Showing posts with label தமிழர் நாகரிகம். Show all posts
Showing posts with label தமிழர் நாகரிகம். Show all posts

Sunday, April 26, 2015

தமிழில் சொல்லாக்கம் தேவையற்றதா?


    சொல்லாக்கம் என்பது ஒரு புதிய சொல்லை உண்டாக்குதல். இப்போது புதிது புதிதாகக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கான பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கின்றன. அவற்றிற்கெனப் புதிய சொற்களைத் தமிழில் செய்வது சொல்லாக்கம். இதனைக் 'கலைச் சொல்லாக்கம்' என்று கூறுகின்றனர்.
    இந்தக் கலைச்சொல்லாக்கம் தேவை, தேவையில்லை என இருவகையான கருத்துக்கள் தமிழர்களில் பல்வேறு தரப்பினரிடமும் உள்ளன.
    புதிய சொல்லாக்கம் தேவையில்லை என்போர், இது தொடர்பாக வெவ்வேறு கருத்துக்களைச் சொல்கின்றனர். ஒரு தரப்பினர் ஆங்கிலம் அல்லது வேறு மொழியில் உள்ள சொற்கனை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்றனர்.
    இன்னொரு தரப்பினர், மொழிபெயர்ப்பிற்குப் பதிலாக ஒலிபெயர்ப்புச் செய்து கொள்ளலாம் என்கின்றனர். சான்றாக, சிமெண்ட் என்பதைப் பாமர மக்கள் 'சிமிட்டி' என்கின்றனர். ஹாஸ்பிட்டல் என்பதை 'ஆஸ்பத்திரி' என்கின்றனர். இப்படிப் பேச்சு வழக்கில் உள்ளதை அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாமே என்கின்றனர்.
    வேறொரு தரப்பினர், புதிய சொல்லாக்கம் செய்தால், அது கடினமாக உள்ளது, என்னவென்றே புரியாததாக உள்ளது, நகைக்கத் தக்கதாக உள்ளது என்றெல்லாம் சொல்கின்றனர்.
    எடுத்துக்காட்டாக, காபி என்பதைக் 'கொட்டை வடிநீர்' என்றும், சைக்கிளைத் 'துவிச்சக்கர வண்டி' என்றும் மொழி பெயர்க்கின்றனர். இவை நன்றாகவா இருக்கின்றன? பேசுவதற்கும், ஒலிப்பதற்கும் கடினமாக உள்ளன, புரிவதுமில்லை. எனவே, காபியையும், சைக்கிளையும் அப்படியே சொல்லிக் கொள்ளலாமே என்கிறார்கள்.
    இதற்கான விடையைத் தருமுன், தமிழ்ச் சொல்லாக்கத்தின் தேவையை இங்கே சுருக்கமாகப் பார்த்து விடலாம்.
    பிற மொழிச் சொற்களைத் தமிழோடு கலப்பதால், தமிழின் தனித்தன்மை போய்விடும். தனித்தன்மை போனால் என்ன? மொழி என்பதே தகவல் தொடர்புக்குத்தானே, அது எப்படியிருந்தால் என்ன என்போர் உண்டு.
    முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிற மொழிச் சொற்களுக்குப் புதிய சொற்களைப் படைத்துக் கொள்ளக்கூடிய தகுதியும், திறனும், ஆற்றலும் தமிழுக்கு உண்டு. ஆனால், பல வக்கற்ற மொழிகளுக்கு இல்லை. அவற்றைப் போலவே தமிழையும் கருதுவது தவறு.
    'ஜன்னல்' என்ற அயல்மொழிச் சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். தமிழில் 'காலதர்', 'பலகணி', 'சாளரம்' முதலிய சொற்கள் பண்டை நாளிலேயே உண்டு. இவை பயன்பாட்டில் இல்லாமல், ஜன்னல் என்பதே வழக்கத்தில் உள்ளது. இதனால், பண்டைத் தமிழர்களுக்குச் சாளரமே தெரியாதோ என்று மற்றையோர் எண்ண இடமளித்து விடும்.
    தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலப்பதால் ஏற்படும் இன்னொரு தீய விளைவு தமிழருக்குத் தமிழரே எதிரியாதல்! இது எப்படி என்று கேட்கலாம். இதற்கு நம் கண் முன்னே சான்றுகள் உள்ளன. வடக்கிருந்து வந்த நம்பூதிரிக்கூட்டம், சேர நாட்டில் தமிழோடு வலிந்து வடமொழியைப் புகுத்தியது. இக்கலப்பினால் அங்கே தமிழ் மாறி, மலையாளமாகியது. சேர நாடு என்பது மாறிக் கேரளமாகியது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மற்றும் பல  சங்கத்தமிழ்ப் பாக்களைத் தந்த சேர நாடு, இன்று தமிழ் மண்ணாக இல்லை. தமிழனாக இருந்தவன் இன்று மலையாளியாக மாறித் தமிழனுக்கே எதிரியாகி விட்டான்.
    இதே போலத்தான் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இன்ன பிற மொழிகளும் தமிழோடு பிற மொழிகள் கலந்ததால் உண்டாயின. இன்று எருமையூர் மைசூரானது. தமிழன் கன்னடனாகித் தமிழனுக்கு எதிரியானான். இவ்வாறுதான் தெலுங்கும் தெலுங்கரும்.
    அடுத்து, சொல்லாக்கம் செய்வதில் உள்ள இடர்ப்பாடுகள் பற்றிய செய்தி.
    முன்னர் சொன்ன கொட்டை வடிநீர், துவிச்சக்கர வண்டி முதலியவற்றைப் பார்ப்போம். சொல்லாக்கம் செய்வதில் பல்வேறு நிலைகள் உள்ளன. பலர் பல சொற்களை ஒரே பொருளுக்குப் புதிதாக உண்டாக்குகின்றனர். அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் பொருத்தமானவையாக இருப்பினும் நம் தேவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சரியில்லாதவற்றைத் தவிர்த்து விடலாம். தமிழில் 'சொல்' என்னும் பொருள் தரும் நாற்பது சொற்கள் உள்ளன.
    செல்போன் என்பதைச் செல்பேசி, கைபேசி, அலைபேசி, செல்லிடப்பேசி எனப் பலவாறாகச் சொல்கின்றனர். இதை நாம் செல்லுமிடமெல்லாம் கொண்டு சென்று பேசுவதால், 'செல்லிடப்பேசி' என்பது பொருத்தமானதாக உள்ளது. அதைப் பயன்படுத்தலாம்.
    கம்ப்யூட்டர் என்பதை முதலில் கணிப்பொறி என்றனர். பின்னர் கணினி என்கின்றனர். இரண்டுமே பொருத்தமாக நன்றாக இருப்பதால், இரண்டையுமே பயன்படுத்தலாம். தவறில்லை.
    'கொட்டை வடிநீர்' என்பது பொருத்தமானதல்ல. காபிக் கொட்டையை அரைத்துத் தூளாக்கியே காபி கலந்து குடிக்கிறோம். கொட்டையை வடித்தல்ல. இதற்குத் தமிழ்ப் பேரறிஞர் தேவநேயப்பாவாணர் ஐயா அவர்கள் ஆய்வு நோக்கில் சொல்லாக்கம் செய்துள்ளார்.
    அதாவது, பிரேசில் நாட்டில் காபிக் கொட்டையை முதலில் பார்த்தவருக்கு அதில் குதிரையின் கால் குளம்பு போன்ற தோற்றம் தெரிந்திருக்கிறது. அவர்கள் மொழியில் காபி என்பது குதிரையின் கால் குளம்பைக் குறிக்கும் சொல். அதன் அடிப்படையில் இதனையும் காபி என்றார்களாம். அந்த வரலாற்றின் அடிப்படையில் காபியைக் 'குளம்பி' என்று பாவாணர் சொல்லாக்கம் செய்தார். இதைப் புரியாதவர்கள் குளம்புக்கும் குழம்புக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப் போனவர்கள்தான்.
    இதே போல்தான் 'துவிச்சக்கர வண்டி' என்பதில் வண்டியைத் தவிர மற்றவை தமிழல்ல. இங்கே எது தமிழ், எது வடமொழி என்று அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடமொழிச் சொற்கள் தேவையின்றித் தமிழோடு கலக்கப்பட்டுள்ளன. எனவே, முதலில் நாம் செய்யும் சொல்லாக்கத்தில் அதன் அடிப்படை வேர் தமிழ்தானா என்பதை அறிந்து செய்ய வேண்டும். 'மிதி வண்டி' என்று செய்யப்பட்ட  சொல்லாக்கம் இனிதாகவும், எளிதாகவும் இருக்கிறது. இதில் கடினமோ, குழப்பமோ இல்லையே!
    கடினமாக இன்றி எளிமையான சொற்களை உண்டாக்கலாம். அதே வேளை, நம்முடைய மொழியில் உள்ள சொற்கள் நமக்கே கடினமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 'வெஹிக்கிள்' என்ற சொல்லின் கடினமான ஒலிப்பை விடவா 'வண்டி' என்பது கடினமாக உள்ளது?
    இன்னொன்று சொல்கிறார்கள், இந்தச் சொல்லாக்கத்தால் வரும் புதிய சொற்கள் என்னவென்று புரியவில்லை என்று. அது ஏன்? நாம் புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ விரும்புவதில்லை. ஆர்வம் கொள்வதில்லை.
    ஆங்கிலத்தில் Through, Thorough, Though, Tough ஆகிய சொற்களில் பெரும்பாலான எழுத்துக்கள் ஒன்றே ஆயினும், ஒலிப்பு ஒரே மாதிரியாயில்லை. வேறு வேறானவை. இவற்றை விடவா தமிழ் குழப்பமாகவும், கடினமாகவும் உள்ளது?-
    தமிழ்ச் சொல்லாக்கத்தை ஏளனமாகப் பேசும் இந்த ஆங்கிலக் காதலை, அயல் மொழி வேட்கையை, தமிழைத் தாழ்வாக நினைக்கும் மடமையை என்னென்பது?
    தமிழில் என்ன இருக்கிறது? என்று கேட்போர் சிலர் உள்ளனர். என்ன இல்லை? என்று இவர்கள் முதலில் அறிய வேண்டும். அடுத்து ஏன் இல்லை? என்று ஆய்ந்து பார்க்க வேண்டும். பின் இல்லாததைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எதுவும் செய்யாமல், உண்மையில் தமிழில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய அடிப்படை அறிவும் இல்லாமல் வீணே பேசித் தாய்மொழியை இழிவு செய்கின்றனர்.
    தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, தமிழ்நாட்டிலேயே திருமடம் அமைத்து சமயப்பணிகள் செய்து வரும் ஒரு துறவி, தமிழகத்தில் தமிழர்களோடு எப்போதும் ஆங்கிலத்திலேயே பேசுகிறார், எழுதுகிறார். இவருக்குத் தமிழ் தெரியாத மொழியல்ல. எதற்காக இப்படிச் செய்கிறார்? இப்படிப்பட்ட பிறவிகளை என்னவென்று சொல்வது?
    பொருத்தமான சொல்லாக்கத்தைப் படித்த அறிஞர்கள்தான் செய்ய வேண்டுமென்பதில்லை. பாமரனும் செய்யலாம். யார் செய்தாலும் சரியானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    'ஹார்ட்வேர்ஸ் அன்ட் பெயிண்ட் ஸ்டோர்' என்பதைத் தமிழில் எப்படி எழுதுவது? என்று தேவநேயப்பாவாணரிடம் ஒருவர் கேட்ட போது, 'வன்பொருள் வண்ணப்பூச்சு அங்காடி' என்று உடனே அவர் விடை தந்தாராம். இன்று கணினித்துறையில் வன்பொருள், மென்பொருள் எனும் சொற்கள் புழக்கத்தில் இருப்பதைக் காண்கிறோம்.   
    மேலும் அவர், சிமென்ட் என்பதற்குச் 'சுதைமா' என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். பண்டைய நாளில் கோவில்களில் சுதைச் சிற்பங்கள் செய்யப்பட்டிருப்பதை இன்றும் காண்கிறோம். அதன் அடிப்படையில் 'சுதை மாவு' என்று மொழிபெயர்த்து அதைச் 'சுதைமா' என்றார் பாவாணர். இது நல்ல சொல்லாக்கம்தான். நாம்தான் பயன்படுத்தவுமில்லை, அறிந்து கொள்ளவுமில்லை.
    எனவே, பிறமொழிச் சொற்களைத் தமிழில் அப்படியே பயன்படுத்தாமல் சொல்லாக்கம் செய்து கொள்வது, தமிழுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் நன்மையைத் தரும். பிரான்சு நாட்டில் எந்தவொரு புதிய அயல்மொழிச் சொல்லுக்கும் பிரெஞ்சு மொழியில் புதிய சொல்லாக்கம் செய்தே பயன்படுத்துகிறார்களாம். அவர்கள் ஆங்கிலத்தை இழிவான மொழியாகவே கருதுகிறார்களாம்.
    ஆனால், 'செம்மொழி' என்பதற்கு வரையறுக்கப்பட்டுள்ள அனைத்துத் தகுதிகளையும் முழுமையாகக் கொண்டுள்ள ஒரே மொழியான தமிழுக்குச் சொந்தக்காரர்களாகிய நாம், நம் மொழியின் அருமை, பெருமையை அறியாமல் வளமில்லாத மொழிகளைப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.
    நாம், பாரதியார் சொன்னது போல் 'எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பது' நல்ல தமிழில் இருக்க வேண்டும். அதைத்தான் பாரதியார் சொன்னார். அதே வேளை, ஏற்கெனவே உள்ள நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கும் நிலையையும் மாற்றி நல்ல தமிழில் பேசவும் எழுதவும் முன்வர வேண்டும்.

Saturday, March 31, 2012

கொங்கு நாட்டில் கண்ணகி வழிபாடு


சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காப்பியத்தின் மையப் பொருளாக, கதையைக் கூற வந்த நோக்கமாக எடுத்தியம்புவது, பத்தினியை மேலோர் போற்றி வணங்குவர் என்பதாகும். உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் என அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்தினித் தெய்வமாகிய கண்ணகி மாரியம்மனாகத் தமிழகம் எங்கும் வணங்கப் படுகிறாள்.
கோவலன் மதுரையில் கொல்லப்பட்டு, அம்மூதூர் கண்ணகியால் எரியூட்டப்பட்ட பின்னர் பல ஆண்டுகள் மழை வளமின்றி வறண்டுபோக, பின்னர் வந்த பாண்டிய மன்னன் மழை வேண்டிக் கண்ணகிக்குக் கோயில் எடுத்து வழிபட, நாடு மழை வளம் பெற்றுச் செழித்ததாம்.
மாரி என்றால் மழை. மழைக்காக வழிபடப்பட்ட அம்மன் மாரியம்மன். தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். பின்னாளில் இது சக்தி வழிபாடாகக் கொண்டாடப் பட்டாலும் மாரியம்மன் வழிபாட்டின் தொடக்கம் கண்ணகி வழிபாடே!
கொங்கு நாட்டிலும் பெரும்பாலான ஊர்களில் மாரியம்மன் கோயில்கள் உள்ளன. கோவை மாநகரின் மையப்பகுதியில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளதைக் கோவை மக்கள் அனைவரும் அறிவர்.
வறட்சியான கோடைக் காலங்களில் மழை வேண்டி மாரியம்மனுக்குத் திருவிழா நடத்தப் படுவது வழக்கமாக உள்ளது. இது ஆதியில் நடைபெற்ற கண்ணகி வழிபாட்டை எடுத்துக் காட்டுகிறது.
திருவிழாவின் போது கோயிலின் முன்புறத்தில் முக்கொம்புக் கம்பத்தில் பூவோட்டில் எரி வளர்ப்பதும், பக்தர்கள் பூவோட்டில் தீயேந்தி வருவதும் மதுரையைக் கண்ணகி எரியூட்டியதைப் போற்றுவதாக இருக்கலாம்.
தேனி மாவட்டத்திற்கு அருகில் தேசியத்திற்காகத் தமிழகம் கேரளத்திடம் இழந்த பகுதியிலுள்ள மங்கலதேவி கோயிலைச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கட்டிய கோயிலென்று ஆண்டுதோறும் தமிழக மக்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கொங்கு நாட்டிலும் கண்ணகி மங்கல தேவியாக வழிபடப் படுகிறாள்.
கோவை மாவட்டம் ஆலாந்துறைக்கு அருகிலுள்ள நாதகவுண்டன்புதூரிலிருந்து வடிவேலாம்பாளையம் செல்லும் சாலையில் மங்கலம்மன் கோயில் ஒன்றுள்ளது. இது இப்பகுதியைச் சேர்ந்த ஏழு ஊர் மக்கள் விழா எடுத்துக் கொண்டாடும் கோயிலாகும். இப்பகுதி கொங்கு நாட்டின் மேற்கெல்லைப் பகுதியாகும்.
இக்கோயிலில் சுடுமண்ணால் செய்யப்பட்ட யானை மற்றும் குதிரைச் சிற்பங்கள் மிகப்பெரிய அளவில் முன்னர் நிறைய இருந்தன. பாதுகாப்பற்ற நிலையில் தற்போது அவை அழிந்து விட்டன.
இக்கோயில் திருவிழாவிற்கு நாதகவுண்டன்புதூருக்குத் தென்மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் உச்சியிலுள்ள மங்கலம்மன் சோலை என்னும் அடர்ந்த காட்டிலிருந்துதான் கரகம் கொண்டு வருவார்கள். அதைக் கொண்டுவரும் உரிமை அப்பகுதியிலுள்ள மலைவாழ் பழங்குடி மக்களுக்கே உரியது. ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இக்கோயில் திருவிழா நடத்தப் படவில்லை.
மலையுச்சியிலுள்ள மங்கலம்மன் சோலையிலும் ஒரு மங்கலம்மன் கோயில் உள்ளது. திறந்த வெளியில் நடுகற்களைத் தெய்வமாக வழிபடுபவர்கள் இந்த மங்கலம்மன் சோலையையொட்டியுள்ள பாறைப்பட்டி என்னும் மலைக் குடியிருப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களும், நாதகவுண்டன்புதூர் மக்களுமாவர். தற்போது பாறைப்பட்டியைச் சேர்ந்த பெரும்பாலான பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து விட்டனர்.
மங்கலம்மன் சோலையில் ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதில் ஆடுகளை உயிர்ப்பலி தரும் வழக்கம் உள்ளது.
மங்கலம்மன் சோலைக் கோயிலுக்குக் கிழக்கில் உள்ளது பாறைப்பட்டி. அதற்கும் கிழக்கில் கோபாலசாமி கோயில் என்னும் மலை வழிபாட்டிடம் ஒன்று உள்ளது. இது வட்டமாகப் பரந்திருக்கும் ஒரு பாறைப் பரப்புத்தான். இது கோபாலசாமி கோயிலா, கோவலன்சாமி கோயிலா என்பது ஆய்வுக்குரியது. பண்டை நாட்களில் ஆடு, மாடு மேய்க்கும் மக்களால் கோபாலசாமியாகத் திருமால் வழிபடப் பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து.
ஆனால்,  அருகிலுள்ள மங்கலம்மனை மங்கலதேவி எனப் போற்றப்படும் கண்ணகிதேவி வழிபாடெனக் கொண்டால் இதனைக் கோவலன்சாமி கோயிலாகக் கருதலாம். சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் குன்றக்குரவையில் மலைவாழ் பழங்குடி மக்கள் தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே எனக் கண்ணகியைத் தெய்வமாக வழிபடத் தொடங்கியதாகக் கூறப் பட்டுள்ளதை, இது கண்ணகி வழிபாடெனக் கொள்வதற்குச் சான்றாகக் கொள்ளலாம். எனவே மலைவாழ் மக்கள் இங்கும் கண்ணகியை வழிபடும் வாய்ப்புகள் உண்டு.
கண்ணகி கோவலனுடன் வானுலகம் சென்ற செய்தியைச் சேரன் செங்குட்டுவனுக்கு மலைவாழ் மக்கள்தான் கூறியதாகச் சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் காட்சிக்காதையில் செய்தி உள்ளது. சேரன் செங்குட்டுவன்  கண்ணகிக்காக இமயத்தில் கல்லெடுத்துவரப் படையுடன் சென்றபோது இந்தப்பகுதி வழியாகத்தான் சென்றிருக்க வேண்டும் என முனைவர் ந. இரா. சென்னியப்பன் அவர்கள் கூறுகிறார்.
எனவே கொங்கு நாட்டில் வழிபடப்படும் மங்கலம்மனும், மாரியம்மனும் கண்ணகிதேவியே எனக் கருதலாம்.

Monday, May 9, 2011

பத்துப்பாட்டில் பழந்தமிழர் மனைகள்

உலக வரலாற்றில் குறிப்பிடப்படும் பண்டைய நாகரிகங்களில் குறிப்பிடத்தக்கது தமிழர் நாகரிகம். தமிழர் உலக மாந்தர் இனங்களிலேயே தொன்மையானவர்கள். குமரிக்கண்டம் அழியாது இருந்திருந்தால் தமிழினத்தின் தொன்மையை யாரும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
தமிழர்களை, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்தகுடி எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் படித்துப் பார்த்தால் தமிழன் இன்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே எந்த அளவு மேம்பட்ட நாகரிகத்தையுடையவனாக இருந்துள்ளான் என்பது அறியலாகும்.
அந்த நாகரிகத் தமிழன் கட்டடக் கலையில் எந்த அளவுக்குத் திறமுடையவனாக
இருந்தான் என்பதைக் காவிரியின் குறுக்கே கரிகாலன் கட்டிய கல்லணை நமக்குச் சான்று பகர்கிறது. சிறந்த பண்டைய நகரமைப்பு என்று போற்றப்படும் சிந்துவெளி நாகரிகமே தமிழர் நாகரிகம் எனத் தொல்லியலாளர்கள் நிறுவி வருகின்றனர். தமிழகத்திலுள்ளது போன்ற பண்டைய பெருங்கற் கோயில்களை வேறெங்கும் காண இயலாது.
அப்படிப்பட்ட தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றி நாம் அறியப் பண்டைய தமிழிலக்கியங்கள் பல செய்திகளைத் தருகின்றன. அவ்வகையில் சங்கத் தொகை நூல்களில் பத்துப் பாட்டில் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்த இல்லங்கள் பற்றிய செய்திகள் பல கிடைக்கின்றன.
பத்துப்பாட்டில் மனைகள் பற்றிய செய்திகள் தரும் பாடல்கள்
பத்துப்பாட்டுத் தொகை நூலில் உள்ள சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய ஏழு பாட்டுக்களில் மனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மனைகளின் வகைகள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் உள்ள இல்லங்களைப் பற்றிய குறிப்புகள் பத்துப்பாட்டு இலக்கியங்களில் உள்ளன. அவை அந்தந்தப் பகுதியின் நிலைமைகளுக்கேற்பவும் மக்களின் பொருளாதார வளங்களுக்கு ஏற்பவும் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன, அவ்வகையில் குடிசைகள், மாடங்களைக் கொண்ட வீடுகள், அரசர்களின் அரண்மனைகள், போர்க்களத்தில் அமைக்கப் பட்ட பாசறைகள் ஆகியன பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.
ஊர்கள், தெருக்கள், மதில்கள்,வேலிகள், கலங்கரை விளக்கம், குடிசைகளின் கூரைகள், வீடுகளின் முற்றம், கதவுகள், கால்நடைகளின் கொட்டில்கள் முதலியன பற்றிய செய்திகளும் கிடைக்கின்றன. மேலும் மனைநூல் இலக்கணப்படி கால்கோள் செய்தல் பற்றிய செய்திகளும் உள்ளன.
1.குடிசைகள்
ஐவகை நிலங்களிலும் குடிசைகள் இருந்துள்ளன. தினையரிந்த தாளாலே வேயப்பட்ட குறிய கால்களையுடைய குடிசைகள் இருந்ததைக் குறிஞ்சிப்பாட்டு கூறுகிறது.(1) தமிழகத்தில் பாலைநிலம் இல்லை. முல்லை நிலமும்,குறிஞ்சி நிலமும் வறட்சியில் வளங்குன்றியிருக்கும் நிலையையே பாலை என்றனர்.(2) பாலை நிலத்தில் இலைகளைக் கொண்டு வேயப்பட்ட குடிசை இருந்ததை மதுரைக்காஞ்சி இலைவேய் குரம்பை என்று கூறுகிறது.(3)
இந்த இலைகள் காய்ந்தால் உதிர்ந்துவிடும் தன்மை கொண்டனவாயினும் பாலை நிலத்தில் மழையில்லாத காலத்திற்கு அது போதுமானதாக இருந்திருக்கும் என்று உய்த்துணரலாம்.
தமிழகத்தில் தொண்டை நாட்டுப் பகுதியிலுள்ள வேலூர் வெப்பம் மிகுந்த நகரமாக இருப்பதை இன்று நாம் காண்கிறோம். சங்க காலத்திலும் மிகுந்த வெப்பமுள்ள ஊராகவே அது இருந்திருக்கிறது. மிகுகின்ற வெயிலுக்குக் குடிசை வீட்டிற்குள்ளே இருப்பவர்கள் வருந்தத்தக்க அளவு வெப்பம் மிகுந்து விளங்குகின்ற குடிலில் எயினக்குல மகளிரான எயிற்றியர் இருந்ததை, விறல்வேல் வென்றி வேலூர் எய்தின் உறுவெயிற் குலைஇய உருப்பவிர் குரம்பை (4) என்று சிறுபாணாற்றுப்படை எடுத்துரைக்கிறது.
எயினர் இல்லம்
எயினர் இல்லம் பற்றி இன்னும் சிறப்பாகப் பெரும்பாணாற்றுப் படையில் விளக்கப் பட்டுள்ளது. ஊகம் புல்லாலே வேயப்பட்ட உயர்ந்த நிலையையுடைய மதிலையும், மலையிடத்தே தூங்கும் தேனிறாலைப் போன்ற குதையினையுடைய அம்புக் கட்டினையும், கடிதாக ஒலிக்கும் துடிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலையும், சங்கிலியால் நாய்களைக் கட்டி வைத்துள்ள கிட்டுதற்கரிய காவலமைந்த வீடுகளையும், உயிர்வாழ் முள்வேலிகளையும் அதாவது முட்செடிகளையே காவல் மதிலாகவும் அதனைச் சூழ்ந்த காவல் காட்டினையும் உருண்ட கணைய மரமிட்ட ஒட்டுக் கதவினையும் கொண்டதாக அவை இருந்தன.(5) இவை எளிய குடிசைகளைவிட மேம்பட்ட நிலையைக் கொண்டதாக அறியலாகின்றன. கொடுமுடி வலைஞர் குடிசைகள்
மூங்கிற்கோலை வரிசையாகச் சார்த்தி வெண்மையான மரக்கொம்புகளை இடையிடையே கலந்து தாழை நாரால் கட்டி, தர்ப்பைப் புல்லால் வேயப்பட்ட கூரையை உடையதாக வலைஞர் குடிசைகள் இருந்தன. அதன் முற்றத்தில் வளைந்த காலையுடைய புன்னைக் கொம்பை வெட்டி அமைத்த பந்தலில் பசுமையான காய்கள் இருந்தன என வலைஞர் இல்லங்கள் பற்றிப் பெரும்பாணாற்றுப் படை தெரிவிக்கிறது.(6)
உழவர் இல்லங்கள்
பெரும்பாணாற்றுப் படையில் உழவர்களின் இல்லங்கள் பற்றிய செய்திகள் சில உள்ளன. வயல் வரப்பிடத்தே புதிய வைக்கோலால் வேயப்பட்டிருந்த கவிந்த குடில் இருந்தது.(7) ஊருக்குள் உழவர்களின் வீடுகளின் பக்கத்தில் மாட்டுக் கன்றுகள் கட்டப்பட்ட முளைகள் நடப்பட்டிருந்தன. ஏணிக்கு எட்டாத நெடிய வடிவுடன், அழியாத தன்மையுடையனவாய் முதிர்ந்த நெற்கூடுகள் உயர்ந்துநின்ற நல்ல இல்லங்களாக விளங்கின.(8)
தோப்புகளில் குடியிருப்போர் இல்லங்கள்
தென்னந்தோப்புகளில் யானையின் உடம்பு போன்ற சொரசொரப்பையுடைய வாடிய தென்னை மட்டைகளால் வேயப்பட்டனவாகவும், முற்றத்தில் மஞ்சளும் பூந்தோட்டங்களும் உடையனவாகவும் தனித்தனி வீடுகளாகக் குடில்கள் இருந்தன.(9) இன்றும் தென்னந்தோப்புகளில் இத்தகைய தனிக்குடில்கள் இருப்பதைக் காண்கிறோம்.
கோவலர் இருக்கை
ஆடு,மாடுகள் மேய்க்கும் இடையர்களின் குடிலில் ஆடுகள் தின்பதற்காகக் கயிற்றில் தழைகளைக் கட்டிய குறுகிய கால்கள் நடப்பட்டிருந்தன. நெருக்கமாகக் குச்சிகளைச் சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய படலால் ஆன கதவு இருந்தது. வரகுக்கற்றையால் வேயப்பட்டுக் கழிகளால் கட்டப்பட்ட நடமாடும் குடில் அதாவது செல்லுமிடமெல்லாம் தூக்கிச் செல்லக் கூடிய வகையிலமைந்த தங்குமிடம் இருந்தது. பெரிய கூடை போன்ற இக்குடிலை இப்போதும் சிற்றூர்ப்புறங்களில் காணலாம். இது சேக்கை என்று கூறப்படுகிறது. அதில் படுத்தால் உறுத்தாமல் இருக்க, தோலாலான பாய் விரிக்கப் பட்டிருந்தது. ஆடுகளை முற்றத்தில் கட்டுவதற்காகத் தாம்புகளைக் கொண்ட குறுகிய முளைக்குச்சிகளும், முள்வேலிகளும் உடையதாக முல்லைநில ஊர் இருந்தது.(10)
பரதவர் குடியிருப்பு
நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவரின் குடியிருப்புகள் பற்றிப் பட்டினப்பாலையில் செய்தி உள்ளது. போரில் இறந்த மறவர்க்கு நடும் நடுகல்லைச் சுற்றிலும் வேல்களை ஊன்றி உட்புறமாகக் கிடுகுகளை வேய்ந்து அரண் அமைப்பது போல நெடிய தூண்டிற்கோல் சாத்திய கூரையையுடையதாகக் குடியிருப்பு இருந்தது. அக்குடியிருப்பின் நடுவே நிலவினைச் சேர்ந்த இருள்போல வலைகிடந்து உலரும் மணல் முற்றத்தையுடையதாக மனை இருந்தது. (11)
பரதவர் குடியிருப்புப் பற்றிய செய்தியில் போர்மறவர் நடுகல் காக்கப்பட்டது பற்றிய செய்தியும் அறியக் கிடைக்கிறது.
2. பெரிய வீடுகள்
சிறுசிறு குடிசைகள் இருந்ததைக் கூறியுள்ளது போலப் பெரிய வீடுகளும், மாடங்களைக் கொண்ட வீடுகளும் ஊர்களிலும், நகரங்களிலும் இருந்ததையும் பத்துப்பாட்டு இலக்கியங்கள் எடுத்துக் கூறியுள்ளன.
முல்லை நில ஊர் வீடுகள்
முல்லை நிலத்தின் சிறிய ஊர்களிலுள்ள வீடுகளைப் பற்றிய செய்தி முல்லைப் பாட்டில் உள்ளது. முள்வேலியிட்ட தொழுவங்கள் இருந்தன. அங்கே பெண்யானைகள் நின்றாற்போன்ற குதிர்கள் முற்றத்தில் இருந்தன. வீடுகளின் முன்பு பந்தல்கள் இருந்தன. சிறிய உருளைகளையும்,கலப்பைகளையும் சார்த்தியதால் தேய்ந்த நெடிய சுவர்களைக் கொண்ட இல்லங்களில் கூரைகள் கார்காலத்தில் வேயப்பட்டு அழகுற விளங்கின என்கிறது முல்லைப்பாட்டு.(12)
மழைக்காலம் தொடங்கும்போது ஒழுகாதிருக்கப் புதிய கூரை வேயும் வழக்கம் இருந்துள்ளது என்பது இச்செய்தியால் அறியலாகின்றது.
நெடுநிலை மாடங்கள்
குடிசைகள்,சாதாரண வீடுகள் மட்டுமின்றி, செல்வச் செழிப்புள்ளோரின் மாட மாளிகைகளும் சங்க காலத்தில் இருந்துள்ளன. வானை நோக்கி மிகவும் உயர்ந்த மேல் மாடங்களை உடைய வீடுகள் இருந்தன. அவற்றில் இளவேனிற்காலத்தில் காற்று வருவதற்காகப் பலகணிகள் அமைக்கப் பட்டிருந்தன. மழைக்காலத்தில் அவை திறக்கப்படாமல் தாழிடப் பட்டிருந்தன.(13)
ஒன்றுக்கொன்று நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட படிகளையுடைய நெடிய ஏணிகள் சார்த்தப்பட்ட உயர்ந்த மாடங்களுடைய இல்லங்களும், சுற்றுத்திண்ணைகளையும், பல கட்டுக்களையும், நீண்ட இடைகழிகளையும் (நடவை, ரேழி என இப்போது சொல்லப்படுகிறது) உடையதாக வீடுகள் இருந்தன. அவை முகில்கள் தவழுமளவுக்கு உயரமான மாடங்களும், அவற்றில் தென்றல் வருவதற்காகக் காலதர்கள் (ஜன்னல்கள்) உடையனவாகவும் புகார் நகரத்து வீடுகள் இருந்துள்ளன.(14) கதவுகளில் புலி உருவங்கள் பொறிக்கப்பட்ட செல்வம் தங்கும் மதில்களுடைய அட்டிற்சாலைகளும் இருந்துள்ளன.(15)
மாடங்கள் உயரமாக இருந்ததோடு விசாலமாகவும் இருந்துள்ளன. மேல்நிலை மாடத்தில் மகளிர் பந்து விளையாடிய செய்தி இதைப் புலப்படுத்துகிறது.(16) பொதுவாக நகரங்களில் செல்வம் மிகுந்தவர்களின் வீடுகள் விண்ணுயர்ந்த மாடங்களைக் கொண்டு மதில்கள் சூழப்பட்டனவாக இருந்துள்ளன.(17) மாடமோங்கிய மல்லன் மூதூர் என்கிறது நெடுநல்வாடை.(18)
மதுரை நகரம் தேவர்களின் விண்ணுலகிற்குச் செல்லும்படி கற்களால் கட்டப்பட்ட உயர்ந்த மதிலினைக் கொண்டிருந்தது. அது கோட்டை மதிலாகும். அதன் நெடிய கதவுகளின் நிலையில் கொற்றவை உருவம் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு நெய்யிட்டதாலும், விளக்கு இட்டதாலும் கருப்பு நிறமாகிப் போன கதவுகளும் முகில்கள் உலவும் மலைபோன்று உயர்ந்த மாடங்களையும் உடையதாக இருந்துள்ளது.(19)
3.அரண்மனைகள்
குடிமக்கள் அவரவர் தகுதிக்கேற்பக் குடிசைகள்,எளிய வீடுகள், மாட மாளிகைகளில் வாழ்ந்ததைப் போல அரசர்களின் தகுதிக்கேற்ப அவர்களது அரண்மனைகள் சிறப்புற இருந்துள்ளன.அரண்மனைகளைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, முல்லைப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் கிடைக்கின்றன.
நல்லியக்கோடனுடைய ஊரான ஆமூர் அரிய காவலையும், அகன்ற வீடுகளையும், அகழியையும் உடையதாக இருந்தது. அவ்வரசனின் அரண்மனை மேருமலை கண்ணைத் திறந்து பார்த்ததைப் போன்ற பெரிய வாயிலை உடையதாக இருந்தது.(20)
முல்லைப்பாட்டில் கூறப்படும் அரண்மனை தனக்குரிய இடமெல்லாம் பொன்னாலும், மணியாலும் சிறப்புப் பெற்ற உயர்ந்த ஏழடுக்கு மாளிகை. அதில் மழை பொழியும் போது திரண்ட மழைநீர் வாயிலில் அருவியாக விழுந்து இனிய ஓசையை எழுப்பியது.(21)
நெடுநல்வாடையில் அரண்மனை பற்றிய செய்திகள் சிறப்பாக உள்ளன. நெடுநிலை மாடத்தின் கதவுகள் இரும்பு ஆணிகளையும், பட்டங்களையும் கொண்டு பிணித்து அதற்கு சிவப்பு நிற அரக்கைக் கொண்டு நிறம் சேர்க்கப் பட்டிருந்தது. இரண்டு மரங்களைச் சேர்த்துச் செய்யப் பட்ட கதவுகள் என்பது தெரியாதபடி ஒரே மரம் என்பதுபோலக் கைவினைத் திறத்தால் அமைத்திருந்தனர். குவளைமலர் உருவமும், புதுமையான கைப்பிடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.
உத்தரத்தில் நடுவில் திருமகள் உருவமும், இருபுறமும் செங்கழுநீர்ப் பூக்களும், நீராட்டும் இரண்டு யானைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. இந்த அமைப்பு இப்போது பல கோயில்களில் உள்ளதைக் காண்கிறோம்.
அரண்மனை வாயிலானது, வெற்றிக் கொடியை உயர்த்தியபடியே யானையின் மீது அமர்ந்து கொண்டு உள்ளே புகுமளவுக்கு உயரமாகவும், மலையின் நடுவே வெளியாகக் குடைந்து திறந்தது போன்ற கோபுர வாயிலாகவும் இருந்தது.
மனைகளோ, மலைகளைப் போன்று உயரமாக இருந்தன. அதன் சுவர்கள் வெள்ளியைப் போன்ற சுதை பூசப்பட்டிருந்தன. தூண்கள் நீலமணியைப் போலக் கருமையாகத் திரண்டிருந்தன. செம்பினால் செய்யப் பட்டது போன்ற நெடிய சுவர்களில் அழகிய பல பூக்களையுடைய ஒப்பற்ற பூங்கொடி ஓவியங்கள் விளங்கின.(22)
4.கலங்கரை விளக்கம்
பண்டைத் தமிழர் கடல்கடந்து வணிகம் செய்வதிலும், மீன்பிடி தொழிலிலும், முத்துக் குளித்தலிலும் சிறந்து விளங்கியவர்கள். கடலில் தொழில் செய்வோர்க்குக் கரை திரும்ப உறுதுணையாக இருப்பது கலங்கரை விளக்கம்.
பண்டைத் தமிழகத்திலும் மிக உயர்ந்த கலங்கரை விளக்கங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. வானம் கீழே விழாதபடி முட்டுக் காலாக ஊன்றி வைத்த ஒரு பற்றுக்கோலைப் போல, விண்ணைத் தூண்டும்படி உயர்ந்திருந்தது. அதில் ஏணி சார்த்தியிருந்தது. அதன் உச்சிப்பகுதி ஏறுவதற்கு அரியதாக இருந்தது. அதன் கூரை ஓலைக் கற்றைகளால் வேயப்படாமல் சுண்ணச் சாந்திட்டதாக இருந்த மாடத்து உச்சியில் விளக்கு ஏற்றி வைக்கப் பட்டிருந்தது என்ற செய்தி பெரும்பாணாற்றுப்படையில் கிடைக்கிறது.(23)கலங்கரை விளக்கம் வாழ்மனை அல்ல என்றாலும் பண்டைத் தமிழர் கட்டடக் கலை நுட்பத்தை எடுத்துரைக்க இங்கு கூறப்பட்டது.
5. பாசறைகள்
போருக்குச் செல்லும் மன்னர்களும், படையினரும் போர்க்களத்தே பாசறை அமைத்துத் தங்குவது வழக்கம். அப்படித் தங்கும் பாசறைகள் எப்படியிருந்தன என்பதை முல்லைப்பாட்டு விளக்கமாகக் கூறுகிறது.
கடல் போல் பரந்து கிடக்கும் போர்க்களப் பாசறையில் முள் வேலியாகிய மதில் அமைக்கப் பட்டு, தழைகளால் வேயப்பட்ட கூரையுடன் பாசறைகளிருந்தன.(24)
மறவர் அரண்
படை மறவர்களின் பாசறை இருக்கைகளில் வலிய வில்லை ஊன்றி, அவற்றின்மேல் தூணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. கூடமாகக் கால்களை நட்டுக் கயிற்றாலே வலித்துக் கட்டின இருப்பிடத்தில் குந்தக் கோல்களை ஊன்றி ஓலை அல்லது இலைகளாலான கிடுகுகளை நிரல்படப் பிணைத்து அந்த இருக்கைகள் அமைக்கப்பட்டன.(25)
அரசனின் தனி இருக்கை
அரசனுக்கென வசதியானதும், பாதுகாப்பு மிக்கதுமான தனி இருக்கை அமைக்கப் பட்டிருந்தது. நெடிய குத்துக் கோலுடன் பல நிறங்களைக் கொண்ட திரையை வளைத்து அரசனின் பாசறை அமைக்கப் பட்டிருந்தது. இன்றும் பல நிறங்களைக் கொண்ட துணிகளால் கூடாரங்களும், தற்காலிகப் பந்தல்களும் அமைப்பதை நேரில் காண்கிறோம், சங்க காலத்திலேயே இவ்வழக்கம் இருந்துள்ளதை முல்லைப்பாட்டு நமக்குத் தெரிவிக்கிறது.
அரசனின் பாசறை இரண்டு அறைகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. காவல் மற்றும் ஆலோசனைக்கு முன் அறையும், துயில் கொள்ளும் படுக்கை அறை ஒன்றுமாக அந்த இரு அறைகள் இருந்தன,(26)
6. கால்கோள் விழா
இல்லமோ, அலுவலகமோ, தொழிற்சாலையோ எதுவாயினும் ஒரு கட்டடம் கட்டத் தொடங்கும் போது அதற்கு ஒரு நல்ல நாள் பார்த்துக் கால்கோள் செய்வது நம் நாட்டில் இன்றும் நடைமுறையிலுள்ள ஒரு மரபு ஆகும். சங்க காலத்திலும் நாள், நேரம், பார்த்துக் கால்கோள் செய்யும் வழக்கமிருந்ததை நெடுநல்வாடை தெரிவிக்கிறது.
சித்திரைத் திங்களில் பத்தாம் நாள் தொடங்கி இருபதாம் நாள் முடிய உள்ள நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் பகல் 15 நாழிகையளவில் ஞாயிற்று மண்டலம் நிலத்தின் நடுவண் பகுதியில் இயங்கும். இதை அறிய இரண்டு கோல்களை நிலத்தில் நட்டு வைப்பர். இக்கோல்களின் நிழல் வடக்கிலோ, தெற்கிலோ சாயாமல் அக்கோல்களிலேயே 15 நாழிகையில் அடங்கி நிற்கும். அந்த நாளில் அந்த நேரத்தை ஆய்ந்தறிந்து அவ்வேளையில் அரசர்களின் அரண்மனை கட்டுவதற்கான திருமுளைச் சாந்து என்னும் தொடக்கவிழாச் சடங்கினைச் செய்வர்.(27)

சங்ககாலத் தமிழர்கள் அவரவர் வாழும் நிலங்கள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கேற்ப இல்லங்கள் அமைத்து வாழ்ந்திருக்கின்றனர், ஆனால் அவை அவர்களுக்கு நிறைவளிக்கும் வகையில் இருந்ததாகவே கருத வைக்கும் வகையில் பத்துப்பாட்டு இலக்கியங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகள் உள்ளன.

அடிக்குறிப்புகள்: 1. குறிஞ்சிப்பாட்டு, அடி - 153.
2. சிலப்பதிகாரம், காடுகாண்காதை 64-66.
3. மதுரைக்காஞ்சி - 310.
4. சிறுபாணாற்றுப்படை, 173 - 174.
5. பெரும்பாணாற்றுப்படை, 122 - 127.
6. மேலது, 263 - 267.
7. மேலது, 243 - 247.
8, மேலது, 225.
9. மேலது, 351 - 355.
10. மேலது, 147 - 154.
11. பட்டினப்பாலை, 78 - 83,
12. பெரும்பாணாற்றுப்படை, 184 - 191. 13. நெடுநல்வாடை, 60 - 63.
14. பட்டினப்பாலை, 142 - 145, 151.
15. மேலது, 40 - 43.
16. பெரும்பாணாற்றுப்படை, 327- 333.
17. மேலது, 369
18. நெடுநல்வாடை, 29.
19. மதுரைக்காஞ்சி, 352-355.
20.சிறுபாணாற்றுப்படை, 187-188, 205-206.
21. முல்லைப்பாட்டு, 86-88.
22.நெடுநல்வாடை, 80-88, 108-114.
23. பெரும்பாணாற்றுப்படை, 346-350.
24. முல்லைப்பாட்டு, 27-29.
25. மேலது, 39-42.
26.மேலது, 43-44, 64.
27.நெடுநல்வாடை, 73-78.