Sunday, July 29, 2012

வேளாண்மையில் இன்றுள்ள சிக்கல்களும் தீர்வுகளும்


வேளாண்மைத் தொழில் முன் எப்போதைக் காட்டிலும் தற்போது பெரும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. அவற்றில் சில சிக்கல்கள் முதன்மையானவையாக உள்ளன.
வேளாண்மைத் தொழிலில் உள்ள ஏராளமான சிக்கல்களில் வேலைக்கு ஆள் கிடைக்காமை விளைபொருள்களுக்கு உரிய விலையின்மை நீர்வளம் தடுக்கப் படுதல் செயற்கை உரங்களாலும் பெரும் நிறுவனங்களாலும் நிலம் நீர் மாசடைதல் உரங்கள் விலையேற்றம் மற்றும் அவை கிடைக்காமை காட்டு விலங்குகளால் விளைபொருள்கள் அழிவு பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளையடிப்பு வேளாண்மைக்கு அரசு முக்கியத்துவம் தராமை ஒட்டு ரகங்களால் நோய்த்தாக்குதல் பருவநிலை மாற்றம் முதலிய சிக்கல்களை முதன்மையானவையாகக் குறிப்பிடலாம்.
இந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகள் சில உள்ளன. முதலில் வேளாண்மை இயந்திர மயமாக்கப் பட வேண்டும். அதற்கு வேண்டிய பொறிகளை வேளாண் பல்கலைக் கழகமும் திறமையுள்ள அறிஞர்களும் விவசாயிகளும் கண்டுபிடிக்க வேண்டும். அவற்றுக்கு இயற்கை எரிபொருள்களே பயன்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு வேளாண்மை பாடமாக வைக்கப்பட்டு விளை நிலங்களில் மாணவர்களுக்குப் பயிற்சி தந்தால்தான் வேளாண்மையைக் கேவலமாகக் கருத மாட்டார்கள்.
விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்ய அரசு விவசாயி வணிகர் அடங்கிய முத்தரப்புக் குழு அமைக்கப் பட்டு அதன்மூலம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆறுகளை தேசிய மயமாக்கி தேசியக் குழுவால் நீர்ப்பாசனத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது ஆற்றுநீர்ச் சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழக எல்லைகளைத் திருத்தியமைக்க வேண்டும்.
செயற்கை உரங்களைத் தவிர்த்து இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை அறிவியலாளர்களின் வழிகாட்டுதலை மேற்கொள்ள வைக்க வேண்டும். வேளாண் பல்கலைக் கழகங்களும் இயற்கை வேளாண்மையில் அக்கறை கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
காட்டு விலங்குகளான யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகளால் விளைபொருள்களுக்குப் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். யானைகளின் வழித்தடங்கள் மறிக்கப் படுகின்றன என்பதைவிட அவை தொல்லையில்லாமல் பயிர்களைத் தின்று பழகி விட்டன என்பதே உண்மை. இவற்றைத் தடுக்க காட்டுப் பகுதிகள் முழுமைக்கும் மின்வேலி அமைப்பதுடன் தொடர்ந்து அவற்றைப் பராமரிக்க வேண்டும். பெருகிவரும் காட்டுப் பன்றிகளை விவசாய நிலங்களில் புகும்போது அவற்றை வேட்டையாட அனுமதிக்க வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையாக இந்தியாவை மாற்ற மரபணு மாற்று விதைகளைக் கொண்டு வருகின்றன. இவற்றை அரசு முழுமையாகத் தடை செய்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும். வேளாண்மைக்கு அரசு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை. உணவு உற்பத்தி வேண்டுமெனில் பசுமைக்குடில் சொட்டுநீர்ப் பாசனம் உழவுப்பொறிகள் மற்றும் பிற கருவிகளனைத்திற்கும் அரசு மானியங்கள் மிகுதியாகத் தர வேண்டும். கர்நாடகத்தில் விவசாயிகளுக்கு ஊதியம் தரத் திட்டமிட்டதாகச் செய்திகள் வெளியாயின. அது நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஆனால் அத்திட்டம நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஒட்டு ரகங்களை விடுத்து நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவையும் இந்த மண்ணின் தன்மைக்கு ஏற்றவையுமான இந்த நாட்டுப் பாரம்பரிய விதைகளை விதைப்பதே நல்லதாகும்.
பருவநிலை மாற்றத்தைச் சரிசெய்ய அரசும் பொதுமக்களும் செய்ய வேண்டிய பணிகளுடன் விவசாயிகளும் செய்ய வேண்டிய பணிகள் உள்ளன. மரம் வளர்ப்பை அரசு தீவரமாகச் செயல்படுத்த வேண்டும். பெரும்பாலான விவசாயிகள் மரங்களை வளர்ப்பதில் போதிய அக்கறை இல்லாதவர்களாக உள்ளனர். இந்நிலை மாற வேண்டும். குறைந்தது ஓர் ஏக்கருக்கு ஒரு மரமாவது வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment