Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Sunday, April 26, 2015
சமஸ்கிருதம் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டியதா?
அண்மையில் இந்திய மைய அரசு நாடு முழுவதும் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு அதற்குத் தமிழகத்தில் எதிர்ப்பும், ஆதரவும் வெளிப்பட்டன.
தமிழக முதலமைச்சரே 'சமஸ்கிருத வாரம்' கொண்டாடுவதை ஏற்க இயலாதென இந்தியத் தலைமை அமைச்சருக்குக் கடிதம் எழுதினார். ஆனால், தமிழகத்திலே தமிழர்களாகப் பிறந்தும் இன உணர்வு இல்லாதவர்களும், தமிழகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகளும் சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதிலே கர்நாடக மாநில எழுத்தாளர் திரு. எஸ்.எல். பைரப்பா என்பவர் தி.மு.க.&தான் சமஸ்கிருத அழிவுக்குக் காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் சொல்வது போல சமஸ்கிருதம் அழிந்து போயிருந்தாலும், அதற்குத் தி.மு.க. காரணமாக இருந்திருந்தாலும் தி.மு.க. பாராட்டிற்குரியதுதான்.
சென்ற 7.8.2014 அன்று வெளியான 'தி இந்து' தமிழ் நாளிதழில் திரு. ஆர். நடராஜன் என்ற ஓர் இதழாளர் தன் சமஸ்கிருத அடிமைத்தனத்தை ஒரு சிறு கட்டுரையாக எழுதியிருந்தார்.
அதிலே, தமிழகத்தில் படித்த மாணவர்கள் பிழையில்லாமல் தமிழ் எழுதுவதில்லை, தொலைக்காட்சித் தமிழின் உச்சரிப்பு நாரசமாக இருக்கிறது என்றெல்லாம் சொல்லியிருந்தார். இது உண்மைதான். அதற்காக அதைத் திருத்தும் பணியில் ஈடுபட வேண்டுமா, அதை விட்டு விட்டு சமஸ்கிருதத்திற்குக் காவடி எடுக்க வேண்டுமா?
இவர் கூறியபடி தமிழைத் தமிழர்கள் பிழையாக எழுதுவதற்கும், தொலைக்காட்சிகளில் தமிழ் கெட்டுப் போனதற்கும் கரணியம் தமிழர்கள் தமிழை நன்கு கற்க வேண்டும் என்ற உணர்வில்லாமல் போனதும், தமிழாசிரியர்களே பலர் தமிழில் தற்குறிகளாக இருந்து கடமையுணர்வில்லாமல் ஊதியத்திற்காக மட்டும் கற்பிப்பதும்தான்.
இன உணர்வில்லாமல் போனதற்குக் காரணம் இந்திய மைய அரசின் அடக்குமுறையும், இந்தித்திணிப்பும், தமிழுணர்வைப் பிரிவினைவாதம் என்று தடுப்பதும்தான் என்பதை ஆழ்ந்து எண்ணிப் பார்ப்போர் உணரலாம்.
'தமிழ் வாழ்க' என்று தமிழக அரசுக் கட்டடங்களில் இருப்பதைக் குநை கூறுகிறார் திரு நடராஜன். அயல் நாடுகளில் இப்படி இல்லை என்கிறார். இதற்குக் காரணம் இவர்களைப் போன்றவர்களால் தமிழ் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதுதான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அவர் கேட்கும் கேள்விகள் "சமஸ்கிருதம் சிங்கமா, புலியா-? இவர்கள் மீது விழுந்து பிறாண்டிக் கடித்துக் குதறிவிடப் போகிறதா? ஏன் இந்தக் கவலை? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் நாட்களில் தமிழ் மொழி நாடு கடத்தப் படுமா? சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவதால் தமிழ் அழிந்து விடுமா? அந்த நாட்களில் மக்கள் சமஸ்கிருதம்தான் பேச வேண்டும், தமிழ் பேசக்கூடாது என்று கட்டாயமா? அரசியல்வாதிகள் அதற்காக ஏன் இப்படித் துள்ளிக் குதிக்க வேண்டும்?"
இக்கேள்விகளுக்கு நாம் இங்கே விடை தருகிறோம். அதற்கு அவர் கேரள மாநில வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும்.
பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல சங்க இலக்கியப் பாடல்களைத் தந்த நாடு பண்டைய தமிழ்ச் சேரநாடு. அந்த அளவு இனிய தமிழ் வழங்கிய தமிழ்ச் சேரநாடு இன்று மலையாளக் கேரளமாக மாறியது ஏன்? எப்படி?
வந்தேறிகளான நம்பூதிரிக்கூட்டம் சேர நாட்டில் குடியேறிய பின் தமிழோடு சமஸ்கிருதத்தை வலிந்து புகுத்திக் கலந்து அங்கே தமிழ் ஒழிந்து மலையாளம் என ஒரு புது மொழி கி.பி. 12 & 13 ஆம் நூற்றாண்டளவில் தோன்றியது.
மலையாளம் பேசத் தொடங்கிய தமிழர்கள் மலையாளிகள் என்றொரு தனி இனமாக மாறியது மட்டுமல்ல, தமிழகத்துத் தமிழர்களை எதிரிகளாகக் கருதத் தொடங்கி விட்டனர்.
மாநில எல்லைகள் பிரிக்கப்பட்ட போது இன உணர்வில்லாத காமராசர் தமிழக முதல்வராக இருந்ததால்தான் தேவிகுளம், பீர்மேடு, இடுக்கி, நெய்யாற்றங்கரை, உடும்பன்சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம், சித்தூர், கொழிஞ்சாம்பாறை, சிறுவாணி, அட்டப்பாடி என ஏராளமான தமிழர் பகுதிகளை மலையாளிகள் அபகரித்துக் கொண்டனர்.
இதனால் அங்குள்ள தமிழர்கள் மலையாளிகளாக வலிந்து மாற்றப்படுகின்றனர். ஏறத்தாழ 20 ஆறுகளைத் தமிழகம் இழந்து வறட்சியில் தவிக்கிறது. தமிழனுக்குச் சொந்தமான முல்லைப்பெரியாறு, சிறுவாணி, பவானி ஆறுகளைக் கேரளம் சொந்தம் கொண்டாடுகிறது.
கேரளம் அங்குள்ளோர் அனைவரும் பிழைக்க வக்கற்ற மாநிலமாக இருப்பதால் ஏராளமான மலையாளிகள் தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும், அயல் நாடுகளிலும் பிழைப்புத் தேடிக் குடி பெயர்ந்துள்ளனர். தமிழகத்தில் அவர்கள் பிழைப்புக்காக வந்து வாழ்ந்தாலும் அவர்கள் அபகரித்த தமிழகத்துக்குச் சொந்தமான ஆறுகளிலிருந்து தண்ணீர் தர மறுக்கின்றனர்.
இப்படித் தமிழனுக்குத் தமிழனே எதிரியாகித் தண்ணீருக்குக் கையேந்தும் நிலைக்குக் காரணம் இந்த ஈன மொழியான சமஸ்கிருதத் திணிப்புத்தான் என்பதும், தமிழனுக்கு இன, மொழியுணர்வு இல்லாமல் போனதும்தான் என்பதை இன, மொழியுணர்வு கூடாது என்று கூறும் கூட்டத்தைச் சேர்ந்த திரு. நடராஜன் உள்ளிட்டோர் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை வைத்துச் சமஸ்கிருதத்தால் தமிழ் அழியவில்லையா என்று திரு. நடராஜன் சொல்லட்டும்.
திரு. நடராஜன் காதலர் தினம் கொண்டாடுவதைக் குறை கூறுகிறார். இதை நாமும் ஏற்பதில்லை. அதே வேளை இது தமிழகத்தில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை. சமஸ்கிருதத்தைக் கொண்டாடும் வடநாட்டிலும்தான் கொண்டாடுகிறார்கள். அங்கே செய்வது தவறில்லையா?
இந்த நாட்டின் மாபெரும் தத்துவ நூல்கள் சமஸ்கிருதத்தில்தான் எழுதப்பட்டன என்கிறார் திரு. நடராஜன். சமஸ்கிருதம் 'தேவபாஷை' (கடவுளர் மொழி) என்று ஒரு செய்தி பல காலமாகப் பரப்பப்பட்டு வருகிறது. இதை நம்பிய தமிழக மன்னர்களும், கற்றறிந்த அறிஞர்களும் அதற்கு ஆதரவாக இருந்தது ஒரு காலம்.
அப்போது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்களில் பல தமிழர்களாலும் எழுதப்பட்டன என்பதையும், தமிழிலிருந்து பல நூல்கள் சமஸ்கிருதத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. பழைய ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட வேண்டும், போகிப் பண்டிகையில் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்ற பழக்கங்களைப் புகுத்தி ஏராளமான நூல்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தில்லையில் தீட்சிதர்கள் தேவார ஓலைச்சுவடிகளை இராசராசசோழ மாமன்னனே கேட்டும் கொடுக்க மறுத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் பெரும்பாலான தேவாரப்பாடல்கள் கரையான்களுக்கு உணவாகி அழிந்துள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த பல கலைகளைப் பற்றிய நூல்கள் தமிழில் இல்லாமல் வடமொழியில் இருப்பது எப்படி? இந்தத் திட்டமிட்ட சூழ்ச்சி முறையில்தான்.
சமஸ்கிருதத்தில் புராணங்கள், மறைகள், உபநிடதங்கள், தத்துவ நூல்கள் இருக்கின்றன என்பதற்காக அம்மொழியைத் தெய்வ மொழியென்று கூறி மக்களை ஏமாற்றிப் பிற மொழிகளை அழிக்கும் முயற்சி நெடுங்காலமாகவே நடந்து வந்துள்ளது. இதில் ஆரியச் சூழ்ச்சியாளர்களுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது என்பது உண்மை. ஆனால், இன்னும் இந்தச் சூழ்ச்சிக்குப் பலியாகும் மக்களில் படித்த மேல்தட்டு மக்களே இருப்பதை என்னவென்று சொல்வது?
சமஸ்கிருதத்தில் புராணங்களும் பிறவும் இருக்கின்றன என்றால், அவற்றை மொழிபெயர்த்துப் படிப்பது இயலாத செயலல்ல. ஏற்கெனவே மறைகளும், உபநிடதங்களும், புராணங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
கிரேக்க மொழியில் பல இலக்கியங்கள், புராணங்கள் இருக்கின்றன. அவற்றைப் படிக்க விரும்பும் ஆங்கிலேயர்கள் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கிறார்களே தவிர, கிரேக்க மொழியைக் கடவுளின் மொழி என்று நம்பி அதைக் கற்று அதன் வழியாகக் கிரேக்க இலக்கியங்களைப் படிப்பதில்லை.
சமஸ்கிருதத்தைத் 'தேவபாஷை' என்று உயர்த்திய கூட்டம்தான் தமிழை "நீச பாஷை" என்று தாழ்த்திப் பேசியது. இந்த இழிவையும் தாங்கிக் கொண்டு தமிழன் 'சமஸ்கிருத வாரம்' கொண்டாட வேண்டுமா? மானமற்ற நடராஜன்களாகவே தமிழினத்தார் எல்லோரும் ஆகிவிட வேண்டுமா? நீச மொழி பேசும் நாட்டில் தேவ மொழியை ஏன் புகுத்த வேண்டும்? அதற்குத் தீட்டு நேர்ந்து விடாதா?
திரு. நடராஜனின் கட்டுரைக்கு மறுப்புத் தெரிவித்து திரு. சுப. வீரபாண்டியன் அவர்கள் 'தி இந்து' 8.8.2014 நாளிதழில் வெளியிட்ட கட்டுரையில் உள்ள செய்திகளின்படி, வெறும் 15 ஆயிரத்திற்கும் குறைவான மக்கள் பேசும் மொழிதான் சமஸ்கிருதம். அதற்கு மைய அரசு செலவிட்ட தொகை 2008 & 2009 & இல் ரூ. 72.10 கோடி. 2009& 10 &இல் ரூ. 99.18 கோடி. 2010& 11 &இல் ரூ 108.75 கோடி.
ஆனால், உலகளாவிய அளவில் 10 கோடி மக்களால் பேசப்படுகிற செம்மொழிக்கான தகுதிகள் முழுவதையும் பெற்றுள்ள ஒரே மொழியான தமிழுக்கு இதே மைய அரசு செலவிட்டது 2008&09 &இல் ரூ. 4. 47 கோடி. 2009& 10 &இல் ரூ. 8.61 கோடி. 2010& 11 &இல் ரூ 10.16 கோடிதான்.
எந்த ஒரு மாநிலத்திலும் ஆட்சி மொழியாக இல்லாத இந்த மொழியின் மேம்பாட்டிற்கு மக்களின் வரிப்பணம் இத்தனை கோடியை எதற்காகச் செலவு செய்ய வேண்டும். இதனால் அந்நிய முதலீடு ஏதேனும் அதிகரிக்கிறதா? அந்நியச் செலாவணி கூடுதலாகக் கிடைக்கிறதா?
சமஸ்கிருதம் தேவபாஷை என்றால் அதன் மேம்பாட்டிற்குத் தெய்வங்களே தேவலோகத்திலிருந்து பொன்னையும், பொருளையும் கொண்டு வந்து செலவு செய்து கொள்ளட்டும். மாந்தர்கள் எதுவும் செய்ய வேண்டாம். சமஸ்கிருத வாரத்தையும் கொண்டாடிக் கொள்ளட்டும். நீசமொழி பேசும் தமிழகத்தில் தேவமொழிக்கு என்ன வேலை?
தமிழகத்தில் தமிழை ஒரு பாடமொழியாகக்கூடக் கற்பிக்கக் கூடாதென்று கல்வியை வணிகமாக்கி வரும் வணிகர்கள் கூட்டம் நீதிமன்றத்தில் வழக்கிடும் நிலையும், அதனை வல்லமையுள்ள மாநில அரசு எதிர்கொள்ளும் நிலையும் எவ்வளவு கேவலமானது! இதற்குக் காரணம் இன, மொழியுணர்வு இல்லாமல் போனதுதான். இதைத் தமிழர்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழர்கள் இன உணர்வோடு வாழ்ந்திட வேண்டும். சமஸ்கிருதத்தைத் தமிழகத்தில் வேரறுக்கும் பணியைத் தொடர்ந்திட வேண்டும்.
Labels:
ஆய்வு,
ஆய்வுக் கட்டுரை,
தமிழக அரசியல்,
தேசியம்,
வேணுகோபாலகிருஷ்ணன்
Sunday, July 29, 2012
நேர்மையின் இலக்கணம் கக்கன்
பொதுவாழ்வில் தூய்மையானவர்களைக் காண்பது அரிதாக உள்ள இன்றைய நிலையில், தூய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய அப்பழுக்கற்ற தலைவர்கள் பலர் நம் முந்தைய தலைமுறையில் இருந்திருக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.
காந்தியடிகள் வழிநடந்த தொண்டர்களாக இருந்த பலர், நாடு விடுதலை பெற்றபின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து மக்கள் பணி செய்த போதும் தங்கள் செயல்களில் நேர்மை தவறாமல் நடந்தனர். அத்தகைய தூயவர்களில் ஒருவராக, நாடு போற்றும் நல்லவராக விளங்கிய ஒருவர்தான் எளிமையின் இலக்கணம், தூய்மையின் இருப்பிடம் என்று போற்றப்பட்ட திரு. கக்கன் அவர்களாவார்.
எதிர்க்கட்சியினராலும் போற்றப்பட்டவரான திரு. கக்கன் 1957 இல் பெருந்தலைவர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் வேளாண்மை, கால்நடை, தாழ்த்தப் பட்டோர் நலம், பொதுப்பணி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
1962 இல் மீண்டும் அமைந்த காமராஜர் அமைச்சரவையில் வேளாண்மை, உணவு, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை, தாழ்த்தப்பட்டோர் நலன் ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார்.
காமராஜர் பதவி விலகியபின் திரு. பக்தவத்சலம் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை, காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை, தொழிலாளர் நலத்துறை, அறநிலையத்துறை, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை எனப் பெரும் பொறுப்புகள் கொண்ட பல துறைகளின் அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார்.
பத்தாண்டுக் காலம் மாநில அமைச்சராகவும், ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவராயினும் கறைபடியாத கைகளுக்குச் சொந்தக் காரராகவே செயல்பட்டதால், இறுதிவரை எளிய வாழ்க்கையே வாழ்ந்த சிறப்புக்குரியவர் கக்கன் அவர்கள்.
இவரது வாழ்க்கை பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஈடுபட விரும்புவோருக்கும் ஒரு வழிகாட்டி என்றால் அது மிகையாகாது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் 18.6.1909 இல் பிறந்தவர் திரு. கக்கன். இவரது தந்தையார் பூசாரிக்கக்கன். தாயார் குப்பி அம்மையார்.
கக்கன் என்பது அவர்களது குலதெய்வப் பெயராக இருக்கலாம் என்பர். ஆண்களுக்குக் கக்கன் என்றும், பெண்களுக்குக் கக்கி என்றும் பெயர் சூட்டும் வழக்கம் உண்டென்பர். அப்பகுதியில் வீரகாளியம்மன் கோவில் பூசாரிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் பூசாரிக்கக்கன். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் வருவாய்த்துறை அதிகாரிக்கு ஊர்ப்புற உதவியாளராகப் பணியாற்றியவர்.
இளமையிலேயே தன் தாயை இழந்தார் கக்கன். தனக்குச் சிற்றன்னையாக வந்த பிரம்பியம்மாள் என்னும் அம்மையாரால் வளர்க்கப் பட்டார்.
கக்கனின் தந்தையார் பூசாரிக்கக்கன் தன் பணிகள் தொடர்பாகப் பல்வேறு அதிகாரிகளைப் பார்த்ததால், தன் மகனையும் படிக்க வைத்து ஓர் உயர் அதிகாரியாக்க ஆசைப்பட்டார்.
தீண்டாமைக் கொடுமை தலைவிரித்தாடிய காலம் அது. தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த துயரமான சூழ்நிலையில் ஏழ்மை, தீண்டாமைக் கொடுமை ஆகிய இடர்ப்பாடுகளுக்கிடையே எதிர்நீச்சல் போட்டுத் தொடக்கக் கல்வியைப் பயின்றார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை மதுரை திருமங்கலத்திலும், மேலூரிலும், பசுமலையிலும் படித்தார். விடுதலைப் போராட்ட வீரரான வைத்தியநாத ஐயர் மற்றும் அவரது நண்பர்கள் உதவி செய்தனர். அதன்படி அரிசன சேவா சங்க உதவித்தொகை பெற்று உயர் கல்வியைத் தொடர்ந்தார். எனினும் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) ஆங்கிலப் பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் குறைவாகப் பெற்றதால் தோல்வியடைந்தார். மீண்டும் படித்தும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
கல்வி பயின்ற காலத்திலேயே நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களின் தொடர்பு ஏற்பட்டிருந்ததால் அவருக்குக் கல்வியில் தொடர்ந்து ஈடுபாடு ஏற்படவில்லை. வைத்தியநாத ஐயர், என். எம். ஆர். சுப்பராமன் முதலியோர் நடத்திவந்த அரிசன சேவா சங்கத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு ஏற்புடையவராகக் கக்கன் விளங்கியதால் அவரைச் சங்கத்தின் தொண்டராகச் சேர்த்துக் கொண்டனர். அதிலிருந்து கக்கனின் தூய பொது வாழ்வு தொடங்கியது.
முதலில் மதுரை மேலூரில் உள்ள மாணவர் விடுதிக் காப்பாளராகப் பணியைத் தொடங்கினார். பின் சேவா சங்கத்தின் கல்விப் பணிகளில் ஈடுபட்டார். ஒவ்வொரு சிற்றூருக்கும் சென்று தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இரவுப் பள்ளிகளைத் தொடங்கினார். அப்பள்ளிகளை மேற்பார்வை செய்வதும், பள்ளிகளுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொடுப்பதும் இவரது பணிகள். இதற்காக வைத்தியநாத ஐயரும், அவரது நண்பர்களும் தரும் பணத்திற்கு முறையான கணக்குகளைப் பராமரித்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.
1934 இல் மதுரைக்கு வந்த காந்தியடிகள் கக்கனின் பொதுத் தொண்டுகளை அறிந்தார். அந்தச் சந்திப்பின்போது, காந்தியடிகளுடன் சுற்றுப்பயணம் செய்த கக்கன் காந்தியக் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
இதன் காரணமாக, 1939 ஆம் ஆண்டு வைத்தியநாத ஐயர் மூலம் காங்கிரசில் இணைந்து பொதுத்தொண்டுகளுடன் விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
அவர் போகுமிடமெல்லாம் வந்தே மாதரம் முழக்கமிட்டதற்காக 1940 இல் ஆங்கில அரசால் 15 நாள்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப் பட்டார். அந்த 1940 இல்தான் அவர் மேலூர் வட்டக் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல காந்தியடிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னிந்தியாவைச் சேர்ந்த தலைவர் கக்கன்தான் என்பது பெருமைக்குரிய ஒன்று. இந்தப் போராட்டத்திற்காகவும் ஒரு மாதச் சிறைத்தண்டனை பெற்றார்.
1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட கக்கன், வெள்ளையக் காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். செய்யாத குற்றங்களையெல்லாம் அவர்மீது சுமத்தி விசாரணை ஏதுமின்றிக் கடுங்காவல் தண்டனை வழங்கியது ஆங்கில அரசு. ஒன்றரை ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை ஆந்திர மாநிலத்திலுள்ள அலிப்பூர் சிறையில் அனுபவித்தார்.
அவரது அரசியல் வாழ்வில் பல பதவிகள் அவரைத் தேடி வந்தன. முதலில் 1941- 42 இல் நடைபெற்ற மாவட்டக் கழக உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 1946 இல் அரசியலமைப்புச் சட்டசபை உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.
நாட்டு விடுதலைக்குப்பின் 1952 இல் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். 1957 மற்றும் 1962 ஆகிய தேர்தல்களில் தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமைச்சர் பொறுப்பேற்றுப் பல் நற்பணிகளைச் செய்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் பணியாற்றினார். இவர் தலைவராக இருந்த போதுதான் 1955 இல் காங்கிரஸ் கட்சியின் அனைத்திந்திய மாநாட்டைச் சென்னையில் சிறப்புற நடத்தினார்.
1963 இல் காமராஜர் கட்சிப்பணிக்காக முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது, அடுத்த முதல்வராகக் கக்கனையே கொண்டுவர விரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால், திரு. பக்தவத்சலம் அவர்கள் முதல்வரானார். அவரது அமைச்சரவையில் நிதி, உள்துறை, கல்வி, சிறை, அறநிலையத்துறை, தொழிலாளர் நலம், தாழ்த்தப்பட்டோர் நலம் முதலிய பல பெரும் பொறுப்புகள் கொண்ட அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார் கக்கன்.
1967 இல் தி.மு.க. ஆட்சியமைத்த போது கக்கன் அவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அத்துடன் அவரது அரசுப் பணிகள் முடிவுக்கு வந்தன. ஆனால், கட்சிப் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
பத்தாண்டுக்காலம் அமைச்சர் பதவியில் இருந்தபோதும், அவருக்கென்று சொந்த வீடோ, வேறு சொத்துக்களோ வைத்திருக்கவில்லை. விடுதலைப் போரில் ஈடுபட்டமைக்காகத் தமக்குக் கிடைத்த சிறு நிலத்தையும் வினோபாவின் பூதான இயக்கத்திற்குக் கொடுத்து விட்டார்.
அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் சொந்தமாக ஊர்தி ஏதுமில்லாததால், ஒரு முன்னாள் அமைச்சர் பேருந்துக்காகக் கால் கடுக்கக் காத்திருந்ததையும், வாடகை வீடு தேடி அலைந்ததையும், இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த போது மதுரை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகூட இல்லாமல் தரையில் படுத்துக் கிடந்ததையும், அதையறிந்த அன்றைய முதல்வர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள் நல்ல சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தததையும் தமிழக மக்களில் பெரும்பாலோர் அறிவர். அதனால்தான் கக்கன் என்றாலே அவர் தூய்மையின் அடையாளமாக மதிக்கப் படுகிறார்.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
இவர் அமைச்சராக இருந்தபோது பல்வேறு பொதுநலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். அவற்றில் குறிப்பிடத் தக்கவை மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தது, வைகை, பாலாறு உள்ளிட்ட பல அணைக்கட்டுத் திட்டங்களை நிறைவேற்றியது, விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான பணிகளைக் கூறலாம்.
அவர் நாடாளமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பணியாற்றிய போது அவை நடவடிக்கைகளில் தவறாது பங்கேற்பது இவருடைய சிறந்த பழக்கமாக இருந்தது. நேரம் தாழ்த்தாமல் அலுவலகத்திற்கு வருவதும், மக்கள் குறைகளைக் கேட்டு ஆவன செய்வதும் இவருடைய பண்பு நலன்களில் குறிப்பிடத்தக்கவை.
தீண்டாமை ஒழிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த கக்கன் அதற்காகப் பல்வேறு செயல்பளைச் செய்துள்ளார். அவரது ஊரான தும்பைப் பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் நீரெடுக்க ஒரு குளமும், பிற வகுப்பார் நீரெடுக்க ஒரு குளமும் இருந்தன. தாழ்த்தப்பட்ட வகுப்பார் நீரெடுக்கும் குளம் மக்கள் அசுத்தங்களைக் கழுவவும், ஆடு மாடுகளைக் குளிப்பாட்டவும் பயன்படுத்தப்பட்ட குளமாகும்.
இந்த இழிநிலையை எதிர்த்து ஒத்த கருத்துடைய பிற வகுப்பாருடன் இணைந்து போராடி அனைவரும் ஒரே குளத்தில் குடி நீரெடுக்கும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் கோவில் நுழைவுப் போராட்டத்தை வைத்தியநாத ஐயருடன் சேர்ந்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 1939 இல் நடத்தித் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து வழிபாடு செய்யும் உரிமையைப் பெற்றுத்தந்தார்.
கக்கன் இந்துவாக இருந்தாலும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த சொர்ணம் பார்வதி என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் 1932 இலேயே சீர்திருத்தத் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்கியவர் பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பா. ஜீவானந்தம் என்பது குறிப்பிடத் தக்கது.
தந்தை பெரியார் இந்துக்களின் வழிபடு கடவுளான இராமபிரானின் உருவப் படத்தை எரிக்க முற்பட்ட போது, அதைக் கண்டித்தார். மீறி எரித்தபோது அதற்காக அவரைச் சிறையிலும் அடைத்தார்.
இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23 ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
அமைச்சர் பதவியிலிருந்த காலத்தில் தனது பதவியை அவர் ஒருமுறைகூட முறைகேடாகப் பயன்படுத்தியதில்லை. அரசு தனக்கு ஒதுக்கியிருந்த வீட்டில் தமது நெருங்கிய உறவினர்களைக்கூடத் தங்குவதற்கு அனுமதித்தில்லை. அதே போல, அரசு தனக்குத் தந்த ஊர்தியில் தன் குடும்பத்தார் பயணம் செய்யவும் அனுமதித்தில்லை.
இப்படிப்பட்டவர் வாழ்ந்த நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை. எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்யவுள்ள இளைய தலைமுறைக்குக் கக்கனின் தூய பொதுவாழ்வு ஓர் எடுத்துக்காட்டு.
Wednesday, February 17, 2010
தேசியம் என்பது தமிழனுக்கு மட்டுமா?
அண்டை மாநிலங்களாலும், மைய அரசாலும் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து வஞ்சிக்கப் படும் ஒரே மாநிலமாகத் தமிழகம் தவித்து வருகிறது.
முதலில் ஆறுகள் தொடர்பான தகராறு. கர்நாடக மாநிலத்தோடு காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல். ஆந்திர மாநிலத்தோடு பாலாற்றுச் சிக்கல். கேரள மாநிலத்தோடு உள்ள சிக்கல்களான முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பவானி ஆகியவற்றோடு தற்போது அமராவதி அணையின் பாம்பாறு புதிதாகச் சேர்ந்துள்ளது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் தமிழகம் தன்னுடைய எல்லைகளை அண்டை மாநிலங்களிடம் இழந்து நிற்பதுதான்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சித்தூர்,புத்தூர்,திருப்பதி,காளத்தி,பலமனேரி, காகுந்தி, வாயல்பாடி முதலிய பகுதிகளைத் தெலுங்கர்கள் கொள்ளையடித்துக் கொண்டார்கள்.
மைசூர், பெங்கஹர், கோலார், கொள்ளேகாலம், மாண்டியா மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகள் ஆகியவற்றைக் கன்னடர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இவற்றில் பெங்கஹர் கன்னடர்களின் தலைநகரமாக இருக்கிறது. காவிரி தோன்றும் குடகுப்பகுதி தமிழகத்தோடு இணைய விரும்பியும் தமிழகத்தில் அப்போதிருந்த தேசிய விரும்பி மேதாவிகள் அதை ஏற்கவில்லை. இதுதான் இன்றைய காவிரிச் சிக்கலுக்கு அடிப்படை.
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, உடும்பன் சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம் உள்ளிட்ட பாலக்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி, அட்டப்பாடி முதலிய தமிழ்ப் பகுதிகளை மலையாளத்தார் பறித்துக் கொண்டனர்.
இதனால் தமிழன் தன் நிலப்பரப்பை இழந்ததோடு அங்குள்ள தமிழர்கள் தமிழுக்கும், தமிழர்க்கும் அந்நியமாகிப் போனார்கள். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஆறுகள் இன்றைக்கு அண்டை மாநிலங்களின் பிடியில்.
கேரளம் பண்டைய தமிழ்ச் சேரநாடுதான் என்றாலும் நம்பூதிரிக் கூட்டத்தார் வலிந்து வடமொழியைத் தமிழோடு கலந்து மலையாளம் என்ற ஒரு புதிய மொழியை உண்டாக்கி தமிழனைத் தமிழனுக்கு எதிரியாக்கினார்கள்.
இன்றைக்குப் பெருமைக்காகக் கேரளத்தைக் கடவுளின் பூமி என்று மலையாளிகள் கூறினாலும் உண்மையில் அப்படியில்லை. எப்போது பார்த்தாலும் மத, இனக் கலவரங்களும், கடையடைப்புகளும், பேருந்துகளும் பிற ஊர்திகளும் ஓடாத நிலையும் அடிக்கடி ஏற்படும் மாநிலம்தான் கேரளம். பந்த் என்னும் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்ற தீர்ப்பே கேரள உயர்நீதி மன்றத்தில்தான் வழங்கப்பட்டது. மின்சாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள மாநிலமாகவே கேரளம் உள்ளது. எனவே மலையாளிகள் தங்கள் மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் பிழைப்புக்காகச் செல்ல வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழ்நாட்டில் மலையாளிகள் குடியேறாத ஊர்களே இல்லை எனலாம். அதிலும் கோவை, கன்னியாகுமரியில் ஏராளமானோர் வந்து குடியேறியுள்ளனர்.
கோவையில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளார்கள். கோவையில் மலையாளி சமாஜம் ஏற்படுத்தி அதன் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துகிறார்கள். அவற்றிலும், அவர்கள் நடத்தும் வேறு தொழில் நிறுவனங்களிலும் மலையாளிகளையே உயர் பதவிகளில் அமர்த்துகிறார்கள். தமிழர்களுக்கு ஏதோ எடுபிடி வேலைகளும், கடைநிலைப் பணிகளுமே தருகிறார்கள்.
தமிழன் தரும் காசைப் பெற்றுக் கொண்டு தொழில் நடத்தினாலும் தமிழனுக்கெதிராகவே தமிழகத்திலும் அவர்களது நடவடிக்கைகள் உள்ளன. சேலம் இரயில்வே கோட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளதா என ஐயப்படும் நிலையே உள்ளது, இங்கே அவர்கள் சொகுசாக வாழ்ந்தாலும் வாழ்வு தரும் தமிழர்க்கெதிராகவே செயல்படுகிறார்கள்.
மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்குத் தமிழக அரசு விடுமுறை தருகிறது. அவர்கள் வந்தேறிகள். ஆனால் வலுக்கட்டாயமாகக் கேரளத்துடன் சேர்க்கப்பட்ட தமிழர் பகுதிகளில் பொங்கல் விடுமுறைக்காக உண்ணா நோன்புப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சாராதவர்கள் ஓர் அங்குல இடம் வாங்க முடியாது. ஆனால் தமிழ்நாடு மட்டும் வந்தோர்க்கெல்லாம் புறம்போக்காகப் போய் விட்டது. இங்கே தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கன்னடர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகிறார்கள். வந்தேறித் தெலுங்கர்கள் கிருஷ்ணகிரியை ஆந்திராவோடு இணைக்க வேண்டுமென்கிறார்கள். கர்நாடகத்தில் தமிழன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணி செய்யப் போனாலும் கன்னடர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்கள் இன உணர்வில்லாதவர்களாக இருப்பதுதான்.
தமிழர்கள் தங்கள் மாநிலத்தில் நீர்வளம் அற்றுப் பாலைநிலமாகும் சூழலை எதிர்கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால் ம.பொ.சி. விட்டுச்சென்ற எல்லை மீட்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். காஷ்மீருக்கு மட்டும் உள்ள சிறப்பு உரிமைகளைத் தமிழகத்திற்கும் பெற வேண்டும். ஆட்சியாளர்களும், உணர்வுள்ள தமிழர்களும் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதலில் ஆறுகள் தொடர்பான தகராறு. கர்நாடக மாநிலத்தோடு காவிரி நீர்ப் பங்கீட்டுச் சிக்கல். ஆந்திர மாநிலத்தோடு பாலாற்றுச் சிக்கல். கேரள மாநிலத்தோடு உள்ள சிக்கல்களான முல்லைப் பெரியாறு, சிறுவாணி, பவானி ஆகியவற்றோடு தற்போது அமராவதி அணையின் பாம்பாறு புதிதாகச் சேர்ந்துள்ளது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்னவென்று பார்த்தால் தமிழகம் தன்னுடைய எல்லைகளை அண்டை மாநிலங்களிடம் இழந்து நிற்பதுதான்.
மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சித்தூர்,புத்தூர்,திருப்பதி,காளத்தி,பலமனேரி, காகுந்தி, வாயல்பாடி முதலிய பகுதிகளைத் தெலுங்கர்கள் கொள்ளையடித்துக் கொண்டார்கள்.
மைசூர், பெங்கஹர், கோலார், கொள்ளேகாலம், மாண்டியா மாவட்டத்தின் தமிழ்ப் பகுதிகள் ஆகியவற்றைக் கன்னடர்கள் கைப்பற்றிக் கொண்டனர். இவற்றில் பெங்கஹர் கன்னடர்களின் தலைநகரமாக இருக்கிறது. காவிரி தோன்றும் குடகுப்பகுதி தமிழகத்தோடு இணைய விரும்பியும் தமிழகத்தில் அப்போதிருந்த தேசிய விரும்பி மேதாவிகள் அதை ஏற்கவில்லை. இதுதான் இன்றைய காவிரிச் சிக்கலுக்கு அடிப்படை.
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, சித்தூர், கொழிஞ்சாம்பாறை, உடும்பன் சோலை, செங்கோட்டையின் மறுபாதி, வேலந்தாவளம் உள்ளிட்ட பாலக்காடு மாவட்டத்தின் பெரும் பகுதி, அட்டப்பாடி முதலிய தமிழ்ப் பகுதிகளை மலையாளத்தார் பறித்துக் கொண்டனர்.
இதனால் தமிழன் தன் நிலப்பரப்பை இழந்ததோடு அங்குள்ள தமிழர்கள் தமிழுக்கும், தமிழர்க்கும் அந்நியமாகிப் போனார்கள். தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஆறுகள் இன்றைக்கு அண்டை மாநிலங்களின் பிடியில்.
கேரளம் பண்டைய தமிழ்ச் சேரநாடுதான் என்றாலும் நம்பூதிரிக் கூட்டத்தார் வலிந்து வடமொழியைத் தமிழோடு கலந்து மலையாளம் என்ற ஒரு புதிய மொழியை உண்டாக்கி தமிழனைத் தமிழனுக்கு எதிரியாக்கினார்கள்.
இன்றைக்குப் பெருமைக்காகக் கேரளத்தைக் கடவுளின் பூமி என்று மலையாளிகள் கூறினாலும் உண்மையில் அப்படியில்லை. எப்போது பார்த்தாலும் மத, இனக் கலவரங்களும், கடையடைப்புகளும், பேருந்துகளும் பிற ஊர்திகளும் ஓடாத நிலையும் அடிக்கடி ஏற்படும் மாநிலம்தான் கேரளம். பந்த் என்னும் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என்ற தீர்ப்பே கேரள உயர்நீதி மன்றத்தில்தான் வழங்கப்பட்டது. மின்சாரம், போக்குவரத்து, உணவு உற்பத்தி என எல்லாவற்றிலும் பின்தங்கியுள்ள மாநிலமாகவே கேரளம் உள்ளது. எனவே மலையாளிகள் தங்கள் மாநிலத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் பிழைப்புக்காகச் செல்ல வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாக உள்ளது.
தமிழ்நாட்டில் மலையாளிகள் குடியேறாத ஊர்களே இல்லை எனலாம். அதிலும் கோவை, கன்னியாகுமரியில் ஏராளமானோர் வந்து குடியேறியுள்ளனர்.
கோவையில் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளார்கள். கோவையில் மலையாளி சமாஜம் ஏற்படுத்தி அதன் சார்பில் பள்ளிகள், கல்லூரிகள் நடத்துகிறார்கள். அவற்றிலும், அவர்கள் நடத்தும் வேறு தொழில் நிறுவனங்களிலும் மலையாளிகளையே உயர் பதவிகளில் அமர்த்துகிறார்கள். தமிழர்களுக்கு ஏதோ எடுபிடி வேலைகளும், கடைநிலைப் பணிகளுமே தருகிறார்கள்.
தமிழன் தரும் காசைப் பெற்றுக் கொண்டு தொழில் நடத்தினாலும் தமிழனுக்கெதிராகவே தமிழகத்திலும் அவர்களது நடவடிக்கைகள் உள்ளன. சேலம் இரயில்வே கோட்டம் இன்னும் முழுமையான செயல்பாட்டிற்கு வந்துள்ளதா என ஐயப்படும் நிலையே உள்ளது, இங்கே அவர்கள் சொகுசாக வாழ்ந்தாலும் வாழ்வு தரும் தமிழர்க்கெதிராகவே செயல்படுகிறார்கள்.
மலையாளிகளின் ஓணம் பண்டிகைக்குத் தமிழக அரசு விடுமுறை தருகிறது. அவர்கள் வந்தேறிகள். ஆனால் வலுக்கட்டாயமாகக் கேரளத்துடன் சேர்க்கப்பட்ட தமிழர் பகுதிகளில் பொங்கல் விடுமுறைக்காக உண்ணா நோன்புப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் அந்த மாநிலத்தைச் சாராதவர்கள் ஓர் அங்குல இடம் வாங்க முடியாது. ஆனால் தமிழ்நாடு மட்டும் வந்தோர்க்கெல்லாம் புறம்போக்காகப் போய் விட்டது. இங்கே தெலுங்கர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கன்னடர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகிறார்கள். வந்தேறித் தெலுங்கர்கள் கிருஷ்ணகிரியை ஆந்திராவோடு இணைக்க வேண்டுமென்கிறார்கள். கர்நாடகத்தில் தமிழன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணி செய்யப் போனாலும் கன்னடர்கள் அதை எதிர்க்கிறார்கள்.
இதற்கெல்லாம் காரணம் தமிழர்கள் இன உணர்வில்லாதவர்களாக இருப்பதுதான்.
தமிழர்கள் தங்கள் மாநிலத்தில் நீர்வளம் அற்றுப் பாலைநிலமாகும் சூழலை எதிர்கொள்ளும் நிலை வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலை ஏற்படாதிருக்க வேண்டுமானால் ம.பொ.சி. விட்டுச்சென்ற எல்லை மீட்புப் போராட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். காஷ்மீருக்கு மட்டும் உள்ள சிறப்பு உரிமைகளைத் தமிழகத்திற்கும் பெற வேண்டும். ஆட்சியாளர்களும், உணர்வுள்ள தமிழர்களும் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)