Sunday, April 26, 2015

தமிழில் சொல்லாக்கம் தேவையற்றதா?


    சொல்லாக்கம் என்பது ஒரு புதிய சொல்லை உண்டாக்குதல். இப்போது புதிது புதிதாகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றிற்கெனப் புதிய சொற்களைத் தமிழில் செய்வது சொல்லாக்கம். இதனைக் 'கலைச் சொல்லாக்கம்' என்று கூறுகின்றனர்.
    இந்தக் கலைச்சொல்லாக்கம் தேவை, தேவையில்லை என இருவகையான கருத்துக்கள் தமிழர்களில் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளன.
    புதிய சொல்லாக்கம் தேவையில்லை என்போர், இது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்களைச் சொல்கின்றனர். ஒரு தரப்பினர் ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் உள்ள சொற்கனை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர்.
    இன்னொரு தரப்பினர், மொழிபெயர்ப்பிற்குப் பதிலாக ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம் என்கின்றனர். சான்றாக, சிமெண்ட் என்பதைப் பாமர மக்கள் 'சிமிட்டி' என்கின்றனர். ஹாஸ்பிட்டல் என்பதை 'ஆஸ்பத்திரி' என்கின்றனர். இப்படிப் பேச்சு வழக்கில் உள்ளதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாமே என்கின்றனர்.
    வேறொரு தரப்பினர், புதிய சொல்லாக்கம் செய்தால், அது கடினமாக உள்ளது, என்னவென்றே புரியாததாக உள்ளது, நகைக்கத் தக்கதாக உள்ளது என்றெல்லாம் சொல்கின்றனர்.
    எடுத்துக்காட்டாக, காபி என்பதைக் 'கொட்டை வடிநீர்' என்றும், சைக்கிளைத் 'துவிச்சக்கர வண்டி' என்றும் மொழி பெயர்க்கின்றனர். இவை நன்றாகவா இருக்கின்றன? பேசுவதற்கும், ஒலிப்பதற்கும் கடினமாக உள்ளன, புரிவதுமில்லை. எனவே, காபியையும், சைக்கிளையும் அப்படியே சொல்லிக் கொள்ளலாமே என்கிறார்கள்.
    இதற்கான விடையைத் தருமுன், தமிழ்ச் சொல்லாக்கத்தின் தேவையை இங்கே சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
    பிற மொழிச் சொற்களைத் தமிழோடு கலப்பதால், தமிழின் தனித்தன்மை போய்விடும். தனித்தன்மை போனால் என்ன? மொழி என்பதே தகவல் தொடர்புக்குத்தானே, அது எப்படியிருந்தால் என்ன என்போர் உண்டு.
    முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற மொழிச் சொற்களுக்குப் புதிய சொற்களைப் படைத்துக் கொள்ளக்கூடிய தகுதியும், திறனும், ஆற்றலும் தமிழுக்கு உண்டு. ஆனால், பல வக்கற்ற மொழிகளுக்கு இல்லை. அவற்றைப் போலவே தமிழையும் கருதுவது தவறு.
    'ஜன்னல்' என்ற அயல்மொழிச் சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தமிழில் 'காலதர்', 'பலகணி', 'சாளரம்' முதலிய சொற்கள் பண்டை நாளிலேயே உண்டு. இவை பயன்பாட்டில் இல்லாமல், ஜன்னல் என்பதே வழக்கத்தில் உள்ளது. இதனால், பண்டைத் தமிழர்களுக்குச் சாளரமே தெரியாதோ என்று மற்றையோர் எண்ண இடமளித்து விடும்.
    தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் ஏற்படும் இன்னொரு தீய விளைவு தமிழருக்குத் தமிழரே எதிரியாதல்! இது எப்படி என்று கேட்கலாம். இதற்கு நம் கண் முன்னே சான்றுகள் உள்ளன. வடக்கிருந்து வந்த நம்பூதிரிக்கூட்டம், சேர நாட்டில் தமிழோடு வலிந்து வடமொழியைப் புகுத்தியது. இக்கலப்பினால் அங்கே தமிழ் மாறி, மலையாளமாகியது. சேர நாடு என்பது மாறிக் கேரளமாகியது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல  சங்கத்தமிழ்ப் பாக்களைத் தந்த சேர நாடு, இன்று தமிழ் மண்ணாக இல்லை. தமிழனாக இருந்தவன் இன்று மலையாளியாக மாறித் தமிழனுக்கே எதிரியாகி விட்டான்.
    இதே போலத்தான் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இன்ன பிற மொழிகளும் தமிழோடு பிற மொழிகள் கலந்ததால் உண்டாயின. இன்று எருமையூர் மைசூரானது. தமிழன் கன்னடனாகித் தமிழனுக்கு எதிரியானான். இவ்வாறுதான் தெலுங்கும் தெலுங்கரும்.
    அடுத்து, சொல்லாக்கம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகள் பற்றிய செய்தி.
    முன்னர் சொன்ன கொட்டை வடிநீர், துவிச்சக்கர வண்டி முதலியவற்றைப் பார்ப்போம். சொல்லாக்கம் செய்வதில் பல்வேறு நிலைகள் உள்ளன. பலர் பல சொற்களை ஒரே பொருளுக்குப் புதிதாக உண்டாக்குகின்றனர். அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் பொருத்தமானவையாக இருப்பினும் நம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியில்லாதவற்றைத் தவிர்த்து விடலாம். தமிழில் 'சொல்' என்னும் பொருள் தரும் நாற்பது சொற்கள் உள்ளன.
    செல்போன் என்பதைச் செல்பேசி, கைபேசி, அலைபேசி, செல்லிடப்பேசி எனப் பலவாறாகச் சொல்கின்றனர். இதை நாம் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பேசுவதால், 'செல்லிடப்பேசி' என்பது பொருத்தமானதாக உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.
    கம்ப்யூட்டர் என்பதை முதலில் கணிப்பொறி என்றனர். பின்னர் கணினி என்கின்றனர். இரண்டுமே பொருத்தமாக நன்றாக இருப்பதால், இரண்டையுமே பயன்படுத்தலாம். தவறில்லை.
    'கொட்டை வடிநீர்' என்பது பொருத்தமானதல்ல. காபிக் கொட்டையை அரைத்துத் தூளாக்கியே காபி கலந்து குடிக்கிறோம். கொட்டையை வடித்தல்ல. இதற்குத் தமிழ்ப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் ஐயா அவர்கள் ஆய்வு நோக்கில் சொல்லாக்கம் செய்துள்ளார்.
    அதாவது, பிரேசில் நாட்டில் காபிக் கொட்டையை முதலில் பார்த்தவருக்கு அதில் குதிரையின் கால் குளம்பு போன்ற தோற்றம் தெரிந்திருக்கிறது. அவர்கள் மொழியில் காபி என்பது குதிரையின் கால் குளம்பைக் குறிக்கும் சொல். அதன் அடிப்படையில் இதனையும் காபி என்றார்களாம். அந்த வரலாற்றின் அடிப்படையில் காபியைக் 'குளம்பி' என்று பாவாணர் சொல்லாக்கம் செய்தார். இதைப் புரியாதவர்கள் குளம்புக்கும் குழம்புக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப் போனவர்கள்தான்.
    இதே போல்தான் 'துவிச்சக்கர வண்டி' என்பதில் வண்டியைத் தவிர மற்றவை தமிழல்ல. இங்கே எது தமிழ், எது வடமொழி என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடமொழிச் சொற்கள் தேவையின்றித் தமிழோடு கலக்கப்பட்டுள்ளன. எனவே, முதலில் நாம் செய்யும் சொல்லாக்கத்தில் அதன் அடிப்படை வேர் தமிழ்தானா என்பதை அறிந்து செய்ய வேண்டும். 'மிதி வண்டி' என்று செய்யப்பட்ட  சொல்லாக்கம் இனிதாகவும், எளிதாகவும் இருக்கிறது. இதில் கடினமோ, குழப்பமோ இல்லையே!
    கடினமாக இன்றி எளிமையான சொற்களை உண்டாக்கலாம். அதே வேளை, நம்முடைய மொழியில் உள்ள சொற்கள் நமக்கே கடினமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 'வெஹிக்கிள்' என்ற சொல்லின் கடினமான ஒலிப்பை விடவா 'வண்டி' என்பது கடினமாக உள்ளது?
    இன்னொன்று சொல்கிறார்கள், இந்தச் சொல்லாக்கத்தால் வரும் புதிய சொற்கள் என்னவென்று புரியவில்லை என்று. அது ஏன்? நாம் புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ விரும்புவதில்லை. ஆர்வம் கொள்வதில்லை.
    ஆங்கிலத்தில் Through, Thorough, Though, Tough ஆகிய சொற்களில் பெரும்பாலான எழுத்துக்கள் ஒன்றே ஆயினும், ஒலிப்பு ஒரே மாதிரியாயில்லை. வேறு வேறானவை. இவற்றை விடவா தமிழ் குழப்பமாகவும், கடினமாகவும் உள்ளது?-
    தமிழ்ச் சொல்லாக்கத்தை ஏளனமாகப் பேசும் இந்த ஆங்கிலக் காதலை, அயல் மொழி வேட்கையை, தமிழைத் தாழ்வாக நினைக்கும் மடமையை என்னென்பது?
    தமிழில் என்ன இருக்கிறது? என்று கேட்போர் சிலர் உள்ளனர். என்ன இல்லை? என்று இவர்கள் முதலில் அறிய வேண்டும். அடுத்து ஏன் இல்லை? என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். பின் இல்லாததைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவும் செய்யாமல், உண்மையில் தமிழில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாமல் வீணே பேசித் தாய்மொழியை இழிவு செய்கின்றனர்.
    தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழ்நாட்டிலேயே திருமடம் அமைத்து சமயப்பணிகள் செய்து வரும் ஒரு துறவி, தமிழகத்தில் தமிழர்களோடு எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார், எழுதுகிறார். இவருக்குத் தமிழ் தெரியாத மொழியல்ல. எதற்காக இப்படிச் செய்கிறார்? இப்படிப்பட்ட பிறவிகளை என்னவென்று சொல்வது?
    பொருத்தமான சொல்லாக்கத்தைப் படித்த அறிஞர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. பாமரனும் செய்யலாம். யார் செய்தாலும் சரியானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    'ஹார்ட்வேர்ஸ் அன்ட் பெயிண்ட் ஸ்டோர்' என்பதைத் தமிழில் எப்படி எழுதுவது? என்று தேவநேயப்பாவாணரிடம் ஒருவர் கேட்ட போது, 'வன்பொருள் வண்ணப்பூச்சு அங்காடி' என்று உடனே அவர் விடை தந்தாராம். இன்று கணினித்துறையில் வன்பொருள், மென்பொருள் எனும் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.   
    மேலும் அவர், சிமென்ட் என்பதற்குச் 'சுதைமா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். பண்டைய நாளில் கோவில்களில் சுதைச் சிற்பங்கள் செய்யப்பட்டிருப்பதை இன்றும் காண்கிறோம். அதன் அடிப்படையில் 'சுதை மாவு' என்று மொழிபெயர்த்து அதைச் 'சுதைமா' என்றார் பாவாணர். இது நல்ல சொல்லாக்கம்தான். நாம்தான் பயன்படுத்தவுமில்லை, அறிந்து கொள்ளவுமில்லை.
    எனவே, பிறமொழிச் சொற்களைத் தமிழில் அப்படியே பயன்படுத்தாமல் சொல்லாக்கம் செய்து கொள்வது, தமிழுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நன்மையைத் தரும். பிரான்சு நாட்டில் எந்தவொரு புதிய அயல்மொழிச் சொல்லுக்கும் பிரெஞ்சு மொழியில் புதிய சொல்லாக்கம் செய்தே பயன்படுத்துகிறார்களாம். அவர்கள் ஆங்கிலத்தை இழிவான மொழியாகவே கருதுகிறார்களாம்.
    ஆனால், 'செம்மொழி' என்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகக் கொண்டுள்ள ஒரே மொழியான தமிழுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நம் மொழியின் அருமை, பெருமையை அறியாமல் வளமில்லாத மொழிகளைப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
    நாம், பாரதியார் சொன்னது போல் 'எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பது' நல்ல தமிழில் இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியார் சொன்னார். அதே வேளை, ஏற்கெனவே உள்ள நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கும் நிலையையும் மாற்றி நல்ல தமிழில் பேசவும் எழுதவும் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment