதபடி ஒரே மரம் என்பதுபோலக் கைவினைத் திறத்தால் அமைத்திருந்தனர். குவளைமலர் உருவமும், புதுமையான கைப்பிடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உத்தரத்தில் நடுவில் திருமகள் உருவமும், இருபுறமும் செங்கழுநீர்ப் பூக்களும், நீராட்டும் இரண்டு யானைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பு இப்போது பல கோயில்களில் உள்ளதைக் காண்கிறோம்.
அரண்மனை வாயிலானது, வெற்றிக் கொடியை உயர்த்தியபடியே யானையின் மீது அமர்ந்து கொண்டு உள்ளே புகுமளவுக்கு உயரமாகவும், மலையின் நடுவே வெளியாகக் குடைந்து திறந்தது போன்ற கோபுர வாயிலாகவும் இருந்தது.
மனைகளோ, மலைகளைப் போன்று உயரமாக இருந்தன. அதன் சுவர்கள் வெள்ளியைப் போன்ற சுதை பூசப்பட்டிருந்தன. தூண்கள் நீலமணியைப் போலக் கருமையாகத் திரண்டிருந்தன. செம்பினால் செய்யப் பட்டது போன்ற நெடிய சுவர்களில் அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடி ஓவியங்கள் விளங்கின.(22)
4.கலங்கரை விளக்கம்
பண்டைத் தமிழர் கடல்கடந்து வணிகம் செய்வதிலும், மீன்பிடி தொழிலிலும், முத்துக் குளித்தலிலும் சிறந்து விளங்கியவர்கள். கடலில் தொழில் செய்வோர்க்குக் கரை திரும்ப உறுதுணையாக இருப்பது கலங்கரை விளக்கம்.
பண்டைத் தமிழகத்திலும் மிக உயர்ந்த கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வானம் கீழே விழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக்கோலைப் போல, விண்ணைத் தூண்டும்படி உயர்ந்திருந்தது. அதில் ஏணி சார்த்தியிருந்தது. அதன் உச்சிப்பகுதி ஏறுவதற்கு அரியதாக இருந்தது. அதன் கூரை ஓலைக் கற்றைகளால் வேயப்படாமல் சுண்ணச் சாந்திட்டதாக இருந்த மாடத்து உச்சியில் விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் கிடைக்கிறது.(23)கலங்கரை விளக்கம் வாழ்மனை அல்ல என்றாலும் பண்டைத் தமிழர் கட்டடக் கலை நுட்பத்தை எடுத்துரைக்க இங்கு கூறப்பட்டது.
5. பாசறைகள்
போருக்குச் செல்லும் மன்னர்களும், படையினரும் போர்க்களத்தே பாசறை அமைத்துத் தங்குவது வழக்கம். அப்படித் தங்கும் பாசறைகள் எப்படியிருந்தன என்பதை முல்லைப்பாட்டு விளக்கமாகக் கூறுகிறது.
கடல் போல் பரந்து கிடக்கும் போர்க்களப் பாசறையில் முள் வேலியாகிய மதில் அமைக்கப் பட்டு, தழைகளால் வேயப்பட்ட கூரையுடன் பாசறைகளிருந்தன.(24)
மறவர் அரண்
படை மறவர்களின் பாசறை இருக்கைகளில் வலிய வில்லை ஊன்றி, அவற்றின்மேல் தூணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றாலே வலித்துக் கட்டின இருப்பிடத்தில் குந்தக் கோல்களை ஊன்றி ஓலை அல்லது இலைகளாலான கிடுகுகளை நிரல்படப் பிணைத்து அந்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.(25)
அரசனின் தனி இருக்கை
அரசனுக்கென வசதியானதும், பாதுகாப்பு மிக்கதுமான தனி இருக்கை அமைக்கப் பட்டிருந்தது. நெடிய குத்துக் கோலுடன் பல நிறங்களைக் கொண்ட திரையை வளைத்து அரசனின் பாசறை அமைக்கப் பட்டிருந்தது. இன்றும் பல நிறங்களைக் கொண்ட துணிகளால் கூடாரங்களும், தற்காலிகப் பந்தல்களும் அமைப்பதை நேரில் காண்கிறோம், சங்க காலத்திலேயே இவ்வழக்கம் இருந்துள்ளதை முல்லைப்பாட்டு நமக்குத் தெரிவிக்கிறது.
அரசனின் பாசறை இரண்டு அறைகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. காவல் மற்றும் ஆலோசனைக்கு முன் அறையும், துயில் கொள்ளும் படுக்கை அறை ஒன்றுமாக அந்த இரு அறைகள் இருந்தன,(26)
6. கால்கோள் விழா
இல்லமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாயினும் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கும் போது அதற்கு ஒரு நல்ல நாள் பார்த்துக் கால்கோள் செய்வது நம் நாட்டில் இன்றும் நடைமுறையிலுள்ள ஒரு மரபு ஆகும். சங்க காலத்திலும் நாள், நேரம், பார்த்துக் கால்கோள் செய்யும் வழக்கமிருந்ததை நெடுநல்வாடை தெரிவிக்கிறது.
சித்திரைத் திங்களில் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் பகல் 15 நாழிகையளவில் ஞாயிற்று மண்டலம் நிலத்தின் நடுவண் பகுதியில் இயங்கும். இதை அறிய இரண்டு கோல்களை நிலத்தில் நட்டு வைப்பர். இக்கோல்களின் நிழல் வடக்கிலோ, தெற்கிலோ சாயாமல் அக்கோல்களிலேயே 15 நாழிகையில் அடங்கி நிற்கும். அந்த நாளில் அந்த நேரத்தை ஆய்ந்தறிந்து அவ்வேளையில் அரசர்களின் அரண்மனை கட்டுவதற்கான திருமுளைச் சாந்து என்னும் தொடக்கவிழாச் சடங்கினைச் செய்வர்.(27)
சங்ககாலத் தமிழர்கள் அவரவர் வாழும் நிலங்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கேற்ப இல்லங்கள் அமைத்து வாழ்ந்திருக்கின்றனர், ஆனால் அவை அவர்களுக்கு நிறைவளிக்கும் வகையில் இருந்ததாகவே கருத வைக்கும் வகையில் பத்துப்பாட்டு இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் உள்ளன.
அடிக்குறிப்புகள்: 1. குறிஞ்சிப்பாட்டு, அடி - 153.
2. சிலப்பதிகாரம், காடுகாண்காதை 64-66.
3. மதுரைக்காஞ்சி - 310.
4. சிறுபாணாற்றுப்படை, 173 - 174.
5. பெரும்பாணாற்றுப்படை, 122 - 127.
6. மேலது, 263 - 267.
7. மேலது, 243 - 247.
8, மேலது, 225.
9. மேலது, 351 - 355.
10. மேலது, 147 - 154.
11. பட்டினப்பாலை, 78 - 83,
12. பெரும்பாணாற்றுப்படை, 184 - 191. 13. நெடுநல்வாடை, 60 - 63.
14. பட்டினப்பாலை, 142 - 145, 151.
15. மேலது, 40 - 43.
16. பெரும்பாணாற்றுப்படை, 327- 333.
17. மேலது, 369
18. நெடுநல்வாடை, 29.
19. மதுரைக்காஞ்சி, 352-355.
20.சிறுபாணாற்றுப்படை, 187-188, 205-206.
21. முல்லைப்பாட்டு, 86-88.
22.நெடுநல்வாடை, 80-88, 108-114.
23. பெரும்பாணாற்றுப்படை, 346-350.
24. முல்லைப்பாட்டு, 27-29.
25. மேலது, 39-42.
26.மேலது, 43-44, 64.
27.நெடுநல்வாடை, 73-78.
Wednesday, April 20, 2011
தமிழகத்தின் முதல் மாமன்னன் இராசராசசோழன்
தமிழகத்தை ஆட்சிபுரிந்த பண்டைய மன்னர்களில் மிகுந்த சிறப்பைப் பெற்றவன் மாமன்னன் இராசராசசோழன். சேர, சோழ, பாண்டிய, கொங்கு, தொண்டை எனும் தமிழகத்தின் ஐந்து நாடுகளையும் ஒருசேர முழுமையாக முதன்முதலில் ஆட்சிபுரிந்தவன் இவன். மேலும் தமிழகத்திற்கு அப்பாலும், கடல் கடந்தும் தன் ஆட்சிப்பரப்பை விரிவுபடுத்திய முதல் தமிழ்மன்னன் என்ற சிறப்பும் இராசராசனுக்கே உரியது.
இராசராசனின் சிறப்புகளுக்குப் பெரிதும் காரணமாக எடுத்துக் கூறத்தக்கவற்றுள் தஞ்சைப் பெரிய கோயில், இராசராசனின் வெற்றிகள் மற்றும் மெய்க்கீர்த்தி, இராசராசனின் ஆட்சி நிர்வாகம், தேவாரப்பணி, கலைப்பணிகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றை இக்கட்டுரை சுருக்கமாக விளக்குகிறது.
தஞ்சைப் பெரிய கோயில்
இராசராசசோழ மன்னனின் சிறப்புகள் அனைத்திலும் விஞ்சி நிற்பது அம்மன்னன் கட்டுவித்த தஞ்சை பெருவுடையார் கோயில்தான். தஞ்சாவூர் என்ற பெயரைச் சொன்னாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் பெரிய கோயில்தான். அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்றது இக்கோயில் என்பது நாடறிந்த செய்தி.
உலகத் தொன்மைக் கருவூலமாக இன்று பாதுகாக்கப்படும் இக்கோயில் கட்டப்பட்டுத் தற்போது ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்றன. காஞ்சீபுரத்தில் இராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயிலின் அழகில் மயங்கிய இராசராசனின் உள்ளத்தில் தோன்றிய எண்ணமே இக்கோயில் கட்டப்பட அடிப்படையாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
இந்தக் கோயில் ஒரு மாபெரும் கலைக்கூடமாக அமைக்கப் பட்டுள்ளது. கட்டடக் கலைத்திறன், எழில்மிகு சிற்பங்கள், ஓவியங்கள், வானோக்கி உயர்ந்த அழகிய கோபுரம், இராசராசனின் வெற்றிச் சிறப்பை எடுத்துரைக்கும் வாயில்கள், 12 அடி 10 அங்குலம் கொண்ட மாபெரும் சிவலிங்கம் என இவற்றின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மலைகள், கற்கள் வளம் இல்லாத சோழநாட்டுத் தஞ்சை நகரில் இத்தகையதொரு கோயிலைக் கட்டுவதற்கு, பெரும் ஊர்திகள், இன்றைய புதுவகைப் பெரும் பொறிகள் இல்லாத காலத்தில் எத்தனை அரும்பெரும் பணிகளைச் செய்திருக்க வேண்டுமென எண்ணிப் பார்த்தால் பெரும் வியப்பு ஏற்படும்.
கோயிலின் சிறப்பு, சொல்லச் சொல்ல விரியுமாதலின் அதை இக்கட்டுரையில் அடக்க இயலாது. இதையறிந்தே தொல்லியலறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் இக்கோயிலை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து இராஜராஜேச்சுரம் என்னும் பெரும் நூலை ஒரு கலைக் களஞ்சியமாக ஆக்கித் தந்துள்ளார்.
இராசராசனின் வெற்றிகளும் மெய்க்கீர்த்தியும்
முன்னரே கூறியபடி தமிழக மன்னர்களிலேயே முதல் மாமன்னன் இராசராசசோழன்தான். சோழநாட்டைத் தாண்டி இவன் தன் பேரரசை மிகப் பெரிதாக விரிவுபடுத்தினான். பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து அமரபுயங்க பாண்டியனையும், சேரநாட்டின் மீது போர் தொடுத்து பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். வடக்கில் கங்கர்களைத் தோற்கடித்து மைசூர்ப் பகுதியையும், சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்து சாளுக்கிய நாட்டையும் கைப்பற்றினான். கலிங்கம் வரை இராசராசனின் ஆட்சி பரவியிருந்திருக்கிறது.
இராசராசன் பெரும் கடற்படையை வைத்திருந்ததால் கடல் கடந்து சென்றும் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். சேரநாட்டின் மீது படையெடுத்த போது காந்தளூர்ச்சாலை என்னும் துறைமுகத்திலிருந்த சேரனின் கப்பற்படையை முழுமையாக அழித்ததை இராசராசனின் மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது.
கடல்கடந்த நாடுகளான இலங்கை, இலட்சத்தீவு, கடாரம் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்துச் சென்று அவற்றைக் கைப்பற்றியுள்ளான்.
மன்னர்கள் பெற்ற வெற்றியையும், சிறப்புக்களையும் குறிப்பிடும் வகையில் மெய்க்கீர்த்தி எழுதப்படும் வழக்கம் முதலில் மாமன்னன் இராசராசனிடமிருந்துதான் தொடங்கியுள்ளது. ஓர் இலக்கிய நூலுக்குப் பாயிரம் போல மன்னனின் கல்வெட்டுச் செய்திகள் அனைத்திலும் தொடக்கமாக இந்த மெய்க்கீர்த்தி பொறிக்கப் பட்டுள்ளது.
இராசராசனின் ஆட்சி நிர்வாகம்
இராசராசனின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. அரசனுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் பலர் இருந்துள்ளனர். பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கூற்றம் அல்லது வளநாடுகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்கள் நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன.
மண்டலங்கள் அரசனின் நெருங்கிய உறவினர்களான ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன, கோட்டங்களில் இருந்த பொறுப்பாளர்கள் தங்கள் கோட்டங்களில் மக்கள் பணிகளைச் செய்து வந்ததுடன் மண்டல ஆளுநர்களுக்கும் உதவியாக இருந்தனர். மண்டல ஆளுநர்கள் தங்கள் மண்டலங்களின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டதுடன் மைய அரசின் தலைவனான பேரரசனுக்கு உதவினார்கள்.
குடியிருப்புகளில் பிராமணர்களின் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், பொதுமக்களின் குடியிருப்பு ஊர்கள் எனவும், வணிகர்களின் குடியிருப்பு நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை கிராம, ஊர், நகர அவைகள் நிர்வாகம் செய்தன. இவற்றிற்கான பொறுப்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இராசராசனின் உள்ளாட்சியில் மக்களாட்சி நடைபெற்றதை இதன்மூலம் அறியலாம்.
இராசராசன் கால நிர்வாக முறையில் குறிப்பிடத்தக்கது தன் நாட்டின் விளைநிலங்களனைத்தையும் துல்லியமாக அளந்து அவற்றின் தரத்தையும் நிர்ணயித்ததாகும். அதற்கென உலகளந்தான் கோல் என்ற அளவை பயன்படுத்தப் பட்டுள்ளது.
கடல்கடந்த வாணிகம் தென்கிழக்காசியா மற்றும் சீனா வரை பரவியிருந்துள்ளது சிறப்புக்குரியதாகும். அன்றைக்கிருந்த தமிழர் கப்பற்கலை நுட்பம் இதற்குப் பெரிதும் உதவியுள்ளது.
இராசராசனின் தேவாரப்பணி
தேவாரம் முழுமையாக அழிந்துவிடும் நிலையிலிருந்த போது அதனை அழியாமல் காத்து நமக்குக் கிடைக்கச் செய்த பெருமைக்கு உரியவன் இராசராசன். தில்லைத் திருக்கோயிலில் வைக்கப் பட்டிருந்த தேவார ஓலைச்சுவடிகளை வெளிக்கொணர முயன்ற போது தில்லைவாழ் அந்தணர்கள் அதைத் தர மறுத்தார்களாம். தேவாரத்தை எழுதியவர்களே வந்தால்தான் அவற்றை வைத்துள்ள அறைக்கதவைத் திறக்க அனுமதிப்போம் என்று கட்டுப்பாடு விதித்து மறுத்தார்களாம்.
மறைந்து போன பெருமக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருதல் இயலாத செயலென்பது உலகறிந்தது. ஆனால் இவ்வாறு மறுத்தது தேவாரம் முழுதாய் அழிந்திட வேண்டும் என்ற கெடுமதியால்தான். ஆனால் இராசராசன் தேவார நால்வரின் திருமேனிகளைச் செய்வித்து அவற்றைக் கொண்டு போய் அறைக்கதவைத் திறக்க வைத்து, கரையான் தின்றவை போக எஞ்சிய தேவாரத்தை வெளிக்கொணர்ந்தான் என்ற செய்தி தேவாரத்தை இராசராசன் காத்தளித்ததை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் 'திருவிசைப்பா' பாடிய கருவூர்த்தேவர் இராசராசனுக்கு மிக நெருக்கமானவராக விளங்கியவர். இவர்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் சிவபெருமானைப் பந்தனம் செய்வித்தவர் என்று சொல்லப்படுகிறது. கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பதிகத்தில் தஞ்சைப் பெரிய கோயில் சிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இராசராசன் சிறந்த சிவப்பற்றுள்ளவனாக இருந்தமையால் பெரிய கோயில் கட்டுவித்தான். தன்னைச் 'சிவபாத சேகரன்' என்று சொல்லிக் கொண்டான். அந்த சிவப்பணி வரிசையில் தேவாரப் பணியையும் செய்து சிறப்புற்றான்.
கலைப்பணி
இராசராசன் காலத்தில் சிற்பம், ஓவியம், இசை, ஆடல் முதலிய கலைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலும் அதிலுள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் இராசராசன் காலத்திய சிற்பக்கலை வளர்ச்சியையும், மேன்மையையும், இராசராசனின் கலையுணர்வையும் எடுத்துக் காட்டுகின்றன. தஞ்சைக் கோயிலில் உலோகத்தாலான திருமேனிகளும் இராசராசன் காலத்தில் பல செய்யப் பட்டுள்ளன.
கோயிலில் இராசராசன் காலத்திலேயே சுவர்களில் வண்ண ஓவியங்கள் பல தீட்டப்பட்டுள்ளன. இவை சிதைந்த நிலையில் இன்றைக்கும் காண முடிகின்றன. இவை இராசராசன் காலத்திய ஓவியக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
தஞ்சையில் பெரிய கோயிலிலும், பிற கோயில்களிலும் ஆடுவதற்காக 400 ஆடல் மகளிர் பணியமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் துணையாக ஆடலாசிரியர்களும், இசைக் கலைஞர்களும் பணியமர்த்தப் பட்டிருந்தனர். இவர்களுக்கு ஊதியம், விளைநிலங்கள், வீடுகள் முதலியன அளிக்கப் பட்டிருந்ததை தஞ்சைப் பெரிய கோயிலின் வெளிப்புறச் சுவரின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
இச்செய்திகளின் வழியாக இராசராசன் இசை மற்றும் ஆடல் கலைகளுக்குச் செய்த பேருதவிகள் அறியலாகின்றன.
மாமன்னன் இராசராசசோழன் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் அரும்பெரும் பணிகளைச் செய்து புகழ் பெற்றுள்ளான். இவ்வளவு சிறப்புப் பெற்ற இராசராசன் காலத்தில்தான் தமிழகத்தில் வடமொழிக்கு ஏற்றம் கிடைக்கத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இராசராசனின் சிறப்புகளுக்குப் பெரிதும் காரணமாக எடுத்துக் கூறத்தக்கவற்றுள் தஞ்சைப் பெரிய கோயில், இராசராசனின் வெற்றிகள் மற்றும் மெய்க்கீர்த்தி, இராசராசனின் ஆட்சி நிர்வாகம், தேவாரப்பணி, கலைப்பணிகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை. இவற்றை இக்கட்டுரை சுருக்கமாக விளக்குகிறது.
தஞ்சைப் பெரிய கோயில்
இராசராசசோழ மன்னனின் சிறப்புகள் அனைத்திலும் விஞ்சி நிற்பது அம்மன்னன் கட்டுவித்த தஞ்சை பெருவுடையார் கோயில்தான். தஞ்சாவூர் என்ற பெயரைச் சொன்னாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் பெரிய கோயில்தான். அந்த அளவுக்குச் சிறப்புப் பெற்றது இக்கோயில் என்பது நாடறிந்த செய்தி.
உலகத் தொன்மைக் கருவூலமாக இன்று பாதுகாக்கப்படும் இக்கோயில் கட்டப்பட்டுத் தற்போது ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்றன. காஞ்சீபுரத்தில் இராசசிம்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்ட கயிலாசநாதர் கோயிலின் அழகில் மயங்கிய இராசராசனின் உள்ளத்தில் தோன்றிய எண்ணமே இக்கோயில் கட்டப்பட அடிப்படையாக அமைந்தது என்று கூறப்படுகிறது.
இந்தக் கோயில் ஒரு மாபெரும் கலைக்கூடமாக அமைக்கப் பட்டுள்ளது. கட்டடக் கலைத்திறன், எழில்மிகு சிற்பங்கள், ஓவியங்கள், வானோக்கி உயர்ந்த அழகிய கோபுரம், இராசராசனின் வெற்றிச் சிறப்பை எடுத்துரைக்கும் வாயில்கள், 12 அடி 10 அங்குலம் கொண்ட மாபெரும் சிவலிங்கம் என இவற்றின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
மலைகள், கற்கள் வளம் இல்லாத சோழநாட்டுத் தஞ்சை நகரில் இத்தகையதொரு கோயிலைக் கட்டுவதற்கு, பெரும் ஊர்திகள், இன்றைய புதுவகைப் பெரும் பொறிகள் இல்லாத காலத்தில் எத்தனை அரும்பெரும் பணிகளைச் செய்திருக்க வேண்டுமென எண்ணிப் பார்த்தால் பெரும் வியப்பு ஏற்படும்.
கோயிலின் சிறப்பு, சொல்லச் சொல்ல விரியுமாதலின் அதை இக்கட்டுரையில் அடக்க இயலாது. இதையறிந்தே தொல்லியலறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்கள் இக்கோயிலை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து இராஜராஜேச்சுரம் என்னும் பெரும் நூலை ஒரு கலைக் களஞ்சியமாக ஆக்கித் தந்துள்ளார்.
இராசராசனின் வெற்றிகளும் மெய்க்கீர்த்தியும்
முன்னரே கூறியபடி தமிழக மன்னர்களிலேயே முதல் மாமன்னன் இராசராசசோழன்தான். சோழநாட்டைத் தாண்டி இவன் தன் பேரரசை மிகப் பெரிதாக விரிவுபடுத்தினான். பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்து அமரபுயங்க பாண்டியனையும், சேரநாட்டின் மீது போர் தொடுத்து பாஸ்கர ரவிவர்மனையும் தோற்கடித்தான். வடக்கில் கங்கர்களைத் தோற்கடித்து மைசூர்ப் பகுதியையும், சாளுக்கியர்கள் மீது போர் தொடுத்து சாளுக்கிய நாட்டையும் கைப்பற்றினான். கலிங்கம் வரை இராசராசனின் ஆட்சி பரவியிருந்திருக்கிறது.
இராசராசன் பெரும் கடற்படையை வைத்திருந்ததால் கடல் கடந்து சென்றும் பல வெற்றிகளைப் பெற்றுள்ளான். சேரநாட்டின் மீது படையெடுத்த போது காந்தளூர்ச்சாலை என்னும் துறைமுகத்திலிருந்த சேரனின் கப்பற்படையை முழுமையாக அழித்ததை இராசராசனின் மெய்க்கீர்த்தி தெரிவிக்கிறது.
கடல்கடந்த நாடுகளான இலங்கை, இலட்சத்தீவு, கடாரம் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்துச் சென்று அவற்றைக் கைப்பற்றியுள்ளான்.
மன்னர்கள் பெற்ற வெற்றியையும், சிறப்புக்களையும் குறிப்பிடும் வகையில் மெய்க்கீர்த்தி எழுதப்படும் வழக்கம் முதலில் மாமன்னன் இராசராசனிடமிருந்துதான் தொடங்கியுள்ளது. ஓர் இலக்கிய நூலுக்குப் பாயிரம் போல மன்னனின் கல்வெட்டுச் செய்திகள் அனைத்திலும் தொடக்கமாக இந்த மெய்க்கீர்த்தி பொறிக்கப் பட்டுள்ளது.
இராசராசனின் ஆட்சி நிர்வாகம்
இராசராசனின் ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் மிகச் சிறப்பாக இருந்துள்ளது. அரசனுக்கு உதவுவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகள், அலுவலர்கள் பலர் இருந்துள்ளனர். பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கூற்றம் அல்லது வளநாடுகளாகவும் பிரிக்கப் பட்டிருந்தன. இக்கூற்றங்கள் நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தன.
மண்டலங்கள் அரசனின் நெருங்கிய உறவினர்களான ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன, கோட்டங்களில் இருந்த பொறுப்பாளர்கள் தங்கள் கோட்டங்களில் மக்கள் பணிகளைச் செய்து வந்ததுடன் மண்டல ஆளுநர்களுக்கும் உதவியாக இருந்தனர். மண்டல ஆளுநர்கள் தங்கள் மண்டலங்களின் நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டதுடன் மைய அரசின் தலைவனான பேரரசனுக்கு உதவினார்கள்.
குடியிருப்புகளில் பிராமணர்களின் குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், பொதுமக்களின் குடியிருப்பு ஊர்கள் எனவும், வணிகர்களின் குடியிருப்பு நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவற்றை கிராம, ஊர், நகர அவைகள் நிர்வாகம் செய்தன. இவற்றிற்கான பொறுப்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இராசராசனின் உள்ளாட்சியில் மக்களாட்சி நடைபெற்றதை இதன்மூலம் அறியலாம்.
இராசராசன் கால நிர்வாக முறையில் குறிப்பிடத்தக்கது தன் நாட்டின் விளைநிலங்களனைத்தையும் துல்லியமாக அளந்து அவற்றின் தரத்தையும் நிர்ணயித்ததாகும். அதற்கென உலகளந்தான் கோல் என்ற அளவை பயன்படுத்தப் பட்டுள்ளது.
கடல்கடந்த வாணிகம் தென்கிழக்காசியா மற்றும் சீனா வரை பரவியிருந்துள்ளது சிறப்புக்குரியதாகும். அன்றைக்கிருந்த தமிழர் கப்பற்கலை நுட்பம் இதற்குப் பெரிதும் உதவியுள்ளது.
இராசராசனின் தேவாரப்பணி
தேவாரம் முழுமையாக அழிந்துவிடும் நிலையிலிருந்த போது அதனை அழியாமல் காத்து நமக்குக் கிடைக்கச் செய்த பெருமைக்கு உரியவன் இராசராசன். தில்லைத் திருக்கோயிலில் வைக்கப் பட்டிருந்த தேவார ஓலைச்சுவடிகளை வெளிக்கொணர முயன்ற போது தில்லைவாழ் அந்தணர்கள் அதைத் தர மறுத்தார்களாம். தேவாரத்தை எழுதியவர்களே வந்தால்தான் அவற்றை வைத்துள்ள அறைக்கதவைத் திறக்க அனுமதிப்போம் என்று கட்டுப்பாடு விதித்து மறுத்தார்களாம்.
மறைந்து போன பெருமக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து வருதல் இயலாத செயலென்பது உலகறிந்தது. ஆனால் இவ்வாறு மறுத்தது தேவாரம் முழுதாய் அழிந்திட வேண்டும் என்ற கெடுமதியால்தான். ஆனால் இராசராசன் தேவார நால்வரின் திருமேனிகளைச் செய்வித்து அவற்றைக் கொண்டு போய் அறைக்கதவைத் திறக்க வைத்து, கரையான் தின்றவை போக எஞ்சிய தேவாரத்தை வெளிக்கொணர்ந்தான் என்ற செய்தி தேவாரத்தை இராசராசன் காத்தளித்ததை நமக்கு எடுத்துக் கூறுகிறது.
பன்னிரு திருமுறை ஆசிரியர்களில் 'திருவிசைப்பா' பாடிய கருவூர்த்தேவர் இராசராசனுக்கு மிக நெருக்கமானவராக விளங்கியவர். இவர்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் சிவபெருமானைப் பந்தனம் செய்வித்தவர் என்று சொல்லப்படுகிறது. கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பதிகத்தில் தஞ்சைப் பெரிய கோயில் சிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இராசராசன் சிறந்த சிவப்பற்றுள்ளவனாக இருந்தமையால் பெரிய கோயில் கட்டுவித்தான். தன்னைச் 'சிவபாத சேகரன்' என்று சொல்லிக் கொண்டான். அந்த சிவப்பணி வரிசையில் தேவாரப் பணியையும் செய்து சிறப்புற்றான்.
கலைப்பணி
இராசராசன் காலத்தில் சிற்பம், ஓவியம், இசை, ஆடல் முதலிய கலைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலும் அதிலுள்ள சிற்பங்களும், கல்வெட்டுகளும் இராசராசன் காலத்திய சிற்பக்கலை வளர்ச்சியையும், மேன்மையையும், இராசராசனின் கலையுணர்வையும் எடுத்துக் காட்டுகின்றன. தஞ்சைக் கோயிலில் உலோகத்தாலான திருமேனிகளும் இராசராசன் காலத்தில் பல செய்யப் பட்டுள்ளன.
கோயிலில் இராசராசன் காலத்திலேயே சுவர்களில் வண்ண ஓவியங்கள் பல தீட்டப்பட்டுள்ளன. இவை சிதைந்த நிலையில் இன்றைக்கும் காண முடிகின்றன. இவை இராசராசன் காலத்திய ஓவியக்கலை வளர்ச்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
தஞ்சையில் பெரிய கோயிலிலும், பிற கோயில்களிலும் ஆடுவதற்காக 400 ஆடல் மகளிர் பணியமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களுக்குத் துணையாக ஆடலாசிரியர்களும், இசைக் கலைஞர்களும் பணியமர்த்தப் பட்டிருந்தனர். இவர்களுக்கு ஊதியம், விளைநிலங்கள், வீடுகள் முதலியன அளிக்கப் பட்டிருந்ததை தஞ்சைப் பெரிய கோயிலின் வெளிப்புறச் சுவரின் வடமேற்குப் பகுதியில் காணப்படும் பெரிய கல்வெட்டில் பொறிக்கப் பட்டுள்ள செய்திகள் மூலம் அறிய முடிகின்றது.
இச்செய்திகளின் வழியாக இராசராசன் இசை மற்றும் ஆடல் கலைகளுக்குச் செய்த பேருதவிகள் அறியலாகின்றன.
மாமன்னன் இராசராசசோழன் தமிழக வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் வகையில் அரும்பெரும் பணிகளைச் செய்து புகழ் பெற்றுள்ளான். இவ்வளவு சிறப்புப் பெற்ற இராசராசன் காலத்தில்தான் தமிழகத்தில் வடமொழிக்கு ஏற்றம் கிடைக்கத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Labels:
ஆய்வு,
இராசராசசோழன்,
தஞ்சைப்பெரியகோயில்,
மெய்க்கீர்த்தி
Wednesday, February 17, 2010
தலைவர் பணிதலைநின்ற திருவணையார் திருவெண்காட்டு நங்கை
சிவனடியார்களான திருத்தொண்டர்களின் வரலாற்றைத் தம் பெரியபுராணத்தில் எடுத்துரைத்தவர் சேக்கிழார் பெருமான். அதில் அத்திருத்தொண்டர்களை நெறிப்படுத்தியவர்களாகவும், தாமே தொண்டு செய்பவர்களாகவும், தொண்டர் பணிக்குத் துணை நின்றவர்களாகவும் விளங்கும் மங்கை நல்லார்களின் அரும்பணிகளையும், பெருமைகளையும் சிறப்பாக விளக்கியுள்ளார்.
ஒருவனுக்கு மனைவி பெருமையுடையவளாக இருந்தால் அவனுக்கு இல்லாதது யாது? என்பார் வள்ளுவப் பெருந்தகையார். அப்படிப்பட்ட மனைவியரைப் பெற்ற திருத்தொண்டர் பலரில் சிறுத்தொண்ட நாயனார் ஒரு முதன்மையான இடத்தை வகிக்கிறார். அவரது துணைவியாரான திருவெண்காட்டு நங்கை கணவரது திருத்தொண்டில் செய்த அரும்பணியை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிறுத்தொண்ட நாயனார்
பல்லவ மன்னர் நரசிம்மவர்மரின் படைத் தலைவராக இருந்து வடதிசைப் போரில் வாதாபி நகரை அழித்து வெற்றியைக் கண்டவர் பரஞ் சோதியார். பின்னர் படைத் தொழிலினின்றும் நீங்கி சிவத்தொண்டுக்கு வந்தவர். சிவனடியார்களுக்கு முன்னர் தம்மை சிறு தொண்டராக்கிக் கொண்டு அவர்களுக்குப் பணிசெய்ததால் இவர் சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பெற்றார். பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள பல நாயன்மார்களைப் போல இவரும் சிவத்தொண்டர்களுக்கு முதலில் உணவிட்டு அதன் பின்னர் தாம் உண்ணுதலை வழக்கமாகக் கடைப்பிடித்து ஒழுகினார். இவருக்கு உற்ற துணைவியாராய் வாய்த்தவர் திருவெண்காட்டு நங்கை அம்மையார்.
திருவெண்காட்டு நங்கை
சிறுத்தொண்டரின் மனைவியார் திருவெண்காட்டு நங்கை என்று குறிப்பிடப்படுகிறார். இவரது பெயரே இதுதானா, அன்றி திருவெண்காடு ஊரைச் சேர்ந்தவராக இருந்து இப்பெயர் பெற்றாரா என்பது அறியக்கிடைக்கவில்லை.
தீதில்குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்றே சேக்கிழார் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் கல்கி தனது சிவகாமியின் சபதம் புதினத்தில் இந்த அம்மையாரை திருவெண்காட்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டுள்ளார். சிறுத்தொண்டரான பரஞ்சோதியார்க்கும் - திருவெண்காட்டு நங்கையார்க்கும் பிறந்த ஆண் மகவு சீராளன்.
சிறுத்தொண்ட நாயனார் புராணச் சுருக்கம்
சிறுத்தொண்டர் நாள்தோறும் சிவனடியார்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து முன்னம் உணவு உண்ணச் செய்து அதன் பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டு ஒழுகினார். திருவெண்காட்டு நங்கையாரும் உறுதுணையாக இருந்து வந்தார். இவர்கள் வீட்டில் பணி செய்த தாதி சந்தனம் என்னும் பெயருடையவர்.
சிவபெருமான் சிறுத்தொண்டரின் தொண்டினை அறிந்து அவருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். எப்போதும் அடியாரைச் சோதித்தே அருள்புரியும் தன்மை கொண்டவராதலால் வயிரவச் சிவனடியார் கோலத்தோடு வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்கிறார். சிறுத்தொண்டரும் திருவெண்காட்டு நங்கையாரும் தம் பிள்ளையைக் கறி சமைத்து உண்ணத் தருகின்றார்.
கறியை உண்ணாது, மகன் சீராளனை அழைக்குமாறு கூறினார் வயிரவக்கோலச் சிவபெருமான். இவர்கள் மகனைக் கூவி அழைக்க அவன் பள்ளியிலிருந்து வருகிறான். இவர்கள் வயிரவரைப் பார்க்கத் திரும்பினால் அவர் மறைந்துவிடுகிறார். கறியுணவும் காணவில்லை. பின்னர் உமையம்மையார் மற்றும் புதல்வர் முருகனோடு காட்சி தந்து அனைவரையும் சிவனுலகத்திற்கு அழைத்துச் சென்றார். இதுதான் கதைச் சுருக்கம்.
இனி தலைவர் பணி தலைநின்ற திருவெண்காட்டு நங்கையின் தன்மைகளைப் பார்ப்போம்.
திருவெண்காட்டு நங்கையின் கற்புத்திறம்
கணவனையன்றிப் பிறிதொரு ஆடவனை மனத்தாலும் எண்ணாத தன்மையைக் கற்பெனக் கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கணவனோடு ஒத்த கருத்தோடு இணைந்து வாழ்தலும், கணவனுக்குப் பணிவிடை செய்தலையும், கணவனது வாழ்வுக்காக எந்த ஈகத்தையும் செய்தலையும் கற்புத் தன்மையாகவே கொள்ளலாம்.
வள்ளுவப் பெருந்தகையார் தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதெழுபவளைப் பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று கூறுவது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
திருவெண்காட்டு நங்கையார் நாள்தோறும் தன் கணவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவனடியார்களுக்கு உணவு சமைத்து விருந்தோம்பி வருதலைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
ஆனால் சிவனடியாராக இருந்தாலும் அவர் அந்நிய ஆடவராக இருந்ததால் அவரை வணங்கிப் பணிவிடை செய்தாலும் அந்த அடியார்களைத் தீண்டியதில்லை. இதை சேக்கிழார் பெருமான் அடியவராக வந்த சிவபெருமானுக்குத் திருவடிகளைக் கழுவும்போது நங்கையார் அப்பணிவிடையைச் செய்யவில்லை. அவர் நீர்வார்க்க சிறுத்தொண்டரே கால்களைக் கழுவினார் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து,கணவனுக்காகத் தான் பெற்ற மகனையே இழக்கத் துணிகிறார். கணவர் சிவனடியார்க்கு உணவிடாமல் உண்ணும் நிலை வந்தால் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்னும் பண்பு நிலையுடையவர். எனவே கணவரின் அரிய உயிரை எனக்கு இந்தப் புதல்வன் அளித்தான் என்றார்.
.... கணவனார் அருமை உயிரை எனக்களித்தான்... (3723)
என்னும் பாடலடிகளில் சேக்கிழார் இதனைக் கூறுகிறார்.
தலைவர் பணி தலை நிற்றல்
சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிலுள்ள கணபதீச்சுரம் என்னும் கோயிலில் அருள்புரியும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அத்தோடு அடியார்க்குத் திருவமுது செய்து உண்பித்தலைத் தலையாய தொண்டாய்ச் செய்து வந்தார்.
இந்தத் தொண்டுக்கு அவருடன் ஒத்துப்போய் உதவுபவராக வந்தமைந்தவர் திருவெணகாட்டு நங்கை. இவரை சிவபெருமானின் அடியவர்களுக்கு வேண்டிய பணிகளையெல்லாம் செய்பவராய்க் குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்று சேக்கிழார் பெருமான் அறிமுகப் படுத்துகிறார். வேதகா ரணர்அடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கை எனப் பாடலில் இவரது பெருமையை எடுத்துரைக்கிறார்.
தலைவர் பணியில் தலைநிற்றல் அவரது பெருமைக்குரிய அரும்பணியாகக் குறிப்பிடுவது தான் பெற்ற மகனையே கணவரது திருத்தொண்டுக்காக இழக்கத் துணிந்தது. இது வேறு எந்தத் ஒரு நற்றாயாலும் செய்ய இயலாத செயல்.
பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலுட்டிச் சீராட்டி வளர்த்த மகன். குழந்தை பிறந்த போது அலங்கரித்துப் பெருமை கொண்டு சுற்றத்தார் மகிழ்ச்சியடைந்தனர். இந்த உவகை மேலோங்கித் திருச்செங்காட்டங்குடியிலுள்ள மக்கள் எல்லோரும் நெய்யாடல் விழாச் செய்து கொண்டாடினர். அக்குழந்தை அந்த ஊருக்கே திருமகனாக விளங்கியிருக்கிறது. அதை இழக்கத் துணிந்திருக்கிறார் திருவெண்காட்டு நங்கை.
அஃறிணை உயிர்கள் கூடத் தாம் ஈன்றெடுத்த மகவைத் தம் கண் முன்னால் இழக்கத் துணிவதில்லை. காக்கையின் குஞ்சு கூட்டிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டால் தாய்க் காக்கை அந்த வழியில் போவோரையெல்லாம் பறந்து சென்று கொத்த முயல்கிறது. கன்றை ஈன்றெடுத்த ஆவினம் அதை எவ்வளவு அன்போடு பால் தந்து காக்கிறது. இதைத்தான், கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல் எனப் பராபரக் கண்ணி கூறுகிறது.
பறவைகளும், விலங்குகளுமே இப்படி இருக்கையில் ஆறறிவு பெற்ற மனிதப் பிறவியைக் பற்றிச் சொல்லவும் கூடுமோ
சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டி என்ற அணி, இரு காதுகளிலும் குதம்பை என்ற அணி, கழுத்தில் கண்டசரம் என்ற அணி, மார்பில் ஐம்படைத்தாலி என்ற அணி, கைகளில் வைரத்தால் ஆன சரி என்ற அணி, கால்களில் சதங்கை என்ற அணி என உடல் முழுவதும் அணி பூட்டி அலங்கரித்துச் சீராட்டி வளர்த்துப் பள்ளிக்குச் செல்லும் சிறுவனைச் சிவனடியாருக்குப் பிள்ளைக் கறியாகத் தரக் கணவனோடு உடன்படுகிறார். ஒரு குடும்பத்துக்கு ஒரே மகனாக உள்ள சிறுவனைத் தந்தை அரியவும் தாய் பிடிக்கவும் அப்போது இருவரும் தமக்குள் உள்ளம் மகிழ்ந்து குற்றம் இல்லாது அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாகும் எனக் கேட்கிறார் வைரவ வேட இறைவன்.
அப்படியே செய்ய ஒப்புதல் தந்தார் சிறுத்தொண்டர். தன் மகனை விருந்தாக்க எண்ணி ஒப்பில்லாத மகன் மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான் என்று மகிழ்கிறார் அவர். அவரது மனைவியாரான திருவெண்காட்டு நங்கையாரோ, கணவனாரின் அரிய உயிரை எனக்கு இப்புதல்வன் அளித்தான் என மகிழ்ச்சியுற்றார். புதல்வன் உயிர் போதல் பற்றிக் கவலைப்படவில்லை. கணவர் தனது கொள்கையிலிருந்து பிறழும் வாய்ப்பு ஏற்பட்டு அவரது உயிர் போய்விடாதபடி தனது மகனே அடியார்க்கு விருந்தாகிக் கணவரைக் காத்ததை எண்ணி மகிழ்ந்தார் எனில் கணவர் பணியில் அவரது ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பது அறியக் கிடைக்கிறது. அறுத்து எடுத்த தலையின் இறைச்சி உணவுக்கு ஆகாதென்று கழித்து அதை சந்தனத்தாதியாரிடம் கொடுத்துவிட்டு மற்ற உறுப்புக்களின் இறைச்சியைக் கொத்தியும், அறுத்தும், காய் வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் சமைத்து முடித்து அதைத் தம் கணவனார்க்கு உரைத்தார்.
பின் கணவரோடு சேர்ந்து அவரே அக்கறி உணவை அடியார் கோலத்து இறைவர் உண்ணப் படையலிட்டார். தான்பெற்ற புதல்வனைக் கொன்று சமைத்து வந்தவர்க்கு விருந்து படைத்த பாங்கு கணவர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் வேறு எவரும் செய்யாத ஒன்று.
தாம் பெற்ற குழந்தை இயற்கையாகவே இறந்து விட்டாலே தாயாரால் தாங்கிக் கொள்ள இயலாது என்னும் நிலையில் கணவர் தம் புதல்வனைக் கறி சமைத்துப் படைலிடுவதைச் சிறிது மறுத்திருந்தாலும் கணவர் பணி தடைபட்டு அதனால் கணவரையே இழந்திருப்பார் திருவெண்காட்டு நங்கையார். ஆனால் அவர் கணவர் பணியில் தலைநின்ற நங்கையாராதலால் ஒருவர் அடையும் செல்வங்களிலெல்லாம் பெரிய செல்வமான மக்கள் செல்வத்தையே இழக்கத் துணிந்தார். இதனால்தான் கணவரோடும், புதல்வரோடும், தாதியோடும் சிவனுலகம் புகும் அரிய வாய்ப்பைப் பெற்றார் திருவெண்காட்டு நங்கை. இதனால்தான் கணவர் பணியில் இவர் துணை நின்றவரல்ல, தலைநின்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
ஒருவனுக்கு மனைவி பெருமையுடையவளாக இருந்தால் அவனுக்கு இல்லாதது யாது? என்பார் வள்ளுவப் பெருந்தகையார். அப்படிப்பட்ட மனைவியரைப் பெற்ற திருத்தொண்டர் பலரில் சிறுத்தொண்ட நாயனார் ஒரு முதன்மையான இடத்தை வகிக்கிறார். அவரது துணைவியாரான திருவெண்காட்டு நங்கை கணவரது திருத்தொண்டில் செய்த அரும்பணியை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
சிறுத்தொண்ட நாயனார்
பல்லவ மன்னர் நரசிம்மவர்மரின் படைத் தலைவராக இருந்து வடதிசைப் போரில் வாதாபி நகரை அழித்து வெற்றியைக் கண்டவர் பரஞ் சோதியார். பின்னர் படைத் தொழிலினின்றும் நீங்கி சிவத்தொண்டுக்கு வந்தவர். சிவனடியார்களுக்கு முன்னர் தம்மை சிறு தொண்டராக்கிக் கொண்டு அவர்களுக்குப் பணிசெய்ததால் இவர் சிறுத்தொண்டர் என்று அழைக்கப்பெற்றார். பெரிய புராணத்தில் கூறப்பட்டுள்ள பல நாயன்மார்களைப் போல இவரும் சிவத்தொண்டர்களுக்கு முதலில் உணவிட்டு அதன் பின்னர் தாம் உண்ணுதலை வழக்கமாகக் கடைப்பிடித்து ஒழுகினார். இவருக்கு உற்ற துணைவியாராய் வாய்த்தவர் திருவெண்காட்டு நங்கை அம்மையார்.
திருவெண்காட்டு நங்கை
சிறுத்தொண்டரின் மனைவியார் திருவெண்காட்டு நங்கை என்று குறிப்பிடப்படுகிறார். இவரது பெயரே இதுதானா, அன்றி திருவெண்காடு ஊரைச் சேர்ந்தவராக இருந்து இப்பெயர் பெற்றாரா என்பது அறியக்கிடைக்கவில்லை.
தீதில்குடிப் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்றே சேக்கிழார் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் கல்கி தனது சிவகாமியின் சபதம் புதினத்தில் இந்த அம்மையாரை திருவெண்காட்டைச் சேர்ந்தவராகக் குறிப்பிட்டுள்ளார். சிறுத்தொண்டரான பரஞ்சோதியார்க்கும் - திருவெண்காட்டு நங்கையார்க்கும் பிறந்த ஆண் மகவு சீராளன்.
சிறுத்தொண்ட நாயனார் புராணச் சுருக்கம்
சிறுத்தொண்டர் நாள்தோறும் சிவனடியார்களைத் தன் இல்லத்திற்கு அழைத்து முன்னம் உணவு உண்ணச் செய்து அதன் பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டு ஒழுகினார். திருவெண்காட்டு நங்கையாரும் உறுதுணையாக இருந்து வந்தார். இவர்கள் வீட்டில் பணி செய்த தாதி சந்தனம் என்னும் பெயருடையவர்.
சிவபெருமான் சிறுத்தொண்டரின் தொண்டினை அறிந்து அவருக்கு அருள்புரியத் திருவுளம் கொண்டார். எப்போதும் அடியாரைச் சோதித்தே அருள்புரியும் தன்மை கொண்டவராதலால் வயிரவச் சிவனடியார் கோலத்தோடு வந்து சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்கிறார். சிறுத்தொண்டரும் திருவெண்காட்டு நங்கையாரும் தம் பிள்ளையைக் கறி சமைத்து உண்ணத் தருகின்றார்.
கறியை உண்ணாது, மகன் சீராளனை அழைக்குமாறு கூறினார் வயிரவக்கோலச் சிவபெருமான். இவர்கள் மகனைக் கூவி அழைக்க அவன் பள்ளியிலிருந்து வருகிறான். இவர்கள் வயிரவரைப் பார்க்கத் திரும்பினால் அவர் மறைந்துவிடுகிறார். கறியுணவும் காணவில்லை. பின்னர் உமையம்மையார் மற்றும் புதல்வர் முருகனோடு காட்சி தந்து அனைவரையும் சிவனுலகத்திற்கு அழைத்துச் சென்றார். இதுதான் கதைச் சுருக்கம்.
இனி தலைவர் பணி தலைநின்ற திருவெண்காட்டு நங்கையின் தன்மைகளைப் பார்ப்போம்.
திருவெண்காட்டு நங்கையின் கற்புத்திறம்
கணவனையன்றிப் பிறிதொரு ஆடவனை மனத்தாலும் எண்ணாத தன்மையைக் கற்பெனக் கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கணவனோடு ஒத்த கருத்தோடு இணைந்து வாழ்தலும், கணவனுக்குப் பணிவிடை செய்தலையும், கணவனது வாழ்வுக்காக எந்த ஈகத்தையும் செய்தலையும் கற்புத் தன்மையாகவே கொள்ளலாம்.
வள்ளுவப் பெருந்தகையார் தெய்வத்தைத் தொழாமல் கணவனைத் தொழுதெழுபவளைப் பெய்யெனப் பெய்யும் மழைக்கு ஒப்பானவள் என்று கூறுவது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.
திருவெண்காட்டு நங்கையார் நாள்தோறும் தன் கணவர் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவனடியார்களுக்கு உணவு சமைத்து விருந்தோம்பி வருதலைத் தன் கடமையாகக் கொண்டிருந்திருக்கிறார்.
ஆனால் சிவனடியாராக இருந்தாலும் அவர் அந்நிய ஆடவராக இருந்ததால் அவரை வணங்கிப் பணிவிடை செய்தாலும் அந்த அடியார்களைத் தீண்டியதில்லை. இதை சேக்கிழார் பெருமான் அடியவராக வந்த சிவபெருமானுக்குத் திருவடிகளைக் கழுவும்போது நங்கையார் அப்பணிவிடையைச் செய்யவில்லை. அவர் நீர்வார்க்க சிறுத்தொண்டரே கால்களைக் கழுவினார் என்று குறிப்பிடுகிறார்.
அடுத்து,கணவனுக்காகத் தான் பெற்ற மகனையே இழக்கத் துணிகிறார். கணவர் சிவனடியார்க்கு உணவிடாமல் உண்ணும் நிலை வந்தால் உயிரைப் போக்கிக் கொள்வேன் என்னும் பண்பு நிலையுடையவர். எனவே கணவரின் அரிய உயிரை எனக்கு இந்தப் புதல்வன் அளித்தான் என்றார்.
.... கணவனார் அருமை உயிரை எனக்களித்தான்... (3723)
என்னும் பாடலடிகளில் சேக்கிழார் இதனைக் கூறுகிறார்.
தலைவர் பணி தலை நிற்றல்
சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிலுள்ள கணபதீச்சுரம் என்னும் கோயிலில் அருள்புரியும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். அத்தோடு அடியார்க்குத் திருவமுது செய்து உண்பித்தலைத் தலையாய தொண்டாய்ச் செய்து வந்தார்.
இந்தத் தொண்டுக்கு அவருடன் ஒத்துப்போய் உதவுபவராக வந்தமைந்தவர் திருவெணகாட்டு நங்கை. இவரை சிவபெருமானின் அடியவர்களுக்கு வேண்டிய பணிகளையெல்லாம் செய்பவராய்க் குற்றம் அற்ற குடியில் பிறந்த திருவெண்காட்டு நங்கை என்று சேக்கிழார் பெருமான் அறிமுகப் படுத்துகிறார். வேதகா ரணர்அடியார் வேண்டியமெய்ப் பணிசெய்யத் தீதில்குடிப் பிறந்ததிரு வெண்காட்டு நங்கை எனப் பாடலில் இவரது பெருமையை எடுத்துரைக்கிறார்.
தலைவர் பணியில் தலைநிற்றல் அவரது பெருமைக்குரிய அரும்பணியாகக் குறிப்பிடுவது தான் பெற்ற மகனையே கணவரது திருத்தொண்டுக்காக இழக்கத் துணிந்தது. இது வேறு எந்தத் ஒரு நற்றாயாலும் செய்ய இயலாத செயல்.
பத்து மாதம் சுமந்து பெற்றுப் பாலுட்டிச் சீராட்டி வளர்த்த மகன். குழந்தை பிறந்த போது அலங்கரித்துப் பெருமை கொண்டு சுற்றத்தார் மகிழ்ச்சியடைந்தனர். இந்த உவகை மேலோங்கித் திருச்செங்காட்டங்குடியிலுள்ள மக்கள் எல்லோரும் நெய்யாடல் விழாச் செய்து கொண்டாடினர். அக்குழந்தை அந்த ஊருக்கே திருமகனாக விளங்கியிருக்கிறது. அதை இழக்கத் துணிந்திருக்கிறார் திருவெண்காட்டு நங்கை.
அஃறிணை உயிர்கள் கூடத் தாம் ஈன்றெடுத்த மகவைத் தம் கண் முன்னால் இழக்கத் துணிவதில்லை. காக்கையின் குஞ்சு கூட்டிலிருந்து தவறிக் கீழே விழுந்து விட்டால் தாய்க் காக்கை அந்த வழியில் போவோரையெல்லாம் பறந்து சென்று கொத்த முயல்கிறது. கன்றை ஈன்றெடுத்த ஆவினம் அதை எவ்வளவு அன்போடு பால் தந்து காக்கிறது. இதைத்தான், கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போல் எனப் பராபரக் கண்ணி கூறுகிறது.
பறவைகளும், விலங்குகளுமே இப்படி இருக்கையில் ஆறறிவு பெற்ற மனிதப் பிறவியைக் பற்றிச் சொல்லவும் கூடுமோ
சுருண்ட மயிர் நிறைந்த நெற்றியில் சுட்டி என்ற அணி, இரு காதுகளிலும் குதம்பை என்ற அணி, கழுத்தில் கண்டசரம் என்ற அணி, மார்பில் ஐம்படைத்தாலி என்ற அணி, கைகளில் வைரத்தால் ஆன சரி என்ற அணி, கால்களில் சதங்கை என்ற அணி என உடல் முழுவதும் அணி பூட்டி அலங்கரித்துச் சீராட்டி வளர்த்துப் பள்ளிக்குச் செல்லும் சிறுவனைச் சிவனடியாருக்குப் பிள்ளைக் கறியாகத் தரக் கணவனோடு உடன்படுகிறார். ஒரு குடும்பத்துக்கு ஒரே மகனாக உள்ள சிறுவனைத் தந்தை அரியவும் தாய் பிடிக்கவும் அப்போது இருவரும் தமக்குள் உள்ளம் மகிழ்ந்து குற்றம் இல்லாது அமைத்த கறியே நாம் இட்டு உண்பதாகும் எனக் கேட்கிறார் வைரவ வேட இறைவன்.
அப்படியே செய்ய ஒப்புதல் தந்தார் சிறுத்தொண்டர். தன் மகனை விருந்தாக்க எண்ணி ஒப்பில்லாத மகன் மெய்யாம் தன்மையை எனக்கு அளித்தான் என்று மகிழ்கிறார் அவர். அவரது மனைவியாரான திருவெண்காட்டு நங்கையாரோ, கணவனாரின் அரிய உயிரை எனக்கு இப்புதல்வன் அளித்தான் என மகிழ்ச்சியுற்றார். புதல்வன் உயிர் போதல் பற்றிக் கவலைப்படவில்லை. கணவர் தனது கொள்கையிலிருந்து பிறழும் வாய்ப்பு ஏற்பட்டு அவரது உயிர் போய்விடாதபடி தனது மகனே அடியார்க்கு விருந்தாகிக் கணவரைக் காத்ததை எண்ணி மகிழ்ந்தார் எனில் கணவர் பணியில் அவரது ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பது அறியக் கிடைக்கிறது. அறுத்து எடுத்த தலையின் இறைச்சி உணவுக்கு ஆகாதென்று கழித்து அதை சந்தனத்தாதியாரிடம் கொடுத்துவிட்டு மற்ற உறுப்புக்களின் இறைச்சியைக் கொத்தியும், அறுத்தும், காய் வகைகளை அமைத்துக் கூட்டியும் விரைவில் சமைத்து முடித்து அதைத் தம் கணவனார்க்கு உரைத்தார்.
பின் கணவரோடு சேர்ந்து அவரே அக்கறி உணவை அடியார் கோலத்து இறைவர் உண்ணப் படையலிட்டார். தான்பெற்ற புதல்வனைக் கொன்று சமைத்து வந்தவர்க்கு விருந்து படைத்த பாங்கு கணவர் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பெண்கள் வேறு எவரும் செய்யாத ஒன்று.
தாம் பெற்ற குழந்தை இயற்கையாகவே இறந்து விட்டாலே தாயாரால் தாங்கிக் கொள்ள இயலாது என்னும் நிலையில் கணவர் தம் புதல்வனைக் கறி சமைத்துப் படைலிடுவதைச் சிறிது மறுத்திருந்தாலும் கணவர் பணி தடைபட்டு அதனால் கணவரையே இழந்திருப்பார் திருவெண்காட்டு நங்கையார். ஆனால் அவர் கணவர் பணியில் தலைநின்ற நங்கையாராதலால் ஒருவர் அடையும் செல்வங்களிலெல்லாம் பெரிய செல்வமான மக்கள் செல்வத்தையே இழக்கத் துணிந்தார். இதனால்தான் கணவரோடும், புதல்வரோடும், தாதியோடும் சிவனுலகம் புகும் அரிய வாய்ப்பைப் பெற்றார் திருவெண்காட்டு நங்கை. இதனால்தான் கணவர் பணியில் இவர் துணை நின்றவரல்ல, தலைநின்றவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
Subscribe to:
Posts (Atom)